• Home
  • அரசியல்
  • உதயநிதிக்குப் போட்டி எடப்பாடி பழனிசாமி இல்லையா..?

உதயநிதிக்குப் போட்டி எடப்பாடி பழனிசாமி இல்லையா..?

Image

விஜய்யை முன்னிறுத்தும் பா.ஜ.க. திட்டம்

உதயநிதியை துணை முதல்வராக்குவதன் மூலம் தி.மு.க.வின் தேர்தல் வியூகத்திற்கு உதயநிதியே தலைமை ஏற்பது உறுதியாகியிருக்கிறது. வரும் 2026 தேர்தல் உதயநிதிக்கும் விஜய்க்குமான போட்டியாக அமையவேண்டும் என்று பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஸ்டாலின் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க. இரண்டாவது கட்சியாக வளர வேண்டும் என்றால் அ.தி.மு.க. அழிய வேண்டும். அப்படியென்றால் அ.தி.மு.க. ஒன்றிணையக் கூடாது என்பதற்காகவே பா.ஜ.க. திட்டமிடுகிறது. இது தி.மு.க.வுக்கு லாபகரமானது என்பதால் பா.ஜ.க.வின் திட்டத்துக்கு ஸ்டாலின் உடன்படுகிறார். சமீபத்திய பா.ஜ.க. நெருக்கம் அதையே காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு குரல் கொடுக்கும் அபிமானிகள், ‘’கடந்த 2018-ல் இருந்து தற்போது வரை திமுக சித்தாந்த ரீதியில் இந்துத்துவாக்கும் திராவிடத்துக்குமானதாக முன்னெடுத்துக் கொண்டு வந்தது அதனால் பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் அதிமுகவின் வெற்றி தோல்வி பாஜகவை மையமாக கொண்டு அமைந்தது. * தற்போதைய அமைச்சரவை மாற்றம் சித்தாந்த அடிப்படையில் திமுக VS பாஜக என்று ஒரு புறமும் மறுபுறம் தனிப்பட்ட ஆளுமைகளாக உதயநிதி VS விஜய் என கட்டமைக்க முயற்சிக்கிறது.

அதிலும் விஜய் பெறுகிற வாக்குகளில் சுமார் 65% அதிமுக வாக்குகளே. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் ஒரு ஆளுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுக என்கிற கட்சியின் பலத்தையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா மற்றும் இரட்டை இலை சின்னம் இவற்றை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆனால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது எந்த சேதாரமும் இல்லாமல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா அம்மா வளர்த்த அதிமுக ஒற்றுமையோடு வலிமையோடு ஒன்றுபட்ட அதிமுகவாக பரிணமிக்க வேண்டும் என்பதுதான். * திமுக இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலமாக 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு தன்னை முழுமையாக முன்னிறுத்திக் கொண்டுள்ளது. இன்றைய சூழலில் ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தாலும் கூட கடுமையான திட்டமிடலும், உழைப்பும், பிரச்சார யுக்திகளும், கூட்டணி பலம் அமைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். வலிமையான ஒன்றுபட்ட அதிமுக கட்டமைக்கப்பட்டால் மட்டுமே மற்றவர்கள் அதிமுகவின் கூட்டணிக்கு வர விரும்புவார்கள்.

மத்திய அரசாங்கத்தால் எந்த இடையூறும் இன்றி பிரதமர் அளவில் பேச்சுவார்த்தை நடத்தி தன்னை தற்காத்துக் கொண்டது திமுக என்பது ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய டெல்லி பயணம் உணர்த்துகிறது. ஆனால் தங்களை தற்காத்துக் கொள்ள திமுகவோடு மறைமுக ஒப்பந்த அரசியலை மேற்கொண்ட எடப்பாடியும் அவரது முன்னாள் அமைச்சர்களும் இன்றைக்கு திமுக வளையத்துக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதிமுகவும் எழுச்சி இன்றி காணப்படுகிறது.

ஒருவேளை எடப்பாடி விஜய் போன்றவர்களை கூட்டணியில் சேர்த்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால் அது பலன் தராது. அது அதிமுகவுக்கும், திமுகவுகுமான போட்டியாக இருக்காது. அது விஜய்க்கும், திமுகவுக்குமான போட்டியாக தான் அமையும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட அதிமுக ஆயிரம் ஆண்டுகள் வலிமையோடு விளங்க வேண்டும், அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னது போல 100 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக சட்டமன்றத்தில் விளங்க வேண்டும். 75 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆளுங்கட்சியாக பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால் பொன்விழா கண்ட அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளால் அதிமுக தொண்டர்களும், விசுவாசிகளும், வாக்காளர்களும், வேதனையுற்று நிற்கிறார்கள். * மிக மிக சாதாரண அரசியல் புரிதல் உள்ளவர்கள் கூட அதிமுக ஒன்று பட வேண்டும் என்று கருதுகிற போது நான்காண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி இதை உணராமல் இருப்பது வேதனை’’ என்று வேதனைப்பட்டிருக்கிறார் கே.சி.பழனிசாமி.

Leave a Comment