• Home
  • ஞானகுரு
  • அதிக கூட்டம் இருக்கும் கோயிலில் கடவுள் இருக்கிறாரா..?

அதிக கூட்டம் இருக்கும் கோயிலில் கடவுள் இருக்கிறாரா..?

Image

ஞானகுரு பதில்கள்

திருப்பதி, திருச்செந்தூர், பழனி போன்ற கோயில்களில் எல்லா காலகட்டத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. இது ஏனென்று ஞானகுருவிடம் கேள்வி கேட்டார் மகேந்திரன்.

பதில் சொல்லத் தொடங்கினார் ஞானகுரு. ‘’பொதுப்புத்தி மனிதருக்கு ரொம்பவே உண்டு. இத்தனை பேர் கும்பிடுகிறார்கள் என்றால், அது நிச்சயம் நல்ல கோயிலாக இருக்க வேண்டும் என்று நம்புகிறான். அதானாலே கூட்டம் கூட்டமாக இருக்கும் கோயிலில் நுழைந்து சாமியை தரிசனம் செய்தால் நினைத்தது எல்லாம் நடந்துவிடும் என்று நினைக்கிறான். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சாமி கும்பிட்டால், ஸ்பெஷல் வரப்பிரசாதம் கிடைக்கும் என்று நம்புகிறான். எப்படியென்றாலும் கடவுள் என்பது மனிதனைப் பொறுத்தவரை, ஒரு விளையாட்டு பொம்மை.’’ என்றார்.

  • கடவுள் என்பது மனிதனின் விளையாட்டு பொம்மையா?

சந்தேகமே இல்லாமல் கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய விளையாட்டு பொம்மைதான். பரிட்சையில் பாஸ் செய்வது தொடங்கி, பல் வலியை சரி செய்வது வரைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வகையில் கடவுள் தேவைப்படுகிறார். அவனால் எளிதில் செய்யமுடியாத ஒன்றை, கடவுள் முடித்துத்தருவார் என்று நம்புறான். அப்படியொரு கடவுள் இருந்தால் தன்னைவிட மேம்பட்டவராக இருப்பார் என்று எண்ணுகிறான். அதனால்தான் நான்கு கைகளும் ஆறு முகங்களும் கொண்ட கடவுளை மனிதன் படைக்கிறான். ஒரு பன்றிக்கு கடவுள் தேவைப்பட்டால், அது நிச்சயம் ஒரு பிரமாண்டமான பன்றியைத்தான் கடவுளாக வழிபடும். ஏனென்றால் அந்த குறியீடுதான் கும்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

இந்து மதத்தில் பாம்பு, காகம், மயில் தொடங்கி ஏகப்பட்ட உருவங்கள் கடவுளாக வணங்கப்படுகிறது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொல்லப்படும் இஸ்லாம் மதத்திலும் சில குறியீடுகள் இருக்கின்றன. அதனால் கடவுளை குறிப்பிடும் உருவம், குறியீடுகள் எல்லாமே மனிதன் படைத்தவையே. மனிதனை படைத்தது கடவுள் என்று வைத்துக்கொண்டாலும், பூமியில் இருக்கும் கடவுளை படைத்தது நிச்சயம் மனிதன்தான். அவனவனுக்குத் தெரிந்த வகையில் கடவுளை படைத்துவிட்டான் மனிதன்.

  • உண்மையில் கடவுள் எப்படி இருப்பார்?

கிணற்றில் வாழும் மீனுக்கு, அந்த கிணறுதான் பிரபஞ்சம். கிணறைத் தாண்டி, அதைவிட பெரிதாக வேறு ஏதேனும் இருக்குமா என்பது தெரியாது. அப்படியே கற்பனை செய்தாலும், இப்போது இருப்பதைவிட பெரிய கிணறு ஒன்றைத்தான் மீனால் கற்பனை செய்யும். அப்படித்தான் மனிதனாலும் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே சிந்திக்க முடியும்.

மனிதனின் பார்வைக்கு இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. ஆரம்பமும் முடிவும் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. இத்தனை பெரிய பிரபஞ்சம் எப்படி சாத்தியமானது? எதுவுமே இல்லாத அண்டம் என்பதே அதிசயம். இத்தனை பெரிய பிரபஞ்சத்தை படைத்தவன், இதைவிட பெரியவனாகத்தானே இருக்கமுடியும்? கடவுளுக்கு உருவம் இருக்குமோ இல்லையோ, நிச்சயம் மனிதன் வரைந்தும் வடித்தும் வைத்திருக்கும் கடவுளுக்குள் உண்மையான கடவுள் சிக்கமாட்டார்.

  • கடவுள் பிரமாண்டமாக இருப்பார் என்று எப்படி சொல்கிறீர்கள்? கடவுள் அணுவுக்குள் இருக்கிறார் என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்களே?

அணுதான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம். ஆனால் அணுவை உடைத்துப் பார்த்தால் ஒளிந்திருக்கும் மின்சாரத்தையும் ஆயுதத்தையும் மட்டுமே பார்க்கமுடியும். கடவுளை எப்போதும் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி கண்டுபிடிக்க முடிந்தால், அவர் பெயர் கடவுளும் அல்ல. அணுவுக்குள், பாற்கடலுக்குள், ஜெருசலேமுக்குள், மெக்கா, மதீனாவுக்குள் கடவுளை கண்டுபிடித்துவிட முடியாது.

  • அப்படியென்றால் நிஜ கடவுளை கண்டுபிடிக்கவே முடியாதா?

இந்த உடலாலும், இந்த கண்களாலும் கடவுளை காண நினைக்கிறான் மனிதன். கடவுள் இந்த உடலைத் தாண்டியவர். அதனால் பக்தி அல்லது தியானத்தால் கடவுளை கண்டறியமுடியும் என்று எண்ணுவது முட்டாள்தனம். கல்லாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கடவுளை பூதவுடலால் தேடும் எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். எண்ணங்களால், சிந்தனையால், ஞானத்தால் வடிவமைக்கப்பட்ட கடவுளை, உன்னுடைய மனதால் தேடவேண்டும். அப்போது கடவுள் தட்டுப்படலாம், தட்டுப்படாமலும் போகலாம்.

  • சாதாரண மனிதன் கடவுளை காணவே முடியாதா?

உன்னை பெற்றவளின் அன்பைப் பார், நிச்சயம் கடவுள் தெரிவார்.

Leave a Comment