கனவுக்குள் ஒரு கனவு
இதிகாசங்களும், புராணங்களும் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியவை. இவை உண்மையில் நடந்ததா, எங்கு நடந்தது என்றெல்லாம் ஆராய்வதற்கு அவசியம் இல்லை. இந்த கதைகளின் ஆழத்தில் புதைந்துகிடக்கும் சில தத்துவங்களை தொட்டுப் பார்த்தாலே, வாழ்க்கையின் சிக்கலான பல புதிர்கள் அவிழ்ந்துவிடும்.
சீதா பிராட்டியின் தந்தையான ஜனக மகராஜாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
ஜனக மகராஜாவுக்கு தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைக்காரனாக மிகவும் சிரமப்பட்டு, சாப்பிட உணவில்லாமல் துன்பப்பட்டார். அது கனவு போலத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
ஆனால், அந்த கனவு மீண்டும் மீண்டும் அவருக்கு வந்துகொண்டே இருந்தது. இரவில் பிச்சைக்காரனாகவும், பகலில் மன்னராகவும் இருந்தார்.
இந்த கனவு காரணமாக ஆட்சியில் இருந்தாலும் அவரால் அதனை அனுபவிக்க முடியவில்லை. இரவு நேரத்தில் பிச்சைக்கார வாழ்க்கையையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த நேரத்தில் ஜனகருக்கு திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. அதாவது, “நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு காண்கிறேனா அல்லது பிச்சைகாரனாக இருந்து மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?” என சந்தேகம் வந்தது.
இந்த சந்தேகத்துக்கு பலரிடமும் விடை கேட்டார். யாருக்கும் தெளிவாக பதில் அளிக்க முடியவில்லை. தன்னுடைய சந்தேகத்தை தீர்க்க வழியில்லாமல் ஜனகர் தடுமாறிய நேரத்தில், அஷ்டாவக்கிர மகிரிஷி அரண்மனைக்கு வந்தார். அரசரின் சந்தேகத்தை தீர்ப்பதாகச் சொன்னார்.
அவர் சொல்லும் பதிலை கேட்பதற்கு நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்து காத்திருந்தனர்.
அந்த நேரத்தில் அஷ்டாவக்கிர மகரிஷி வந்தார். அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அன்னையின் வயிற்றிலிருந்த போதே அவர் மகா ஞானியாக இருந்தவர். சிசுவாக இருந்த நேரத்தில், அவரது தந்தை தப்புத்தப்பாக வேதம் படிப்பதைக் கேட்டு, சகிக்க முடியாமல் வளைந்து, நெளிந்ததால், அவரது உடல் அஷ்ட கோணலாக வளைந்து, அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
அஷ்டாவக்கிரர் நடந்துவருவதைப் பார்த்ததும், பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர். அவர்கள் சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.
பின்னர், ‘கசாப்புக் கடைக்காரர்களை வெளியே அனுப்புங்கள். பிறகு பதில் சொல்கிறேன்’ என்றார்.
அரசரும் மற்றவர்களும் புரியாமல் விழித்தனர்.
அதற்கு அஷ்டாவக்கிரர், ‘மன்னா.. இவர்கள் நான் சொன்ன பதிலைக் கேட்டு சிரித்தார்களா அல்லது என் ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா..? இவர்கள் என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலையும், என் உடலையும் வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் கசாப்புக் கடைக்காரர்கள்தானே…’ என்றதும் அனைவருக்கும் தங்கள் குற்றம் புரிந்தது. உடனே அனைவரும் மன்னிப்பு கேட்டார்கள்.
அதன் பிறகு ஜனகர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார் அஷ்டாவக்கிரர்.
இதுதான் அந்த பதில். ‘’அரசே நீ தூங்கிய நேரத்தில் கண்டதும் கனவு தான். இப்போது நீ வாழும் வாழ்வும் கனவுதான். உன்னுடைய ராஜ வாழ்வும் உண்மையில்லை. பிச்சைக்கார வாழ்வும் உண்மையில்லை.
எனவே, ராஜாவாக இருக்கும்போது சந்தோஷப்படாதே. அப்படி சந்தோஷப்பட்டால், நீ தூங்கும் நேரத்தில் அந்த மகிழ்ச்சி காணாமல் போய்விடும். அதே போல் கனவில் பிச்சைக்காரனாக இருப்பதற்கு வருத்தப்படாதே. ஏனெனில் விழித்ததும், நிலைமை மாறிவிடும்.
ஆகவே, இன்பம், துன்பம் எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாதே. அரசனாகவும், பிச்சைக்காரனாகவும் உன்னுடைய கடமையை மட்டும் செய். ஏனெனில் இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை…’ என்றார்.
ஜனகருக்கு பற்றற்று வாழும் கலை புரிந்தது. அதன் பிறகு அவருக்கு அந்த கனவு வரவே இல்லை.