அரசியலை விட மோசமான ஆன்மிகம்
திருப்பதி லட்டுவால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று அலசி விடுகிறார்கள். கடவுளின் அருளை லட்டு கெடுத்துவிடுமா என்ற கேள்வி சாதாரண மனிதர்களுக்கே புரியும்போது அரசியல்வாதிகளும் ஆன்மிகவாதிகள் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்பதே உண்மை.
திருப்பதி லட்டு அரசியலில் நடக்கும் ஆன்மிக அரசியலைப் புட்டுப்புட்டு வைக்கிறார் ஸ்ரீதர் சுப்ரமணியம். இதோ, அந்த பதிவு. ‘’திருப்பதி விவகாரத்தில் கிளம்பிய பிரச்சினை அரசியலாக மாறி கூடவே மத அரசியலாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்துப் பேசிய சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ‘கோயில்கள் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வருவது தவறானது. அது பக்தர்களால், மதத் தலைவர்களால் நடத்தப்பட வேண்டும். இதைத்தான் நான் நாற்பது வருடமாக கூறிக் கொண்டு வருகிறேன்,’ என்று கருத்தளித்து இருக்கிறார்.
‘வணிக சிந்தனை கொண்டவர்களை கோயிலுக்குள் நுழைய விடக் கூடாது,’ என்று ஆதங்கப்பட்டுள்ளார். இன்னொரு சாமியார் ஜக்கி மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் தூஷயந்த் ஸ்ரீதர் போன்றோரும் இதை ரீதியில் பேசி இருக்கின்றனர். இந்த சர்ச்சையில் என்னைத் தொந்தரவு செய்து கொண்டு இருக்கும் ஆகப்பெரிய விஷயம் இந்த லட்டுக்குக் கொடுக்கப்படும் ‘புனிதத்தன்மை’தான். அந்த லட்டு என்பது ஏதோ ஸ்பெஷல் போலவும், அதில் ஏதோ பகவான் அருள் பொதிந்து இருப்பது போலவும், அந்தக் கோயில்களில் இறை அருள் நிரம்பிக் கிடப்பது போலவும் கொடுப்படும் பில்டப்புகள் கொஞ்சம் சிரிப்பையும் நிறைய வருத்தத்தையும் அளிக்கின்றன.
என்னைப் பொருத்தவரை, திருப்பதி ஒரு வணிக வளாகம். உங்களிடம் உள்ள காசுக்கேற்ற சேவை கிடைக்கும் இடம். அவ்வளவுதான். இதெல்லாம் சமீப மாற்றங்கள்: அரசு உள்ளே புகுந்ததும் நடந்தவை என்று சிலர் வாதிடலாம். நவீன காலத்துக்கு முன் கோயில்கள் அப்படி இருந்ததில்லை என்று அங்கலாய்க்கலாம். சுதந்திர காலம் வரை அவற்றைத் தனியார்கள்தான் நிர்வகித்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் அவை மோசமாகவே நிர்வகிக்கப்பட்டு இருந்தன.
காசிக் கோயிலின் அழுக்கான சூழலை மகாத்மா காந்தியே வர்ணித்து அழுதிருக்கிறார். காந்தியின் வரிகள் கீழே: ‘கோயிலை அடைந்த போது அங்கே அழுகிப் போய் நாறும் பூக்களின் மாபெரும் குப்பை என்னை வரவேற்றது. கோயில் தரையில் மார்பிள் வார்க்கப்பட்டிருந்தாலும் அதையும் பல புண்ணியவான்கள் உடைத்துப் போட்டிருந்தார்கள். தரைகளில் இருந்த அந்த இடைவெளிகள் குப்பைகளின் அடைக்கலங்களாக மாறி இருந்தன. … பின்னர் ஞானவாபி பீடத்தின் அருகில் சென்றேன். அங்கே கடவுளைத் தேடினேன். அவரைக் காணவில்லை. ஆகவே மோசமான மூடில் இருந்தேன். அந்த இடத்தைச் சுற்றியும் அழுக்கும் குப்பைகளும் நிரம்பி இருந்தன. … கடவுளின் முடிவில்லாத கருணையின் மேல் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர் நமது கோயில்களுக்கு வந்து பார்க்கட்டும். எந்த அளவுக்கு பாசாங்குத்தனங்களையும், ஆன்மீகமற்ற விஷயங்களையும் சகித்துக் கொண்டு அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார் என்பது தெரிய வரும்!’
அழுக்கு, குப்பைகள், சாதிக் கொடுமைகள், கடவுள் பெயரால் ஏமாற்று வேலைகள் எல்லாம் இருந்த இடங்கள்தான் சுதந்திரம் வரை கோயில்களின் நிலை. அதற்கு முன்பு பின்னே போனால் நிலை இன்னமும் மோசமாகிறது. அதற்கு நம்மிடம் இருக்கும் முக்கியமான ஆவணம் ஆகம நூல்கள் மற்றும் புராணங்கள்: அவற்றைப் படிக்கும் போது போதும் நமக்குத் தெரிவது இதுதான்: கோயில்கள் சாதி ஒடுக்குமுறையின் ஊற்றுக்கண்கள். சாதி வேற்றுமைகள் மற்றும் படிநிலைகள் அங்கிருந்துதான் துவங்குகின்றன. மேலும் பெரும்பாலான கோயில்கள் அந்தந்த அரசர்கள் தங்கள் வெற்றிக்கும், உடல் நலனுக்கும் சந்ததிப் பெருக்கத்துக்கும் வேண்டியே கட்டி வைத்தவை. அதற்காகவே அங்கே இறைவனை சாந்நித்தியம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட இடத்தில்தான் பெருமாளோ, சிவபெருமானோ இருந்து அருள் பாலிக்கிறார் என்றால் அதை விட அவர்களுக்கு வேறு அவமானம் தேவையில்லை. தவிர, பாவங்களுக்கு பரிகாரங்கள் செய்து அவற்றை கேன்சல் செய்து கொடுப்பது பற்றிய குறிப்புகள் இந்த நூல்கள் முழுக்க விரவிக் கிடக்கின்றன. பாவங்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு விதமான அங்கீகாரங்கள் அல்லாமல் அவை வேறு என்ன? தீவிரமான போர்களில் கணக்கற்ற பேரைக் கொன்று குவித்து விட்டு, கோயிலில் பரிகாரங்கள் செய்து கொண்ட மன்னர் கதைகள் உள்ளன. இவற்றை எல்லாம் சகஜமாக எடுத்துக் கொண்டு கடந்திருக்கிறோம். அவ்வளவு ஏன், தேவதாசி முறைமைகளையும், கோயில் வாழ்வியலில் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டு இயங்கியவர்கள்தான் நாம்.
அப்படிப்பட்ட நிலையை பெருமளவு மாற்றியது சுதந்திரத்துக்குப் பின் வந்த அரசுகளும் அதிகாரிகளும்தான். காசி விஸ்வநாதர் பாதை ப்ராஜக்ட்டை துவக்கி வைத்துப் பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘காந்தி மனதில் இருந்த துயரத்தைப் போக்கி இருக்கிறோம்,’ என்று பேசி இருக்கிறார். அதாவது அரசுகளும் அதிகாரிகளும் முயன்றுதான் அது நடக்க வேண்டி இருந்திருக்கிறது. இப்படி அரசின் தலையீட்டில்தான் கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு, என்று பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இன்னும் சொல்லப் போனால், இந்திய அகழ்வாராய்வுத் துறை தலையிடாமல் இருந்திருந்தால் பல்வேறு பண்டைய கோயில்கள் இன்று சிதிலமாகி காணாமல் போயிருந்திருக்கும். அதையெல்லாம் விட இன்னொரு அதிர்ச்சி, ஸ்ரீ ஸ்ரீ பேசும் போது ‘லட்டுக் கலப்படம்தான் எனக்குத் தெரிந்ததிலேயே ஆகக் கொடூரமான குற்றம்,’ என்று சொல்லி இருக்கிறார். ‘The most heinous crime’. அதாவது இந்து மதம் போற்றிப் புகழ்ந்து வந்த உடன்கட்டை அவருக்குப் பெரிய குற்றமாக தோன்றவில்லை. இன்றும் பல இடங்களில் தொடரும் விதவைக் கொடுமைகள் இல்லை. இன்றளவும் நிலவும் தீண்டாமை மற்றும் தலித் ஒடுக்குமுறை இல்லை, சாதிப் படிநிலைகள் இல்லை. பசுவைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அரங்கேற்றப்பட்ட 100க்கும் மேற்பட்ட கொலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் அல்ல. ஒரு கோயிலுக்காக ஒரு மசூதியை இடித்து அதில் நடத்தப்பட்ட ஐயாயிரம் படுகொலைகள் அல்ல. இவையெல்லாம் மதத்தின் பெயரால் நடத்தப்பட்டவை. இவை எதுவுமே ஆகக்கொடூரமான குற்றங்கள் அல்ல. ஆனால் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருக்கலாம் என்ற ஒரு குற்றச்சாட்டுதான் அவரைப் பொருத்தவரை பெரிது எனும் போது அவரது priority குறித்த தெளிவு நமக்குக் கிடைக்கிறது.
அவரது கார்ப்பரேட் ஆசிரமம் நடத்தும் ‘வாழும் கலை’ பயிற்சியில் எப்படிப்பட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படும் என்பதும் நமக்குப் புரிபடுகிறது. சோகம் என்னவெனில் இந்தியாவில் முக்கால்வாசி உணவுகளில் கலப்படங்கள் தினம் தினம் நிகழ்கின்றன. நாம் தினம் பயன்படுத்தும் நெய்யே கூட அதன் வாழ்நாள் நீட்டிப்புக்காக (shelf-life) எலும்பு சாம்பல் கலக்கப்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். மைதாவில் பென்சாய்ல் பெராக்சைட், போரிக் ஆசீட், வெல்லத்தை உருட்டுவதற்கு மைதா என்று சொல்லிக் கொண்டே போகலாம். கலப்படம் என்பது இன்றியே, தேவைக்காகவே கூட சில விஷயங்கள் நடக்கின்றன. சுத்திகரிப்புக்கு, வெளுப்பாக்குவதற்கு என்று சில நேரங்களில் எலும்பு சாம்பல் பயன்படுத்தப்படுகிறது. செராமிக் தட்டுகள், குவளைகளில் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது. அவை இல்லாமல் வரும் சில பிராண்ட்டுகளில் ‘Bone Free’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். ஆயிரத்துக்கும் அதிகமான மாத்திரைகளில் ஜெலட்டின் மற்றும் ஸ்டீயரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இவை பன்றிக் கொழுப்பில் இருந்து எடுக்கப்படுபவை.
தின வாழ்வில் நிகழும் இவற்றையெல்லாம் சகஜமாக கடக்கும் நமக்கு, புனிதம் என்ற ஒன்றுடன் மட்டும்தான் இப்படிப்பட்ட பிரச்சினை வருகிறது. ஆனால் ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புனிதம் என்ற வார்த்தையை வைத்துதான் இந்த உலகில் ஆகப் பெரிய வன்முறைகள் அரங்கேறி இருக்கின்றன. புனிதப் புத்தகங்களின் மாண்பைக் காக்க, புனிதர்களின் பெயர்களை நிலை நாட்ட, புனிதக் கடவுளர்களைப் போற்ற, அந்தக் கடவுளுக்கு ஆகாத (!) மக்களைக் கொன்று குவிக்க, பெண்களின் புனிதத் தன்மையை பாதுகாக்க, புனிதமல்லாத சமூகங்களை ஒழித்துக் கட்ட, புனிதம் அற்ற சில விலங்குகளை (!) அழித்துப் போட… …என்று இந்த உலகில் அரங்கேறிய வன்முறைகளின் பட்டியல் மிக நீண்டது. புனிதத்தன்மை என்பது கொடியது. தீயது. அறிவு கெட்டது. நம் அறிவையும் கெடுப்பது. அறிவியலையும் நசிப்பது. புனிதர்களிடம் இருந்தும், புனிதப் புத்தகங்கள், புனித உணவுகள், புனிதத் தலங்கள், புனிதம் போற்றும் சிந்தனைகள் இவற்றிடம் இருந்தும் தள்ளியே இருங்கள். வாழ்வு வளம் பெறும். நெஞ்சில் நிம்மதி நிலவும்’ என்று பதிவு செய்திருக்கிறார்.