• Home
  • மனம்
  • மன அழுத்தம் என்பது கெளரவக் குறைச்சலா..?

மன அழுத்தம் என்பது கெளரவக் குறைச்சலா..?

Image

சக்தி சக்திதாசன், லண்டன்


எப்போது அடுத்தவரைப் பார்த்து, ‘நலந்தானா?’ என்று கேட்கும்போது நாமும் சரி, அது யாரை நோக்கிக் கேட்கப்படுகிறதோ அவரும் சரி, அவரது உடல் நலத்தைப் பற்றிக் கேட்பதாகவே எண்ணுகிறோம். உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உள்ள ஆரோக்கியமே முக்கியமாகிறது. ஆனால் அந்த உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவனம் எடுப்பதில் அனைவருமே கொஞ்சம் தவறிவிடுகிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.


 ‘மன அழுத்தம்’ அதாவது, ஆங்கிலத்தில் depression எனும் உள்ளத்தாக்கத்தின் பாதிப்பை கொஞ்சம் குறைவாகவே கணிப்பிடுகிறோம். வாழ்க்கையின் தேடல்களுக்கான அவசர ஓட்டம், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்காக ஓய்வின்றி உழைத்தல் என்பன வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்வதினால்,  இவைகளின் தாக்கம்  உள்ளத்தில் ஏற்படும் அயர்ச்சியைக் கவனிக்கத் தவறுகிறோம். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் தாமுள்ள கட்டத்தில் தம்மை நோக்கிய அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வாழத் தலைப்படுவதன் மூலம் உள்ளத்தில் ஏற்படும் தாக்கங்களை கணக்கிலெடுக்காமல் அவற்றைப் புறந்தள்ள முற்படுகிறோம்.

சுமார் ஆறுவருடங்களின் முன்னால் பல வருடங்களின் பின் எனது தாய்மண்ணான இலங்கைக்கு விடுமுறையில் சென்றிருந்தேன். எனது பால்ய நண்பன் ஒருவனைச் சந்திப்பதற்காக, சற்றே மாறுதலுக்காக ஒரு சைக்கிள் மூலம் சென்றிருந்தேன். அங்கு அவனுடன் அமர்ந்து டீ அருந்திக்கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்குப் பின்னே அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன்,  ‘அண்ணா லண்டனிலிருந்தா வருகிறீர்கள்?’ என்று கேட்டான்.  ‘ஆமாம்’ என்று சொன்ன என்னை ஆச்சரியத்தோடு பார்த்து, ‘நம்ப முடியவில்லையே, லண்டனிலிருந்து வருபவர்கள் எல்லாம் பெரிய கார்களில் அல்லவா வருவார்கள் ? நீங்கள் பழைய சைக்கிளில் வருகிறீர்களே’ என்றான்.
இதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், அடுத்தவரை நோக்கிய ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமூகம் ஒருவரை எடைபோடும் தன்மை. இவைகளே ஒவ்வொரு மனிதரையும் தமது வாழ்க்கையின் தேவைகளை நோக்கிய தேடல்களுக்குள் தள்ளுகிறது. எமது உள்ளங்களில் இவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் இரண்டாம்பட்ச நிலை எய்துகிறது. மேலைநாடுகளில் இன்றைய காலகட்டங்களில் மனோவியாதி அதாவது, Mental Illness என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .

இதன் முக்கியத்துவத்தைச் சமூகத்தில் உணரவைப்பதற்காக மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்கள், இந்த வகையான மனஉளைச்சல்களுக்கு தாம் உள்ளாகியதை பகிரங்கமாக வெளிப்படுத்திப் பேசுவதன் மூலம் இதனை ஏற்றுக்கொள்வது ஒரு தாழ்வு மனப்பான்மையாகாது என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வகையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸின்  மைந்தர்களான இளவரசர்கள் வில்லியம், ஹரி இருவருமே தமது இளவயதில் தமது தாயார் லேடி டயானாவை இழந்ததன் விளைவாக தாமடைந்த மன அழுத்தத்தைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க செயலாகும்.

இவ்வகையான மன அழுத்தம் அல்லது Depression என்பது பற்றிய விழிப்புணர்வு எமது சமூகத்தினுள் சரியான வகையில் ஏற்பட்டிருக்கிறதா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. தாம் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்வது தமக்கும், தம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு கெளரவக் குறைச்சல் எனும் ஒரு மனநிலையே எமது சமூகங்களுக்குள் நிலவுகிறது. இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் மன அழுத்தம் என்பது அனைவராலும் எதிர்கொள்ளப்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்பதனைப் புரிந்துகொள்ள மறுக்கும் நிலையே தென்படுகிறது. இத்தகைய மனப்பான்மைக்கு கொடுக்கப்படும் விலையோ மிகப்பெரிது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால் லண்டனில் தென்பகுதியில் ஒரு தமிழ்ப்பெண்  தனது 4 வயது பெண் குழந்தையைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட ஒரு நிகழ்வு அனைத்து லண்டன்வாழ் தமிழ்ச் சமூகத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதேபோல சில வருடங்களின் முன்னால் ஒரு தமிழ்ப்பெண் தனது குழந்தைகளைக் கொலைசெய்த நிகழ்வும் அச்சமயம் தமிழ்ச் சமூகத்தினிடையே ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது..

அன்றாட வேலைகளில் தம்மை மூழ்கடித்துக்கொண்டு வாழும்போது இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடு வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு இடங்களில் குறைந்தளவு சீற்றத்துடன் வெளிப்படுத்தப்படுகிறது.  அதேபோல குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும், வசதியான வாழ்வினை அடைவதற்காகவும் ஓய்வின்றி உழைக்கும் ஆண்களுக்கு அனைத்துப் பெண்களுமே அனுசரணையாக இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே?
மன அழுத்தம் என்பது எமக்கு கெளரவ குறைச்சலான ஒரு மனநிலை எனும் எண்ணத்தை அறவே கைவிட்டு, இதனை எதிர்கொண்டு எப்படியும் வெல்லலாம் எனும் நம்பிக்கையோடு செயல்படுவதன் மூலமே வளரும் எமது இளஞ்சந்ததியின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வழிவகுக்க முடியும்.

 தியானம், யோகாசனம் போன்றவற்றில் எமது உள்ளத்தை ஈடுபடுத்துவதன் மூலம் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் என்பவனற்றிலிருந்து எம்மை வெளிக்கொணரலாம்.. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பார்கள். உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, உள்ள ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதன் மூலமே வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம். மகிழ்ச்சிக்கான வழிகளைத் தேடுகிறோம் என்று எண்ணி, உள்ளத்தின் அமைதியை விற்றுச் செல்வத்தைப் பெருக்கிக்கொள்வதல்ல வசதியான. வாழ்க்கை.
கொரோனா  என்பது ஒரு தற்காலிகத் தடையே.  அவசரமான எமது வாழ்க்கை ஓட்டத்தைக் கொஞ்சம் நிறுத்தி எமது இல்லங்களில் இருக்கும் அழகினை ரசிப்பதற்காக இயற்கை எமக்களித்த சந்தர்ப்பம் என்று எண்ணி,  ‘இதுவும் கடந்து போகும்’ எனும் நம்பிக்கையை நெஞ்சில் விதைப்பது ஒன்றே இந்த நிலையில் எமது உள்ளங்களைப் பாதுகாப்பதற்குரிய வழியாகும்.
நலந்தானா? உடலும், உள்ளமும் நலந்தானா? இப்போது இதற்கு ஒரு புதுக் கண்ணோட்டம் கிடைக்கிறது இல்லையா ?

Leave a Comment