உண்மையைத் தேடிப் பாருங்கள்
’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு கேள்வியை எழுப்பினான் மகேந்திரன்.
‘’புரியவில்லையே..?” ஞானகுரு குறும்பாகக் கேட்டார்.
‘’அதாவது எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இதயம் ஒன்று சொல்கிறது, மூளை வேறு ஒன்றை சொல்கிறது. நான் எதை கேட்பது என்று புரியவே இல்லை…’’
‘’சரி, அதேபோன்று ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும்போது உன்னுடைய நுரையீரல் என்ன சொல்கிறது, உன் சிறுநீரகம் என்ன சொல்கிறது என்பதையும் கேட்டுப் பாரேன்…’’
‘’கிண்டல் செய்யாதீர்கள் சாமி, இதயம்தானே மனதின் இருப்பிடம். அதனால்தானே நெஞ்சைத் தொட்டு சொல்கிறோம்..’’
சிரித்தபடி தொடர்ந்தார் ஞானகுரு. ‘’மகேந்திரா… மனித உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் அதனதன் பணிகளை மட்டுமே செய்கின்றன. இதயத்தின் வேலை அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதுதான். அதைத் தவிர வேறு எதுவும் அதற்குத் தெரியாது. அதனால் இதயம் என்பது மனம் அல்ல அது ஓர் உறுப்பு’’
‘’என்ன சாமி இப்படி சொல்றீங்க… மனம் என்றதுமே இயல்பாக கை நெஞ்சுக்குத்தானே போகிறது..?”
‘’சரிதான்.. திடீரென உன் இதயம் பழுதாகிவிட்டது என்று செயற்கை இதயம் வைப்பதாக நினைத்துக்கொள். உன்னிடம் இதயம் இல்லை என்பதால், அதன்பிறகு நீ சிந்திக்க மாட்டாயா..? இதயவலி ஏற்படும்போது உன்னுடைய சிந்தனைகளும் நின்றுவிடுமா? அதனால்தான் சொல்கிறேன். இதயத்துக்கு எதுவுமே தெரியாது.
உன்னை ஏதாவது ஒரு முடிவு எடுக்கச் சொல்லி தூண்டுவதும், அந்த முடிவு தவறாக அமைவதற்கு வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கை செய்து தடுப்பதும் உன்னுடைய எண்ணங்கள்தான். அந்த எண்ணங்களின் தொகுப்புதான் மனம்…’’
‘’சாமி, மனம் என்பது இதயத்தில் இல்லை என்று நீங்கள் சொல்வது ஏற்கும்படியாகவே இருக்கிறது. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று சொன்னீர்கள். எண்ணங்கள் மூளையில்தான் தொடங்குகிறது என்பதால், மூளைதான் மனம். சரிதானே..?” பள்ளி மாணவன் போன்று கேள்வி கேட்டான் மகேந்திரன்.
’’ஒரு விமானத்தை இயக்கும் பைலட் போன்று மனித உடலை இயக்கும் சூட்சும டிரைவர்தான் மூளை. உடலில் உள்ள கை, கால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற அனைத்து அவயங்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மூளை திறம்பட செய்கிறது. அதோடு, ஞாபகங்களை எல்லாம் சேமித்து வைக்கிறது. அந்த ஞாபகக் கிடங்கில் இருந்து எண்ணங்களையும் மூளையே உருவாக்குகிறது. அப்படிப்பட்ட எண்ணங்களின் தொகுப்பையே மனம் என்கிறோம்.
மூளையால் உருவாக்கப்பட்டது என்றாலும், அந்த எண்ணங்கள் தனித்து இயங்கக்கூடியவை. இதனை ஒரு திடப்பொருளாக அல்லது உடலின் அவயமாக கற்பனை செய்ய முடியாது. விபத்தில் மூளை பாதிக்கப்படும் நேரத்தில் மனமும் பாதிக்கப்படுவது நிஜம். ஆனாலும் மனநோயாளிகளின் எண்ணங்கள் வேறு ஏதோ ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் மூளையையும் மனம் என்று சுட்டிக்காட்ட முடியாது.
அதேநேரம் மனம் என்பது வளரக்கூடியது. அதாவது, சிறியவர்களைவிட முதியவர்கள் மன முதிர்ச்சியுடன் செயல்படுவதுண்டு. அதற்கு காரணம், ஞாபகங்களின் அதிகமான சேமிப்புதான். இதையே அனுபவம் என்றும் சொல்கிறோம்.
காலையில் படுக்கையில் கூடுதலாக கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லி கெஞ்சுவதும் உன் மனம்தான். இப்படி தூங்கினால், குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்லமுடியாமல் மேல் அதிகாரியிடம் திட்டு வாங்க நேரிடும் என்று உன்னை எச்சரிக்கை செய்வதும் மனம்தான்.
இந்த இரண்டில் இருந்து ஏதேனும் ஒரு முடிவை நீதான் எடுக்கவேண்டும். மேலதிகாரியிடம் ஏதேனும் பொய் சொல்லி சமாளிக்க முடியும் என்று உன்னை சமாதானப்படுத்தி தூங்க வைப்பதும் உன் மனம்தான். இன்னும் கொஞ்சநேரம் தூங்கினால் வேலை போய்விடும் என்று பயம் காட்டி உன்னை உடனே எழுப்பிவிடுவதும் உன் மனம்தான்…’’
மனம் பற்றிய தகவல்களைக் கேட்டு வியந்து நின்றான் மகேந்திரன்.