ஞானகுரு கவுன்சிலிங்
நிறைய பேர் முதல் காதல் என்ற வலையில் விழுந்து, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். காதல் எல்லோருடைய வாழ்க்கையிலும் வருகிறது. பப்பி லவ் எனப்படும் முதல் காதல் எல்லோருக்கும் பள்ளி வயதில் தோன்றுகிறது.

முதல் காதல் ஆண்களுக்கு ஆசிரியை மீதும் பெண்களுக்கு ஆசிரியர் மீதும் ஏற்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். குடும்பம் என்ற அமைப்பில் இருந்து முதன்முதலாக பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களின் அறிவு ஆச்சர்யம் கொடுக்கிறது. அவர்களுடைய ஆளுமை பிள்ளைகளை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. அதனாலே அந்த காதல் வருகிறது.
இதையடுத்தே தங்கள் வகுப்பில் படிக்கும் சக மாணவ, மாணவியர் மீது காதல் வருகிறது. இந்த உணர்வுகள் எல்லாமே பருவ வயதில் ஹார்மோன் உருவாக்கும் ஆர்வக்கோளாறு. ஏனென்றால், இந்த வயதில் தொடங்கும் காதல் விரைவில் முடிந்துவிடுகிறது. குறிப்பிட்ட நபரை விட ஆளுமை கொண்டவர், அழகான ஒரு நபரைப் பார்த்ததும் மனம் மாறிவிடுகிறது.
உண்மை என்னவென்றால் காதல் ஒரே ஒரு நபர் மீது மட்டுமே வரும் என்ற நம்பிக்கை உண்மை அல்ல. எல்லோருக்கும் எல்லா காலத்திலும் காதல் வந்துகொண்டே இருக்கும். காதல் செய்பவர்களும் சண்டை போடுவார்கள், பிரிவார்கள்.
’இந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை, நாம் செத்தாலும் ஒரே பெட்டியில் வைத்து புதைக்க வேண்டும்’ என்றெல்லாம் உருகி உருகி காதல் செய்பவர்களும் சண்டை போடுகிறார்கள், டைவர்ஸ் வாங்குகிறார்கள், சிலர் ஆசிட் வீசுகிறார்கள், சிலர் கொலையும் செய்கிறார்கள்.
எனவே, காதலை புரிந்துகொண்டவர்கள் மட்டுமே காதல் அனுபவத்தை வாழ்க்கைக்கு பயன்படுத்தி வெற்றி அடைய முடியும். முதல் மழை, முதல் காதல், முதல் முத்தம் என்பது எல்லாமே மறக்க முடியாத சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், இவை எல்லாமே ஆரம்பம் மட்டுமே. உடலுக்குப் பசி எடுப்பது போன்று மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்துசேரும் போதெல்லாம் காதல் வந்துகொண்டே இருக்கும்.
பள்ளியில் ஆசிரியை, ஆசிரியரிடம் தொடங்கும் காதல் அனுபவம், முதுமையில் மருத்துவமனை நர்ஸ், டாக்டர் வரையிலும் வந்துகொண்டே இருக்கும். எனவே, மீண்டும் மீண்டும் காதல் வந்துகொண்டே இருப்பது இயற்கை தான்.
காதலில் வெற்றி அடைந்தவர்களும் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் மனதுக்குள் காதல் மலரும் போது, முதல் காதலுக்குத் துரோகம் செய்துவிட்ட குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். காதலில் தோல்வி அடைந்து, வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டவர்கள், புதிய நபர் மீது முழுமையான காதலைத் தெரிவிப்பதில்லை. புதியவரைக் காதலிப்பது பழைய காதலுக்குச் செய்யும் அவமரியாதை என்று நினைக்கிறார்கள்.
காதலர்கள் மாறினாலும் காலம் முழுவதும் காதல் வந்துகொண்டே இருக்கும். எனவே, அந்த காதல் உணர்வைக் கொண்டாடுவது தவறு இல்லை.
அதேநேரம், வாழ்க்கைக்கு ஒரே ஒரு காதல் மட்டும் போதும். மற்ற காதலை எல்லாம் மனதுக்குள் வைத்து பூஜை செய்யுங்கள். அதுதான் காதலுக்குச் செய்யும் உண்மையான மரியாதை. காதல் முறிந்துபோனால் வாழ்க்கை முடிந்ததாக கவலைப்படாதீர்கள். மீண்டும் ஒரு காதல் வரும், காத்திருங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு கவுன்சிலிங்