நட்பு காதலாக மாறுவது நல்லதா..?

Image

உறவுகள் தொடர்கதை

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, குழந்தை போன்ற எந்த ஓர் உறவையும் தேர்வுசெய்யும் உரிமை மனிதனுக்கு இல்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் உடன்வரும் நட்பை மனிதர்கள் தேர்வுசெய்ய முடியும்.

வாழ்வின் உயர்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் உடன் வரும் நட்பை வாழ்வில் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்கிறோம். ஆனால் இவை எல்லாமே ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் நட்பாகப் பழகும்போதுதான். ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகுகிறோம் என்று சொன்னால் முகத்தில் புன்னகையுடன் வரவேற்றாலும் மனதுக்குள் சிரித்துக்கொள்பவர்களே அதிகம். ஏனென்றால் இன்றைய நட்பு… நாளைய காதல் என்பதுதான் பெரும்பாலோர் அறிந்துவைத்திருக்கும் உண்மை.

ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகமுடியாதா… அந்த நட்பு எப்படி காதலாக  மாறுகிறது… நட்பு காதலாக உருமாறுவது நல்லதுதானா…?

பள்ளி, கல்லூரி தொடங்கி வேலைசெய்யும் இடம் வரையிலும் ஆணும், பெண்ணும் இணைந்தே பணியாற்றவேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் ஒருவருடன் ஒருவர் பேசவும் பழகவும் அவசியம் நேர்கிறது. இந்த நேரங்களில் இருவருடைய ரசனையும் ஏதேனும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, அந்த மகிழ்ச்சி நட்பாக உருமாறுகிறது.

பள்ளி, கல்லூரி அல்லது பணியிடங்களில் மட்டுமே அந்த பழக்கம் நீடிக்கிறது என்றால், அதனை நட்பு என்று சொல்லமுடியாது. அந்த இடத்தைத் தாண்டி சினிமா, பீச், பூங்கா என்று  வேறு இடங்களிலும் சந்திப்பு தொடரும்போதுதான் அந்த உறவு நட்பாக மாறுகிறது. தற்செயலாக அல்லது வேண்டுமென்றே வெளியே சந்திப்பது, பண்டிகை, விழாவை காரணம்வைத்து ஒன்றுசேர்ந்து கொண்டாடும்போது நட்பு மேலும் நெருக்கமாகிறது.

நெருக்கம் மேலும் மேலும் அதிகரிக்கும்போது, அந்த நட்பு காதலாக உருமாற்றம் அடைகிறது. காதலை சொல்வதா வேண்டாமா என்ற மனப்போராட்டம் ஒருபுறம் என்றால் சொல்லப்பட்ட காதலை ஏற்பதா வேண்டாமா என்ற போராட்டம் ஒரு வகை.

காதலுக்கும் நட்புக்குமான எல்லைக்கோடு எது, எப்போது நட்பு காதலாக மாற்றம் அடைகிறது..?

பெரும்பாலும், உடல்நிலை சரியில்லாத நேரங்களில், தோல்வி, ஏமாற்றம் போன்ற சூழலில் காட்டப்படும் பரிவு, பாசம், உடனிருக்கும் நெருக்கம் போன்றவை நட்பு என்ற பந்தத்தை காதலை நோக்கி இழுத்துச்செல்கிறது.

காதல், நட்புக்கு இடையே எல்லைக்கோடு எதுவுமே கிடையாது. ஏனென்றால், இரண்டுக்குமான அடிப்படை கோட்பாடு பிரதிபலன் பாராது அன்பு செலுத்துவது மட்டும்தான். குறிப்பிட்ட வயது வரையிலும் தன் தந்தையைப் போன்ற மணமகன் வேண்டும் என்று நினைக்கும் பெண், சரியான நண்பனைக் கண்டதும், இவனைப்போன்ற கணவன் வேண்டும் என்று நினைக்கிறாள். இதற்குக் காரணம், அவனது பொறுப்புணர்வாக இருக்கலாம். குறிப்பாக அப்பாவை போலவே தன்னை கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், பெண் காதலிக்கத் தொடங்குகிறாள்.

பொதுவாக ஆண்கள் நட்பாக இருக்கும் பெண்ணிடம் அழகையும் நளினத்தையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அழகு, கவர்ச்சி, ஸ்டைல் போன்றவை காதலிக்கும் பெண்ணிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஏதேனும் ஒரு கட்டத்தில் நட்பாக இருக்கும் பெண்ணிடம் வித்தியாசமான அழகை, அம்மாவிடம் கிடைக்கும் கனிவை காணும்போது, காதலில் விழுகிறார்கள்.

நட்பு காதலாக மாறுவது ஒரு கணத்தில் நிகழ்ந்துவிட்டாலும், மனதில் உள்ள காதலை சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் ரொம்பவே நீடிக்கும்.

ஏனென்றால், காதலை சொல்வதால் இன்றைய நட்புக்குப் பாதிப்பு வரலாம், தன்னை மட்டமாக நினைத்துவிடலாம், இதற்குத்தான் திட்டம்போட்டு பழகியதாக நினைக்கலாம் என்று பயந்தே பலர் காதல் ஆசையை மனதுக்குள் போட்டு மறைத்துக் கொள்கிறார்கள். இப்படி எத்தனையோ காதல் செத்துப் போயுள்ளன.

காதல் எனும் உணர்வு உண்மையில் மிகவும் உயர்வான உறவு. எனவே மனதில் காதல் வந்துவிட்டால், அதனை மறைத்துவைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அது காதல் தானா அல்லது உடல் கவர்ச்சியா என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொண்டால் மட்டும் போதும். ஏனென்றால், யாருமற்ற தனிமை சில நேரங்களில் காதல் போன்று கண்ணைக் கட்டி விளையாடும். எனவே, உடலைத் தாண்டி சம்பந்தப்பட்ட நபருடன் காலம் முழுக்க சேர்ந்து வாழும் விருப்பம் இருக்கிறதா… எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தாங்கிக்கொள்ளும் உறுதி இருக்கிறதா என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு காதலைச் சொல்ல முன்வர வேண்டும்.

நட்பாக பழகியவர்கள் திருமணம் செய்வது ஒரு வகையில் மிகவும் சரியானது. தெரியாத பேயைவிட தெரிந்த பிசாசு மேல் என்பது போன்று யாரோ முகம் தெரியாதவரை திருமணம் முடிப்பதைவிட, ஓரளவு அறிந்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். என்ன பிடிக்கும், பிடிக்காது, எப்படிப்பட்ட குணம் போன்ற பலதும் நன்றாகவே தெரியும். மேலும் நட்பு பட்டியலில் இருப்பவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோருடனும் ஓரளவு அறிமுகம் இருக்கும். திருமண நேரத்தில் உண்டாகும் தேவையற்ற மனப்பதட்டம், படபடப்பை இது குறைத்துவிடும்

ஒவ்வொரு நபரிடமும் சின்னச்சின்ன குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். முன்கோபம், அதிகம் செலவழிப்பது, அதிகம் பேசுவது போன்ற பிரச்னைகளை ஏற்கெனவே அறிந்திருப்பதால், குறைகளுடன் ஏற்றுக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது. பிறந்த வீட்டில் இருக்கும்போது இருந்த இயல்பான மனநிலையிலே, புகுந்த வீட்டிலும் இருக்கமுடியும். குறிப்பாக யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளவும், சூழலுக்கேற்ப நடிக்கவேண்டிய அவசியமும் இருக்காது.

இத்தனை நன்மைகளைக் கணக்கிடும்போது, நட்பு திருமணத்தில் முடிவதால் உண்டாகும் தீமைகள் மிகவும் குறைவுதான். ‘இதுக்குத்தான் நட்புன்னு நடிச்சாங்களா…’, ‘எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும், சுத்திவளைச்சு இங்கதான் வருவாங்கன்னு’ என்பது போன்ற சில விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கலாம். அவ்வளவுதான்.

எனவே, நட்பு காதலாக மாறினால், கலங்காமல் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா என்று மறைமுகமாக கேளுங்கள்.  இதனை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நேரடியாகப் பேசுங்கள்.  பெரும்பாலும் நீங்கள் விரும்பும் பதிலே பதிலாக கிடைக்கும். அப்படியில்லை என்றால் நட்பு நிலையில் தொடருங்கள்.

வேண்டாம் என்ற பதில் மனதுக்கு வலித்தாலும், அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனதில் பூத்த காதல் இன்னமும் நண்பன் மனதில் பூக்கவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். அதற்கு சில காலம் ஆகலாம், ஆகாமலும் போகலாம். அதுவரை காத்திருங்கள். காத்திருப்பதுதான் காதலின் ஆகப்பெரும் சுகம். காதல் தோல்வி அடைந்தாலும் சந்தோஷமாக அனுபவியுங்கள். ஏனென்றால், இந்த உலகில் நூற்றுக்கு தொன்னூறு காதல்கள் தோற்றுத்தான் போகின்றன.

ஒருவரது எண்ணத்திற்கும் கனவுகளுக்கும் மரியாதை கொடுக்கவேண்டியது நட்பின் முதல் அடையாளம். எனவே ஒருவர் காதலிக்கவில்லை என்றதும் நட்பில் இருந்து விலகுவது, பார்க்கும் நேரங்களில் எல்லாம் காதலிக்கச்சொல்லி வற்புறுத்துவது, காதலிக்கத்தூண்டும் வேறு முயற்சிகளில் ஈடுபடுவது போன்றவை வேண்டவே வேண்டாம்.

நட்பு காதலாக மாறும் தருணங்களில் பெண்ணை விட ஆண் மிகவும் தயங்குகிறான். ஆகவே, இந்த விஷயத்தில் பெண் முதலில் முன்வந்து பேசுவது தவறில்லை.

நண்பன் அல்லது தோழி வாழ்க்கைத் துணையாக அமைந்தால், அந்த வாழ்க்கை அலாதியானது. அப்படி அமையவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். நட்பைத் தரும் நல்ல துணை கிடைக்கும்.

Leave a Comment