நாம சரியா இருந்தா போதும்..!

Image

நேர்பட வாழு

யாரும் டிராஃபிக் ரூல்ஸ் சரியா கடைப்பிடிக்கிறது இல்லை, அதனால் நானும் கண்டுக்கிறதில்லை என்கிறார் ஒருவர். எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள், நான் மட்டும் வாங்காவிட்டால் என்ன மாறிவிடப் போகிறது என்று சமாதானம் சொல்கிறார் ஒருவர். மது குடிப்பது எல்லாம் இப்போது தப்பே இல்லை என்று தன்னுடைய குடிப் பழக்கத்துக்கு நியாயம் கற்பிக்கிறார் ஒருவர்.

தனிமனித ஒழுக்கமே, இன்றைய சமுதாயத்தின் அடிப்படை தேவை. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் திருத்திக்கொள்வதே வளமான எதிர்காலத்தை உருவாக்கும்’ என்பார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ். உண்மைதான். தனிமனித ஒழுக்கம் இல்லாத மனிதர்களால்தான்  நாட்டில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களால் மனிதகுலம் மட்டுமின்றி மற்ற உயிரினங்களும் இயற்கையும் ஆபத்தைச் சந்திக்கின்றன.

மது மற்றும் புகைப்பழக்கம் இன்று சகஜமாகிவிட்டது. இவற்றை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி, அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவதுதான் பரிதாபம். ஆம்,  புகைப்பவரைவிட அருகில் இருக்கும் குடும்பத்தினரும், நண்பர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

புகையைவிட கொடூரமானது மது. ஆம், மது குடிக்கும் மனிதர்களால் நாளுக்குநாள் எண்ணற்ற பிரச்னைகள் வெடிக்கின்றன. பாலியல் வன்முறை, குடும்பத் தகராறு, சாலை விதிமீறல், வன்முறைகள் பெருகிக்கொண்டே செல்கின்றன. வீட்டில், பார்களில் குடிப்பது மட்டுமின்றி காட்டுக்குள் போய் குடிப்பதை சாகசம் போல் கருதி நுழைகின்றனர். வனப் பகுதிகளில் சரக்குகளை குடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே உடைப்பதாலும், தூக்கிவீசுவதாலும் காட்டில் வாழும் பல உயிர்கள் ஆபத்தில் சிக்கி இறக்கின்றன.

பான்பராக் பாக்குகளை சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் பயன்படுத்துவது சஜகமாகிவிட்டது. வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக தொடங்கும் இந்த பழக்கம் நாட்பட்ட போதையாக வளர்கிறது. பாக்குகளை கண்ட இடங்களில் மென்று துப்புவதால் சுவர்களில் கறை ஏற்படுவதுடன், மற்றவர்களுக்கு வியாதிகளும் உருவாகின்றன.

புகை, போதையைப் போன்று பிளாஸ்டிக்கின் பயன்பாடும் இயற்கைக்கு எதிரானது. அரசாங்கம் இதற்கு தடைவிதித்துள்ளபோதிலும், மக்களே பிளாஸ்டிக்கை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இதனால், அதிக அளவில் மாசு ஏற்படுகிறது. பூமியில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள், மக்கிவிடாமல் தண்ணீர் செல்லும் வழித்தடங்களை தடுத்துவிடுகிறது. அதனால் குடிநீருக்கும் பஞ்சம் உருவாகிறது. அதேபோன்று தங்கள் வீட்டைவிட்டு குப்பை வெளியே போனால் போதும், என்ற எண்ணத்தில், குப்பைத் தொட்டியில் போடாமல் தெருவில் வீசிச்செல்லும் மனிதர்கள் ஏராளம். அதேபோன்று தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தாமல் வீட்டுக்குப் பின்புறமும் மாடியிலும் சேகரித்துவைத்து கொசுக்கள் உருவாகவும் வழிவகுக்கின்றனர்.

தனிமனித ஒழுக்கத்தில் முக்கியமானது, சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுதல். ஒருவர் தவறான வழியில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் அவருக்கு மட்டுமின்றி வேறு ஒருவருக்கும் உயிர் போகும் ஆபத்து இருக்கிறது. ஒவ்வொரு சாலையிலும் என்ன வேகத்தில் டூ வீலர், கார் போன்றவற்றை ஓட்ட வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொரு தனி நபரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இத்தகைய ஒழுக்கங்களை பிறரிடம் எதிர்பார்க்கும் முன், நாம் அப்படி நடக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும். தனி மனிதன் ஒழுக்கமாக இருந்தால் வீடு நன்றாக இருக்கும்; வீடு நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். நாடு நன்றாக இருந்தால் ஒட்டுமொத்த உயிர்களும், இயற்கையும் சுபிட்சமாக இருக்கும்.

ஆகவே, முதலில் நாமும் நம்மை சேர்ந்தவர்களும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கத் தொடங்குவோம். அது போதும். உலகைப் பற்றிய கவலை மனிதருக்குத் தேவையில்லை.

Leave a Comment