ஏழை மக்களுக்கு நல்ல பட்ஜெட்டா இது..?

Image

கொண்டாடும் நடுத்தரவர்க்கம்

மத்திய பாஜக 3.0 ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 8வது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு நன்மை தரும் பட்ஜெட் என்று சொல்லப்படும் நேரத்தில் ஏழைகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்ற புலம்பல் கேட்கிறது.

பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது. தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும். வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும்போது கூடுதலாக ரூ.75,000 கழிவும் கிடைக்கும். 

லித்தியம் பேட்டரிகளுக்கு வரி குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு செய்திருக்கிறார். இதன் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மின்சார வாகனங்கள் மற்றும் செல்போன்களுக்கான லித்தியம் பேட்டரிகள் உற்பத்திக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்தியாவில் அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் 2033-க்குள் 5 அணு உலைகள் செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாடெங்கும் 100 விமான நிலையங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர வைத்துள்ளது.

இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் பீகாருக்கு எக்கச்சக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் – NIFTEM) அமைக்கப்படும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும், மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும், பீகாரில் உள்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகளை விரிவுபடுத்துவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்பது விமர்சனமாகியிருக்கிறது. அதாவது எல்லோரும் பயன்படுத்தும் கேஸ், பெட்ரோல், டீஸல் போன்றவை விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பெருவாரியான மக்கள் நன்மை அடைந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Comment