• Home
  • சர்ச்சை
  • தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நிலை இத்தனை மோசமா..?

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நிலை இத்தனை மோசமா..?

Image

திகைக்க வைக்கும் புள்ளி விபரம்

இந்தியாவிலேயே சிறந்த கல்விக் கட்டமைப்பு கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்று பெருமைப்பட்டு வரும் நிலையில், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகம் பார்த்து படிக்கும் திறன், கணிதத் திறன் தமிழகத்தில் பெரும் அளவுக்குக் குறைவாக இருக்கிறது என்று வெளியாகியிருக்கும் ஆய்வு அதிர வைக்கிறது.

இது குறித்துப் பேசும் கல்வியாளர், ‘’இந்த ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களை, தமிழ்நாட்டின் தனியார் பள்ளி மாணவர்களோடு ஒப்பிடவில்லை. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் அரசு பள்ளி மாணவர்களோடு ஒப்பிட்டு எடுக்கப்பட்ட சர்வே.

பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள அதே வகுப்பு அரசு பள்ளி மாணவர்களை விட நமது பள்ளி மாணவர்களின் திறன் குறைவாக இருக்கிறது. முக்கியமாக அடிப்படை கணிதமான கழித்தல் போன்றவற்றில் கூட நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். ஒரு பகுதியை கொடுத்து வாசிக்க சொன்னாலும் அதிலும் பின்தங்கி இருக்கிறோம். இது மிக மிக அதிர்ச்சி அளிக்கும் செயல்பாடு.

தமிழ்நாடு அரசு தன்னுடைய வருவாயில் பெரும் சதவிகிதத்தை அரசுப்பள்ளி மாணவர்களுக்காகத் தான் செலவிடுகிறது. காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், சீருடைகள் புத்தகங்கள் இலவசம் என சொல்லிக் கொண்டே போகலாம். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பட்ஜெட்டில் மிக முக்கியமான காரணியாக இருந்து வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள், உள்கட்டமைப்பு இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை என்றெல்லாம் பேசி மழுப்புகிறார்கள். ஆனால் இந்தியாவிலேயே சிறந்த அரசு பள்ளி உள்கட்டமைப்பு கொண்டது தமிழ்நாடு தான். பீகார் உத்திரபிரதேசத்தை விடவா இங்கே அரசுப்பள்ளி கட்டமைப்பு குறைந்து விட்டது?

எப்போது பார்த்தாலும் எங்கள் குடும்பங்களோடு சேர்த்து 50 லட்சம் ஓட்டு என்று பிளாக்மெயில் செய்வதே அரசு பள்ளி ஆசிரியர்களின் வழக்கமாக இருக்கிறது. ஆசிரியர்களை நல்வழிப்படுத்த வேண்டிய சங்கங்கள் தவறான வழியை காட்டுகின்றன. அதற்கு மேல் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் வரை, ஆசிரியர்களிடமிருந்து தான் சென்று இருக்கிறார்கள். அவர்களும் இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. தன்னார்வம் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுப் பள்ளிகளை சென்று ஆய்வு செய்தால், போராட்டம் நடத்துகிறார்கள். மிரட்டுகிறார்கள். தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

பள்ளிக் கல்விக்கு மட்டும் தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த வழிகளில் எல்லாம் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று பாருங்கள். ஒரே ஒரு வினாடி மட்டும் மற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களோடு ஒப்பிட்டால் நாம் எவ்வளவு சுகபோகமாக இருக்கிறோம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். அடுத்த தலைமுறை தமிழ்நாடு, நன்றாக இருக்க வேண்டும் என்பதில் உங்கள் பங்கும் உண்டு. அதற்காகத்தான் அரசு இவ்வளவு செலவு செய்கிறது. மாணவர்களுக்கு தயவுசெய்து ஒழுங்காக கல்வி கற்பியுங்கள். வாசிக்க கூட தெரியாத மாணவர்கள், ஒரு கழித்தல் கணக்கு கூட தெரியாத மாணவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள்’’ என்று ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

இது குறித்து ஆதங்கப்படுவோர், ‘’தமிழ்நாட்டோட கல்வி மாவட்டங்களில் பின்தங்கியது எங்க திருவள்ளூர். அதுலயும் மட்டமான ரிசல்ட் வர்ற ஒரு அரசுப்பள்ளிலதான் நான் 6 to +2 படிச்சேன். ABCD தெரியாத எட்டாங்க்ளாஸ் பசங்க எல்லாம் சர்வசாதாரணம். வகுப்புல முதல் ரேங்க் பையன் பேப்பரை மட்டும் வாத்தியார் திருத்தறதும் மத்த எல்லார் பேப்பரையும் முதல்ரேங்க் பையனே திருத்தி மார்க்‌ஷீட் ஃபில் பண்ணிக்கறதும் அங்கீகரிக்கப்பட்ட செயல்பாடு. மதியத்துக்கு மேல வாத்தியார்கள் பீரியடை கட் பண்ணிட்டு ஸ்டாஃப் ரூம்ல தூங்குறதெல்லாம் அவங்களோட உரிமைன்னே நினைச்சுட்டிருந்தாங்க – அப்பதான் சாயந்தரம் தெம்ப்பா வீட்டுல ட்யூசன் எடுத்து கல்விச்சேவை ஆற்றமுடியுமாம்.

தமிழ்நாடு கிரிக்கெட் செலக்சன் மாதிரி தன்னோட ஜாதிக்கார பையன்/பொண்ணுக மட்டும்தான் ஸ்கூல் பர்ஸ்ட் வரணும்ன்றதை இயக்கமாவே முன்னெடுக்கறது அரசு ஆசிரியர்களின் ஓய்வுநேர ஹாபி. லஞ்சம் வாங்கமுடியாத அரசு ஆள்கள்ன்றதாலயோ என்னவோ, இவங்களுக்கு தங்களைப்பத்தி மிதமிஞ்சிய பெருமிதமும் இறுமாப்பும் உண்டு, ஒன்னையுமே கழட்டலைன்னா கூட. நீங்க மேல சொல்லியிருக்கற சீரழிவுக்கு *அரசு ஆசிரியர்கள்* அப்டின்ற இனக்குழு மட்டுமே முதற்காரணம்’ என்கிறார்கள்.

இதற்கு ஆசிரியர்களோ, ‘’எல்லா ஆசிரியர்களையும் குறை சொல்வது தவறு. சில ஆசிரியர்கள் சிறப்புடன் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் மாணவர்களின் ஒழுக்கம் குறைந்து இருக்கிறது. ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் பணி தவிர வேறு பணிகளும் கொடுப்பது கல்வியில் அவர்களுடைய கவனத்தை குறைத்து விடுகிறது ஒழுங்காக பள்ளிக்கு வராத, படிப்பில் ஆர்வமில்லாத, காதல், சோசியல் மீடியா, சிகரெட், தண்ணி, பான் போன்றவற்றில் அதீத ஆர்வமுள்ள மாணவர்களை என்ன செய்ய முடியும்? டெஸ்ட் வைத்தால் எழுதுவதில்லை .ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை, அவர்களை கண்டிக்கவும் முடியாதே’’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

Leave a Comment