தி.மு.க.வுக்குள் புகைச்சல்
யாருமே எதிர்பார்க்காத நிலையில் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவர் மகளுடன் இருக்கும் படத்தை தி.மு.க.வில் சிலரே திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். அதோடு குவாரி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் செய்தி பரப்புகிறார்கள். ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவியின் சமீபத்தியப் பேச்சுக்கு தி.மு.க.வினர் யாருமே கண்டனம் தெரிவிக்காத நிலையில் இவர் மட்டுமே கடுமை காட்டியதே உண்மைக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து மனோ தங்கராஜ் ஆதரவாளர்கள், ‘’கன்னியாகுமரி மாவட்ட அளவிலும் சரி, திமுகவில் இருக்கும் பாஜக எதிர்ப்பு பேசுவோர் மத்தியிலும் சரி தனித்தே தெரிந்தவர், இயங்கியவர் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ். தேசிய நீரோட்டம் பரவி இருக்கக்கூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிட நீரோட்டத்தை பரவச் செய்து பாஜக எதிர்ப்பு மனநிலையை ஓர்மைப்படுத்தி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை தன் செயல்பாடுகளாலும் கருத்துகளாலும் எதிர்த்து வந்தவரும், பின்னணியால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருமான இவரது அமைச்சர் பதவி நீக்கம் என்பது ஆச்சரியத்தையும் மிகப்பெரிய சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் பாஜகவின் அழுத்தம் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் அமைச்சர் நீக்கத்தின் பின்னால் இருக்கிறதோ என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. அமைச்சர் பொறுப்பில் இருந்து மனோ தங்கராஜ் நீக்கத்துக்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அறிய முடியவில்லை. மோடி குறித்தும் கவர்னர் குறித்தும் கடுமையாக பேசியதை கட்சி மேலிடம் விரும்பவில்லை. டெல்லி அழுத்தத்தின் காரணமாகவே இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆக, இங்கு நடப்பதும் பா.ஜக. ஆட்சியே’ என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
கடைசியாக கவர்னரைக் கண்டித்து மனோ தங்கராஜ் போட்ட பதிவு இது தான், ‘’இந்திய நாட்டின் மதச்சார்பின்மை இங்கிலாந்தில் இருந்து வந்தது” என்று ஆளுநர் பேசியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இங்கிலாந்து ஒரு ஜனநாயக நாடு, ஆனால் அது மதச்சார்பற்ற நாடு கிடையாது. இருப்பினும் அங்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவமும், சம உரிமையும், மத வழிபாட்டு உரிமையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது; எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு எந்த தடையும் அங்கு இல்லை. ஆனால் இந்தியா முப்பத்தி முக்கோடி தெய்வங்களை கொண்ட நாடு. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2000-ற்கும் மேற்பட்ட தனித்துவமான மத சமூகங்கள் உள்ளன.
மதங்களுக்குள்ளேயே ஒரே மதத்தில் கூட பல உட்பிரிவுகளும், கடவுள்களும், வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் உள்ளன. இது போன்ற நடைமுறை உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இதைத்தான் இந்தியாவின் பன்முகத்தன்மை என்று குறிப்பிடுகிறோம். இச்சூழலில் ஒரு மதம் சார்ந்த அரசு அமைவது வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்ற காரணிகளால் மக்களுக்குள் பிரச்சனைகள் உருவாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் தான் மிகப்பெரிய விவாதங்களுக்கு பின் ஒருமித்த கருத்துடன் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் குறித்து தவறான கருத்துக்களை ஒரு ஆளுநரே பரப்புவது சட்டவிரோத செயலாகாதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது நியாயமா என்பதை ஸ்டாலின் தான் தெரிவிக்க வேண்டும்.