மனநலம் பாதித்தவருக்கு திருமணம் தீர்வு தருமா..?

Image

டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், பாத்திமா மருத்துவமனை, சென்னை

சாதாரண உடல் வலி வந்தாலே பதறியடித்து மருத்துவரை சந்தித்து மருந்து பெற்றுக்கொள்பவர்கள், மனதுக்குள் ஆயிரம் குழப்பங்கள், சிக்கல்கள், பிரச்னைகள் தோன்றினாலும் மருத்துவரை சந்திக்க முன்வருவதில்லை. இதெல்லாம் ஒரு விஷயம்னு டாக்டரிடம் போகலாமா என்ற சிந்தனை இந்த 21ம் நூற்றாண்டிலும் நிறைய பேருக்கு இருக்கிறது. இதனாலே, எளிதில் தீர்க்கக்கூடிய மனநோயுடன் நீண்ட காலம் போராடிக்கொண்டு தங்கள் வாழ்க்கையை சிரமத்துடன் வாழ்ந்து அவஸ்தைப்படுகிறார்கள்.  

இதன் அர்த்தம், மனதில் குழப்பம், பயம், அச்சம் இருக்கும் அத்தனை பேரும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதல்ல. ஏனென்றால் நிறைய பிரச்னைகள், குழப்பங்கள் தானாகவே சரியாகிவிடக் கூடியவை. இன்னும் சில பிரச்னைகள் நெருங்கியவர்களிடம், மனதுக்குப் பிடித்தமானவர்களிடம் பேசினாலே தீர்ந்துவிடும். ஆனால், நீண்ட நாட்களாக இருக்கும் குழப்பம், தடுமாற்றம், அச்சத்தைத் தீர்ப்பதற்கு நிச்சயம் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. மனதில் இருக்கும் பதட்டம், பயம் போன்றவை வெளியே தெரியக் கூடாது என்று மறைப்பதற்கு முயற்சி எடுப்பதே பலருக்கு மனநோயை தீவிரமாக்குகிறது.

மனநோயின் அறிகுறிகள்

பெரும்பாலான மன நோய்க்கு வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. அதனால் சட்டையைக் கிழித்துக்கொள்வது, வீட்டை விட்டு ஓடுவது, உரத்த குரலில் பேசுவது, முரண்டு பிடிப்பது போன்றவையே மனநோய் என்று பலரும் நினைக்கிறார்கள். இவை எல்லாமே தீவிர நிலை ஆகும். முன்கூட்டியே மனநோயின் அறிகுறிகளை எளிதில் அறிந்துகொள்ள முடியும். குடும்பத்தில் நெருங்கியவரின் மரணத்தால் ஏற்படும் சோகம் அதிகபட்சம் நான்கு வாரங்கள் வரையிலும் நீடிக்கலாம். இந்த காலகட்டத்தைத் தாண்டியும் இயல்புநிலைக்குத் திரும்ப முடியாமல் ஒருவர் தவிக்கிறார் என்றால், அவருடைய மனதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். இதேபோல் தோல்வி, அவமானம், வலி போன்ற எல்லா பிரச்னைகளையும் கடந்துவருவதற்கு என குறிப்பிட்ட கால அளவு இருக்கிறது. இந்த காலத்தைத் தாண்டியும் இயல்புக்கு  மீள முடியாதவர்களை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் தூக்கம் மற்றும் உணவு எடுத்துக்கொள்வதில் பெரும் மாறுபாடு நீடிக்கும்போது அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு, அளவுக்கு அதிகமாகத் தூங்குவார்கள். சிலர் சாப்பாட்டை குறைத்துவிட்டு உறக்கமே வராமல் தவிப்பார்கள். அதேபோல் மிகவும் பிடித்தமான செயலை செய்வதற்கு விருப்பமில்லாமல் போவது, யாருடனும் பேசுவதற்கு விருப்பமின்மை, எப்போதும் தனியே அமர்ந்திருத்தல், ஞாபக மறதி போன்றவையும் மனநலக் குறைப்பாட்டின் ஆரம்பநிலையாகும்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவர்களை கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். கோபம், வருத்தம், ஆசை போன்றவற்றை இடம் பார்த்து வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். கோபத்தை தங்கள் மேலதிகாரியிடம் காட்டினால் அது வேலைக்கு சிக்கலாகிவிடும். அதேபோல் பொது இடங்களில் மனதிலிருக்கும் எல்லாவற்றையும் பேசிவிட முடியாது. இந்த நிலையில் குழப்பம் வரும்போது மனநல மருத்துவரை சந்திக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எதையெல்லாம் நம்பலாம், எந்த அளவுக்கு நம்பலாம் என்பதிலும் சில வரையறைகள் உள்ளன. கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றாலும் நேற்று நான் கடவுளை நேரில் பார்த்தேன், எனக்கு வரம் கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் பேசுவது மற்றவர்களின் நகைப்புக்கு ஆளாகும். பேய், பிசாசு போன்ற நம்பிக்கையிலும் எல்லை இருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்தவற்றை தவறாகப் பார்க்கும் மனப்பான்மையும் ஆபத்தானதே. ரோட்டில் யாராவது இரண்டு பேர் பேசிக்கொண்டு நின்றாலும், தன்னை கண்காணிக்கவே அவர்கள் நிற்பதாக நினைப்பதும், தன்னை பார்த்து பலரும் சிரித்ததாக நினைப்பதும் மனநல பிரச்னைதான்.  

திடீரென விரக்தியடைதல், அளவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் எடுத்துக்கொள்தல், எல்லாம் மாயை என்று பிதற்றுதலும் ஆபத்தான மனநிலை ஆகும். எல்லா மனிதர்களும் மரணத்தை நோக்கியே இருக்கிறார்கள் என்றாலும் எல்லா நேரமும் மரணத்தை எண்ணி அச்சப்படுவதும் கவலைப்படுவதும் சிக்கலை உருவாக்கும். இதுபோன்ற நிலையில்தான், தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தங்கள் பிரச்னைகள் எல்லை மீறிப் போய்விட்டதாகவும் நினைத்து சிலர் தற்கொலைக்கு முயல்கிறார்கள். இவர்களது நடவடிக்கையைக் கண்டறிந்து, முன்கூட்டியே சிகிச்சையளித்தால், நிச்சயம் தற்கொலை எண்ணத்தை தவிர்த்துவிட முடியும்.

சிகிச்சை :

ஒருவருக்கு மனநலம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்கப்படும். நிறைய பேருக்கு பேசுவதிலேயே பிரச்னைகள் தீர்ந்துவிடும். ஒருசிலருக்கு சில மாத்திரைகள் தேவைப்படலாம். ஆனால், எப்படிப்பட்ட சிகிச்சை முறை என்றாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு உறவுகளும், நண்பர்களும் உதவிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா நேரமும் அவருடன் மருத்துவர் இருத்தல் இயலாது. ஆகவே, பாதிக்கப்பட்ட நபருக்கு நம்பிக்கையும் வாய்ப்பும் கொடுத்து அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கு குடும்ப உறுப்பினரின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

நிறைய பேர் கட்டிப்போட்டு அடித்தல், அறைக்குள் பூட்டிப் போடுதல், மின்சார அதிர்வு கொடுத்தல் ஆகியவையே மனநோய்க்குத் தீர்வு என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற தீர்வுகள் இப்போது மருத்துவத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. ஏதேனும் கோயிலுக்குப் போய்வந்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னும் சிலர், பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் முடித்துக்கொடுத்தால் மனநோய் தீர்ந்துவிடும் என்று அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இவை எல்லாமே பிரச்னைகளை மேலும் அதிகரித்துவிடும் என்பதுதான் உண்மை.

குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவி ஆகியோருக்கு மட்டுமே மனநல பிரச்னைகள் ஏற்படுகிறது, பொருளாதார பிரச்னையாலே பெரும்பாலான மனநோய் ஏற்படுகிறது என்றெல்லாம் கூறப்படுவது உண்மை அல்ல. குழந்தைகள், மாணவர்கள், இளைய வயதினர், முதியவர் என யாருக்கும் மனச்சோர்வு, மனப்பதட்டம் உருவாகலாம். அதேபோல் கோடீஸ்வரர், நன்றாக படிப்பவர், திறமையானவர் என்றாலும் அவர்களுக்கும் மனநோய் உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

மனநோய் என்பது ஒரு சாதாரண பிரச்னையே. இதனை கண்டுகொள்ளாமல் நாட்களை கடத்துவதுதான் சிக்கலுக்குக் காரணமாகிறது. எனவே, குடும்பத்தில் யாரேனும் ஒருவரது நடவடிக்கையில் சிறிய மாற்றம் ஏற்படும்போதே அவர் மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் எல்லோரும் மனம்விட்டு பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குவதற்கு சுற்றுலா போய் வாருங்கள்.

மனசை பத்திரமா பாத்துக்கோங்க.

தொடர்புக்கு : 044 35932272

Leave a Comment