கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம் நிதி
கள்ளச்சாராயம் காய்ச்சக்கூடாது என்றும் குடிக்கக் கூடாது என்றும் சட்டம் இருக்கிறது. இதை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு ஒரு படை இருக்கிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு அரசு 10 லட்சம் நிவாரண நிதி கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடி பிரியர்களுக்காகவே அரசு டாஸ்மாக் நிறுவனத்தை நடத்திவருகிறது. மேலும், கள்ளச்சாராயம் குடித்தால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதற்காகவும் இது நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்போது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் டாஸ்மாக் கடை நடத்தப்படுகிறது.
ஆனால், டாஸ்மாக்கில் குடிக்காமல் கள்ளச்சாராயத்தைத் தேடிப் போகிறார்கள் என்றால், அது அவர்கள் தெரிந்தே செய்யும் தவறு. அதுவும் கள்ளச்சாராயத்தினால் செத்துப் போனவர்கள் வீட்டுக்குப் போனவர்களும் அங்கே போய் கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போயிருக்கிறார்கள்.
இது, அவர்கள் முட்டாள்தனத்தால் செய்யும் தவறு. இதற்கு அவர்களும் அவர்களை அனுமதித்த குடும்பமும் மட்டுமே பொறுப்பு ஏற்க வேண்டும். இதனை அனுமதித்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரி.
ஆனால், தவறு செய்து தண்டனை பெற வேண்டிய குற்றவாளி செத்துப் போனார் என்பதற்காக அவரது குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதி தருவது என்ன நியாயம்..? அப்படியென்றால் கள்ளச்சாராயம் விற்பனையை ஸ்டாலின் ஆதரிப்பதாக அர்த்தம் ஆகாதா..?
நல்ல சாராயம் குடித்து உயிர் வாழ்வதை விட கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போவது நல்ல செயல் என்ற முடிவுக்கு வந்துவிட மாட்டார்களா… இதையெல்லாம் விட குடிக்காத மக்களின் வரிப்பணத்திலிருந்து கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்கு நிதி கொடுப்பது நியாயமா..?
கள்ளச்சாராய மரணத்துக்கு நிதி கொடுப்பதாக இருந்தால் தி.மு.க.விலிருந்து கொடுங்கள். இந்த நிலை நீடிக்கும் என்றால், அடுத்து பாலியல் கொடுமை செய்து செத்துப் போனவர், கொலை செய்து செத்துப்போனவர் குடும்பத்துக்கும் நிதி கொடுப்பாரா ஸ்டாலின்..?
போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க முடியவில்லை என்றால் பதவியில் இருந்து விலகுங்கள் ஸ்டாலின்.