போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட்கள்
தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக இன்று கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் நேரடியாகக் குதித்திருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய இடதுசாரி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தை இழுத்து மூடுவதற்கு சாம்சங் நிறுவனம் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன.
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக சாம்சங் நிறுவனம் அப்டேட் அடைந்துள்ளது. எனவே, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 சதவீத தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து சிந்தனை வெளியிட்டிருக்கும் பதிவில், ‘’தெற்காசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக சில மாதங்களுக்கு முன் உலகம் முழுவதும் உள்ள சாம்சங் நிறுவன பிரிவுகளில் பணியாற்றி வரும் மனித வள மேம்பாட்டு துறை, மேலாளர் உள்ளிட்டவர்களை சிங்கப்பூர் வரவழைத்து ரகசிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட சாம்சங் நிறுவனத்தின் உலகம் முழுவதும் உள்ள பிரிவுகளில் 2.6 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான (1.4 லட்சம் ) தொழிலாளர்கள் லத்தின் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் உள்ளனர். விற்பனை மந்தமாக உள்ள பகுதிகளில் பணி நீக்கம் இருக்கும் எனவும் இந்த பணி நீக்கம் காரணமாக 10 இல் ஒரு தொழிலாளி வேலை இழக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சங்கம் அமைக்கப்பட்டால் பணி நீக்கம் சிக்கலாகும் என்பதாலே தொழிற்சங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு தொழிற்சங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தால் இங்கு தொழிற்சாலையை மூடுவதற்கும் நிறுவனம் தயாராக இருப்பதாக எச்சரிக்கை கொடுக்கிறார்களாம். நிறுவனம் மூடப்பட்டால் முதலீட்டில் சிக்கல் உருவாகும் என்பதால் ஸ்டாலின் அமைதி காக்கிறாராம்.