பரிசோதனை செய்து பாருங்கள்
நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்றால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எவ்வளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்க்கலாம். குறைவாக இருந்தால் எப்படிப்பட்ட ஆபத்துகள் நேரும் என்று மருத்துவர்கள் பட்டியல் போடுவார்கள். உடனே ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்குத் தேவையான உணவுகள், மருந்துகள் எடுத்துக்கொள்வார்கள். உடல் பலமடைந்துவிடும்.
அதேபோல், வெற்றி வேண்டும் என்றால் ரத்தத்தில் தன்னம்பிக்கை நிரம்பவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை” என்பது ஓர் உந்து சக்தி – வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறது!! ஆனால் அது போதுமான அளவு இல்லை என்பதே உண்மை.
தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் ஒருபோதும் சோர்வு அடைவதில்லை. துவண்டு போவதில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள்.
அதேநேரம், தோல்வியானது துவண்டு போகச் செய்கிறது, சுருள வைக்கிறது, அச்சமூட்டுகிறது என்றால், தன்னம்பிக்கை அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள்.
தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம், மற்றவர்களோடு கலகலப்பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.
எனவே தன்னம்பிக்கையை அதிகப்படுத்தலும் அவ்வாறு வளர்ச்சியுற்ற தன்னம்பிக்கையைக் குறைய விடாது நிலைநிறுத்திக் கொள்வதும் (Sustaining the Increased Self Confidence) மிகமிக முக்கியம்.
தன்னம்பிக்கை அதிகரிப்பது எப்படி..?
முதலில் உங்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். உங்களால் முடியும் என்று பாசிடிவ் சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக செயலில் இறங்குங்கள். அந்த செயல் என்ன பலன் தருகிறது என்பது குறித்து அதிக நாட்டம் செலுத்தாதீர்கள். எது நடந்தாலும் செயல் மட்டுமே முக்கியம் என்று எண்ணுங்கள். சின்னச்சின்ன வெற்றி கிடைத்தாலும் அதை கொண்டாடுங்கள்.
தோல்வி கிடைத்தால் அதை ஆய்வு செய்யுங்கள். விருப்பு வெறுப்புகள் இல்லாமல் நடுநிலையில் ஆய்வு செய்தால் உண்மை புரியும். மீண்டும் முயற்சி செய்யுங்கள். ஆயிரம் முறை தோற்றாலும் பரவாயில்லை என்ற மனநிலை வந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.