இறந்தவருக்கு படையல் இதற்காகவா..?

Image

அச்சம் தவிர்

மரங்களுக்கு இடையே உற்சாகமாக நடை போட்டுக்கொண்டிருந்த ஞானகுருவை தடுத்து நிறுத்தினார் மகேந்திரன்.

’’என்னுடைய மாமனார் இறந்துவிட்டார். அதற்கு 30ம் நாள் காரியம் செய்வதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்கிறார் கேட்கிறார். அதோடு பொன், மாடு தானம் தர வேண்டுமாம். இவற்றை செய்யவில்லை என்றால் என் மாமனார் நரகத்தில் துடிப்பாராம்… அவரது சாபத்தினால் எங்களுக்கும் நல்லது நடக்காதாம்… ரொம்பவே பயமுறுத்துகிறார்…  நான் என்ன செய்வது”  என்று கேட்டார்.

’’சொர்க்கம், நரகம் என்பதை நம்புகிறாயா..?’’

’’உங்களுடன் பேசும்போது இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால், தனியே அமர்ந்து யோசிக்கும்போது, பயமாக இருக்கிறது. பணத்துக்குப் பயந்து, இந்த காரியம் செய்யவில்லை என்றால் ஏதேனும் தடங்கல் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட, இவற்றை எல்லாம் கடைபிடித்த நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா என்ற கேள்வியும் எழுகிறது…’’ என்றார்.

’’முன்னோர்கள் என்றாலே முட்டாளாக அல்லது அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் பழக்கம் நம் நாட்டில் மட்டும் இருக்கிறது என்று நினைக்காதே, எல்லா நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கவே செய்கிறது. ஆனால், இதன் உண்மையான அர்த்தம் வேறு’’  என்றார் ஞானகுரு.

’’இதில் என்ன அர்த்தம் ஒளிந்திருக்கிறது..?’’ ஆர்வமாக கேட்டார் மகேந்திரன்.

’’இறந்த மனிதருக்கு 16ம் நாள் அல்லது 30வது நாள் காரியம் முடியும் வரை அந்த வீட்டில் உறவுகள் தங்கியிருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான அர்த்தம்.  ஏனென்றால், மனிதனின் மிகப்பெரிய அச்சமே மரணம் மட்டும் தான். அதுவும், நெருங்கிய உறவினர் மரணம் அடையும்போது இந்த அச்சம் அதிர்ச்சியாக இருக்கும். குறிப்பாக, வீட்டில் யாரேனும்  எதிர்பாராத நேரத்தில்  மரணம் அடையும்போது, மிக நெருங்கிய உறவுகள் பயந்துவிடுவார்கள்.

அந்த பயத்தில் இருந்து உறவுகள் விடுபடவே சில நாட்கள் ஆகிவிடும். அதன்பிறகு, செத்துப்போன நபர் இல்லாமல் வாழ முடியுமா என்று எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் உருவாகும். திடீரென இப்படி நம்மை விட்டுப் போய்விட்டாரே என்ற கோபம் உருவாகும். அவர் மீதான கோபம் சமூகத்தின் மீது திரும்பும். இந்த பயம், அச்சம், கோபத்தை எல்லாம் தணிப்பதற்கும் ஆறுதல் சொல்வதற்கும் உறவுகள், நண்பர்கள் பக்கத்தில் சில நாட்களாவது இருப்பது நல்லது. அப்படி யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால், அவர்கள் மன அழுத்தம் அல்லது மனப்பிறழ்வுக்கு ஆளாவதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த காரணத்தால் தான், எல்லா நாடுகளிலும் மரணத்தைக் கொண்டாட்டமாகப் பார்க்கிறார்கள். மரணம் அடைந்தவர் உடலை நீண்ட நாட்கள் பாதுகாத்து வைப்பது,   குடித்துவிட்டு ஆட்டம் போடுவது, பாட்டுப் பாடுவது, இறந்தவர் வாழ்க்கையை கதையாகப் பேசுவது, இறந்தவர் பெயரில் ஏதேனும் சடங்குகள் செய்வது போன்ற எல்லாமே, இறந்தவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தரும் முயற்சிகள்தான்.

ஒரு மரணம் என்பது குடும்பத்தை சுனாமியைப் போன்று தாக்கி புரட்டிப் போட்டுவிடும். அந்த சோக சுனாமியின் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து, மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்துகொள்ளும் இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்பும் வரை, ஆதரவு தர வேண்டும். அதற்காகவே 16 நாடகள் அல்லது 30 நாட்கள் இறந்தவர் வீட்டில் தங்கியிருந்து, காரியத்தை முடித்துவிட்டு கிளம்ப வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.

எந்த நோக்கத்திற்காக இந்த நாட்கள் உருவாக்கப்பட்டதோ, அவற்றை மறந்துவிட்டு, குறிப்பிட்ட நாளில் மட்டும் எட்டிப் பார்த்து படையல் சாப்பாட்டை சாப்பிடும் காலமாகிவிட்டது. எனவே, இப்போது நீ எந்த காரியமும் செய்ய வேண்டாம். பணமும் செலவழிக்க வேண்டாம். மரணம் அடைந்தவரின் உறவுகளுடன் கொஞ்ச நாளைக்கு தினமும் 10 நிமிடங்கள் நேரில் அல்லது போனில் பேசு… அதுதான் நீ அவர்களுக்குச் செய்யும் நிஜமான இறுதி அஞ்சலி’’  என்றார் ஞானகுரு.

தெளிவாகியிருந்தார் மகேந்திரன்.

Leave a Comment