சட்டப்படி தெரிஞ்சுக்கோங்க
ஒரு சொத்து யாருக்கு உரிமை என்பதை அரசாங்கத்தின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணமே பத்திரம் ஆகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலத்தைத் தற்போதைய உரிமையாளருக்கு முன்பு, யாரிடமிருந்தது யார் வாங்கினார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளக்கூடிய ஆவணம் தாய்ப்பத்திரம். இது, மூலப்பத்திரம் என்றும் அழைக்கப்படும்.
நாம் இப்போது ஒரு சொத்து வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் இன்னொருத்தருக்கு அந்தச் சொத்தை விற்றால், நாம் முதலில் வாங்கிய பத்திரம் தற்போது தாய் பத்திரம் என்றாகிவிடும். இதன் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறார் வழக்கறிஞர் நிலா.

“சொத்து மீது நமக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள ஆவணங்களே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன. அதனால் சொத்து வாங்கும்போது அது சம்பந்தப்பட்ட அத்தனை ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. அத்துடன் அந்த ஒரிஜினல் ஆவணங்களை கேட்டுப்பெறவும் வேண்டும். அந்த சொத்து நமக்குரியதுதான் என்பதற்கு அத்தாட்சியாக, அத்தனை ஆவணங்களும் நம்மிடம் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அதனால் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக வாங்கிவிட வேண்டும்.
சொத்து வாங்கும்போது, தேவைப்படும் முக்கியமான ஆவணங்களுள் ஒன்றுதான் தாய் பத்திரம். நாம் வாங்கும் சொத்துக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் கிரயப்பத்திரத்துக்கு, முந்தைய பத்திரம்தான் தாய் பத்திரம் எனப்படுகிறது. இந்த தாய் பத்திரம் மூலம்தான் சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவருக்கு, அந்த சொத்து எப்படி வந்தது என்பதை உறுதி செய்ய முடியும். அதனால் தாய் பத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் இந்த தாய்பத்திரத்தின் வாயிலாகதான் கிரயப்பத்திரம் எழுதப்படும் என்பதால் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்களை தெளிவாக படித்துப் பார்த்து, அவை சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
அதோடு கிரயப்பத்திரம் எழுதப்பட்டவுடன் அதில் வாங்கும் சொத்து பற்றிய விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதோடு விட்டுவிடக்கூடாது. அதோடு தாய்பத்திரத்தையும் மறந்துவிடக்கூடாது. அதில் இருக்கும் தகவல்கள் அடிப்படையில்தான் நமக்கு கிரயப்பத்திரம் பதிவு செய்யப்பட்டுவிட்டதே என்று நினைத்துவிடவும் கூடாது.
ஏனென்றால், உங்களிடம் இருக்கும் கிரயப்பத்திரம் உண்மையானதுதானா என்பதை தாய்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்கள் மூலமே உறுதிபடுத்த முடியும். அதனால் நீங்கள் வாங்கும் சொத்தை விற்பனை செய்ய நினைத்தால் தாய் பத்திரம் அவசியம் தேவைப்படும். வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கும் தாய் பத்திரத்தின் தேவையும் இருக்கும். இருந்தாலும் நீங்கள் வாங்கும் சொத்துக்கு தாய் பத்திரம், அத்தனை எளிதில் அப்படியே கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது.
வீட்டுமனை வாங்குவதாக இருந்தால் பல மனைப்பிரிவுகளை உள்ளடக்கிய லேஅவுட்டில் இருந்து அந்த மனை உங்களுக்கு பிரித்து தரப்பட்டு இருக்கலாம். அந்த மொத்த மனைப்பிரிவுக்கும் இருக்கும் ஒரே ஒரு தாய் பத்திரத்தை மனை வாங்கும் ஒவ்வொருவருக்கும் கொடுப்பது முடியாத காரியமாக இருக்கும். எனவே அப்படிப்பட்ட மனைப்பிரிவில், மனை வாங்குபவர்கள் தாய் பத்திரம் பெற இயலாது. இருந்தபோதிலும், அதன் நகல் தாய்பத்திரத்தை கண்டிப்பாக வாங்கி விட வேண்டும். அப்போதுதான் அந்த மனை உங்களுக்கு உரிமையுடையது என்பதை உறுதிபடுத்த ஏதுவாக இருக்கும். பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்போது அந்த மனை, யாரிடம் இருந்து எப்படி உங்களுக்கு வந்தது என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கும்பட்சத்தில், நகல் தாய் பத்திரம் உதவிகரமாக இருக்கும்.
அதுதவிர, பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது மனை பற்றிய தகவல்கள் சரியானதுதான் என்பதை உறுதிபடுத்தும் விதமாகவும் நகல் தாய் பத்திரத்தின் பயன்பாடு அமையும். ஆகையால் வாங்கிய சொத்துக்கு கிரயப்பத்திரம் கைக்கு வந்துவிட்டது என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம்.
தாய்பத்திரம் தொலைந்துவிட்டது என்று யாரேனும் சொன்னால், அந்த சொத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதனால் உடனே உஷாராக வேண்டியது அவசியம். ஒரு சொத்தின் மீது இருக்கும் உரிமையை உறுதிபடுத்தும் சான்று என்பதால்தான், ஆவணப் பதிவுக்கு தாய்ப்பத்திரம் அவசியம்” என்கிறார்.
அடேங்கப்பா, தாய்ப் பத்திரத்தில் இத்தனை விஷயம் இருக்கிறதா..?
வழக்கறிஞர் நிலா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.