டாக்டர் எடப்பாடிக்கு டாக்டர் சுப்பிரமணி பதிலடி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் எப்படியாவது ஸ்கோர் செய்துவிட வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி ரொம்பவே சீரியஸ் முயற்சிகள் செய்துவருகிறார். அதில் ஒரு பகுதியாக மருந்து குறித்து அவர் வெளியிட்ட மருந்து பெயர் பஞ்சாயத்தாக மாறிவருகிறது.
அரசு தவறு செய்திருக்கிறது, போதிய மருந்து இல்லை என்று சொன்னாலே போதும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு மெத்தப்படித்த மருத்துவர் போன்று மருந்து பேரைச் சொல்கிறேன் என்று தப்புத்தப்பாகச் சொல்ல அதை அமைச்சர் சுப்பிரமணி கிண்டல் செய்து அறிக்கை விட்டிருக்கிறார்.
‘’பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol) மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவ நிபுணர் எடப்பாடி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் அந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும் என்று மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.
மருத்துவம் பற்றி பேச வேண்டும் என்றார் மருத்துவர் பேசினாலே போதும். இவர்கள் எதற்கு இடையில் மருத்துவம் பற்றி பேசுகிறார்கள் என்பது தான் கேள்வி.
இந்த நிலையில் தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தபெட்டமைன் சிக்கியிருப்பதற்கும் பொங்கி எழுந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர், ‘’இந்த விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புரையோடிப் போயுள்ளதை மெய்ப்பிக்கின்றன. கள்ளச்சாராயம், கஞ்சா, சிந்தெடிக் போதைப்பொருட்கள்- இவை தான் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள்! இனியும் இதே மெத்தனத்தில் இந்த விடியா அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் அவலத்திலே போய் நின்றுவிடும். போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் திரு. ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!’’ என்று கேட்டிருக்கிறார்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…