நீதிபதிக்கு எதிராகப் போர்க்கோலம்
மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் ஆஜரான வழக்கில், நீதிபதி ஆர். சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்.பியுமான வில்சனை குரல் உயர்த்திப் பேசி கண்டித்திருக்கும் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதற்காக வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை நீதிபதியிடம், “நீதிபதி சுப்பிரமணியன் எப்போதும் வழக்கறிஞர்களை வரம்பு மீறி கீழ்த்தரமாக பேசுகிறார்” என்று புகார் அளித்திருக்கிறார்கள்.
முதலில் இது என்ன வழக்கு?
இது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிரான வழக்கு. முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில், விசாரித்த தனி நீதிபதி விக்டோரிய கவுரி, இருதரப்பு வாதங்களை கேட்டு, மனுதாரருக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். பின்னர் அதே portfolio-க்கு வந்த நீதிபதி ஆர்.என். மஞ்சுளா, வழக்கை விசாரித்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதே போல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் பி டி ஆஷா மற்றும் பரதசக்ரவர்த்தி ஆகியோர் நேர்மறையான உத்தரவு பிறப்பித்துள்ளது வேறு விஷயம். இந்த நிலையில்தான், தனி நீதிபதி விக்டோரிய கவுரியின் உத்தரவை எதிர்த்து TNPSC தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஆர் சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. உடன் இருந்த நீதிபதி யார் என்றால், ஏற்கனவே உத்தரவு வழங்கிய அதே தனி நீதிபதி விக்டோரியா கவுரி.
இதுபோல வழக்குகள் வரும்போது சம்பந்தப்பட்ட தனி நீதிபதி அவராகவே வழக்கிலிருந்து விலகிவிடுவார்கள். தனி நீதிபதி ஸ்தானத்திலிருந்து மனுதாரருக்கு சாதகமான உத்தரவு பிறப்பித்து விட்டு அதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இரு அமர்வில் இருக்கும் போது விசாரிக்க மாட்டார்கள். தானாக முன் வந்து விலகி விடுவார்கள். இதுதான் நீதி பரிபாலனத்தின் முறையான மரபு, ஆனால் நீதிபதி விக்டோரிய கவுரி விலகவில்லை. இதைத்தான் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் சுட்டிக் காட்டினார்.
ஆனால் நீதிபதி ஆர்.சுப்ரமணியன், தவறாக புரிந்துகொண்டு, மூத்த வழக்கறிஞர் வில்சனை மிகக் கடுமையான தடித்த வார்த்தைகளை கொண்டு காட்டமாக பேசியிருக்கிறார். வழக்கு விசாரணைகளின் போது Open கோர்ட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என பலமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. “வழக்கறிஞர்களை நீதிபதிகளுக்கு சரிசரிமமாக நடத்தவேண்டும்” என தீர்ப்புகளை வழங்கி உள்ளது. நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நாணயத்தில் இரு பக்கங்கள் என்றும் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளது.
இதே நீதிபதி ஆர். சுப்பிரமணியன், அரசு அதிகாரிகளை, “ராஸ்கல், பாஸ்டர்ட்” என்று திட்டுவதும் வழக்கறிஞர்களை, “வாடா போடா” என்று அழைப்பதும் நீதித்துறை சார்ந்த அனைவருக்குமே தெரியும் இதை எதிர்த்து கண்டித்து இன்று தமிழ்நாடு மற்றும் புச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
ஒரு மூத்த வழக்கறிஞருக்கு இந்த நிலைமை என்றால் இளைய வழக்கறிஞர்களின் நிலை என்னவாகும் என்பது தான் கேள்வியாக மாறியிருக்கிறது.