நம் வாழ்க்கை நமக்கு போதும்

Image
  • அடுத்தவங்க கவலை நமக்கெதுக்கு?

மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதுபோல் வாழ்க்கை நமக்கு அமையவில்லையே என்று கவலைப்படுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற உண்மை நிறைய மனிதர்களுக்குப் புரிவதில்லை.

ஏனென்றால், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர், ஆசிரியர் போன்று சொகுசு வேலை கிடைத்தால் நல்லது என்று நினைக்கிறார். ஆசிரியர் வேலை செய்பவர் ஐ.டி. வேலையில் வெளிநாட்டுக்குச் செல்பவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார். குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள் ஆசிரியர் வேலை கிடைத்தால் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

அதேபோல் வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் ஜாலியாக இருப்பதாக நினைக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்களோ, வேலைக்குச் செல்லும் பெண்கள் ரொம்பவே சுதந்திரமாக செலவழிப்பதாக நினைக்கிறார்கள்.

சென்னை சிட்டிக்குள் இருப்பவர்கள் புறநகரில் ஒரு வீடு வேண்டும் என நினைக்கிறார்கள். புறநகரில் வாழ்பவர்கள் சென்னைக்குள் வீடு அமைந்தால் சுகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

இப்படி தங்கள் வாழ்க்கையை வாழாமல் மற்றவர்கள் வாழ்க்கையைப் பார்த்து, அப்படி கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஒரு போதும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை அனுபவிக்கும் மனநிலையே முக்கியம். எத்தனை பெரிய பணக்காரர் என்றாலும் அவராலும் மூன்று வேளை மட்டுமே உணவு சாப்பிட முடியும். ஒரு கட்டிலில் தான் படுத்து தூங்க முடியும். எனவே நமக்குக் கிடைத்திருப்பதை மனதார ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே ஒருவரை செல்வந்தராக மாற்றும்.

எனவே வாழ்க்கை சாராசரியாக இருந்தால் அதுவே மிகப்பெரும் வரம் என்பதை உணர்ந்துகொள்வோம். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என கிடைத்திருக்கும் எல்லோரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே.

ஏனென்றால், உணவின் ருசி என்பது நாக்கு வரை மட்டுமே. அதனை தாண்டிவிட்டால், எந்த உணவுக்கும் ருசி கிடையாது. பிரியாணியாக இருந்தாலும் பழைய சோறாக இருந்தாலும் தொண்டையைத் தாண்டிவிட்டால் ஒன்று என்பதை புரிந்துகொள்வோம்.

ஆகவே வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர் கொள்ளுங்கள். எல்லாம் வசப்படும்!