தன் உடலையே தின்னும் உடல்
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது அனைத்து மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்குப் பின்னே ஒரு மிகப்பெரும் மருத்துவம் உள்ளது என்கிறார், ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி.
2016ம் ஆண்டு அவர், உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசை வென்றுள்ளார். அதாவது உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது.
உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில் இருந்தும்புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று சுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன. இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி “பட்டினி சிகிச்சை” அளித்து வருகின்றனர் என்கிறார்.
நமது சித்த வைத்தியத்தில் வாரம் ஒரு நாள் பட்டினி கிடப்பது ஒரு சிகிச்சையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதேநேரம், பட்டினி கிடக்கும் நேரத்தில் உடல் என்ன செய்கிறது என்று கூறப்பட்டிருக்கும் இந்த ஆய்வு எல்லோருக்கும் எல்லா நேரமும் பொருந்தாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பட்டினி சிகிச்சையை மேற்கொள்வது எதிர் விளைவுகளையே உருவாக்கும் என்கிறார்கள்.