போர் வன்முறை ஆதரிப்பது சரியான மனநிலையா..?

Image

ஆசிரியர் பக்கம்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாக்குதல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகும் தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்த நேரத்தில் பெரும்பாலான மக்களிடம் போருக்கு ஆதரவான மனநிலையைப் பார்க்க முடிகிறது. பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்ட வேண்டியது அவசியம். பாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிய வேண்டும். பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இல்லை என்றாலும் பரவாயில்லை என்று தொலைக்காட்சியில் போர்க் காட்சிகளைக் கண்டு குதூகலம் அடைகிறார்கள். இதுவே நாட்டுப் பற்று என்று புஜம் உயர்த்துகிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா? இந்த நேரங்களில் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் விலங்கு எட்டிப் பார்க்கிறது. மனிதர்களின் ரத்தத்தில் இன்னமும் விலங்குகளின் வன்முறை இருப்பதாலே சண்டை, போர், ரத்தம் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

போர், தாக்குதல் என எது நடந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமே. மரணம் அடைபவர்களில் இரண்டு வயதுப் பிஞ்சுக் குழந்தை இருக்கலாம், அனுபவம் வாய்ந்த முதிய ஆசிரியர் இருக்கலாம். கண் முன்னே தன் குடும்பத்தினர் துடிதுடித்து மரணம் அடைவதை சிலர் பார்க்க நேரிடலாம்.

இந்த போர் ஏதேனும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். அப்போது தலைவர்கள் கை குலுக்கிக்கொண்டு சிரித்தபடி கையெழுத்துப் போடுவார்கள். ஆனால், செத்துப்போன குடும்பத்தினர் யாரும் உயிரோடு வரப்போவதில்லை. இடிந்துபோன வீடுகள், இழந்த செல்வம் திரும்பப் போவதில்லை. அனாதையாக பல குழந்தைகள் தெருவில் அலையலாம். அவர்கள் பிச்சை எடுக்கும் நிலையும் நேரலாம்.

எனவே, போரை ரசிக்கவோ, கொண்டாடவோ வேண்டாம். எதிரி யாராக இருந்தாலும் ரத்தம் அதற்குத் தீர்வு இல்லை. எனவே, யுத்தம் இல்லாத உலகம் கேளுங்கள். வன்முறை விரும்பாத மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுவே மனிதம். அதுவே மனதுக்கும் உடலுக்கும் இதமானது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment