மியூசிக் சர்ச்சை
இஸ்லாமியர்கள் சிலர் இந்து பாட்டு பாடிய வீடியோ மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் வீடியோ விவகாரத்தை அடுத்து, இஸ்லாமியில் இசைக்குத் தடை இருக்கிறதா இல்லையா என்று ஒரு சர்ச்சை பலமாக எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிரபல மனித உரிமைப் போராளி ஸ்ரீதர் சுப்பிரமணியம், ‘’முஸ்லிம்கள் பாடுவதற்கும் இசைக் கருவிகளை இசைப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை என்று நிறுவுவதற்கு குர் ஆனில் இருந்து குறிப்புகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் இசை ஹராம் இல்லை என்று சக முஸ்லிம்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன?
இசை இஸ்லாத்துக்கு ஒவ்வாதது என்று பல அறிஞர்கள் நிறுவி இருக்கிறார்கள். குர்ஆனுக்கு உரை எழுதியிருக்கும் தப்சீர், இபின் கதிர், மாரிஃப், இமாம் அல் ஆகியோர் இசைக்கு அனுமதி இல்லை என்றே கூறுகிறார்கள். குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பார்க்கப்படும் புனித நூலான ஹதீஸ், நபிகளின் வாழ்க்கைக் குறிப்புகள் பற்றியது. இதிலும் இசைக்கு எதிரான வரிகள் கிடைக்கின்றன. இதில் ஹராம் என்று சொல்லப்படும் விஷயங்களான மணம் தாண்டிய உறவு, பட்டுத் துணி, மது இவற்றுடன் இசைக் கருவிகளும் இணைத்துக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே இஸ்லாத்தில் இசை ஹராம் இல்லை என்று சொல்பவர்கள் ஏதோ ஆறுதல் சொல்ல முயற்சிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி சொன்னதும் உடனே இஸ்லாம் இசைக்கு எதிரானது என்று நிரூபணம் ஆகி விட்டது என்று வீட்டில் உள்ள புளூடூத் ஸ்பீக்கர்களை உடைக்க முனைய வேண்டாம். என்னைப் பொருத்தவரை இசை அனுமதிக்கப்பட்டது என்பதற்கு குர்ஆன் வரிகளைத் தேடுவதும், தடை செய்யப்பட்டது என்பதற்கு குர்ஆன் வரிகளைத் தேடுவதும், இரண்டுமே தவறு என்று கருதுகிறேன்.
காரணம், இப்படி பண்டைய நூல்களில் இருந்து நவீன வாழ்வுக்கு குறிப்புகள் எடுக்க முயற்சிப்பது சோக அவலம். குர்ஆன் சொல்வதெல்லாம் இருக்கட்டும்; நவீன உலகின் தேவைகளுக்கேற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க வேண்டும். அது எப்படி செய்வது? இறைவனே சொல்லிட்டாரே! என்று வாதிடலாம்.
இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் கொடுக்கிறேன். பகவத் கீதையில் கிருஷ்ணர் வர்ணாசிரம தர்மத்தை போற்றிப் பேசுகிறார். இதர வர்ணத்தவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருப்பது மட்டுமே சூத்திரர்களின் கடமை என்று ஆணையிடுகிறார். ‘நான்கு வர்ணங்களையும் நான்தான் உருவாக்கினேன்,’ என்று வாக்குமூலம் வேறு கொடுக்கிறார். ஆனால் இந்திய அரசியல் சாசனம் இந்த வர்ணங்களை மறுதலித்து இயங்குகிறது. அதாவது, கீதைக்கு எதிராக இயங்குகிறது. பகவான் கிருஷ்ணரே சொல்லி விட்டார், எனவே சூத்திரர்கள் கல்வி பயிலக் கூடாது, சக வர்ணத்தவர்களுக்கு இணையாக அலுவலகங்களில் பணி செய்யக் கூடாது என்று யாரும் கீதையை உதாரணம் காட்டி எழுதுவதில்லை.
தீவிர இந்துத்துவம் பேசுபவர்கள் கூட இன்றைக்கு அப்படி வாதிடுவதில்லை. பிறப்பால் அனைவரும் சமம் எனும் அரசியல் சாசன வலியுறுத்தலை ஏற்றுதான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில பல பிராமண சாஸ்திரிகள் கும்பல்கள் மட்டுமே இன்றைக்கும் அப்படி புலம்பித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யாராவது கீதையை சுட்டிக் காட்டி ‘பகவான் கிருஷணரே சாதி பார்க்கிறவர்தான். எனவே நாம் எல்லாரும் சாதி பார்க்க வேண்டும்,’ என்று எந்த இந்துவும் வாதிடுவதில்லை.
அதே சமயம் கீதையை எழுதியது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்தான் என்று ஆன்மீகம் பின்பற்றும் அனைத்து இந்துக்களும் நம்புகிறார்கள். அதே நம்பிக்கையுடனேயே கிருஷ்ணரின் சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடுகளை ஒதுக்கி இயங்க முயற்சி செய்கிறார்கள். அதைத்தான் முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
குர்ஆன் இதை சொல்லவில்லை. அதை அந்த அர்த்தத்தில்தான் சொல்கிறது என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டுவது நிற்க வேண்டும். குர்ஆன் எழுதப்பட்ட காலம், அதில் குறிப்பிடப்படும் விஷயங்களின் வரலாற்றுப் பின்னணி போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் அது அணுகப்பட வேண்டும்.
குர்ஆன் எக்காலத்துக்கும் உகந்த, அனைத்து சூழலுக்கும் பொருந்தும் புத்தகம் கிடையாது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI ஐ எப்படி அணுக வேண்டும் என்பதற்கு குர்ஆனில் வழிகாட்டுதல் கிடையாது. போலவே, போர் விமானங்களை இயக்கலாமா, தடுப்பு ஊசிகள் போட்டுக் கொள்ளலாமா, கம்ப்யூட்டர் பயன்படுத்தலாமா, தொழிற்சாலையில் உருவாக்கிய சிப்ஸ்கள் சாப்பிடலாமா? காதில் புளூடூத் ஹெட்செட் அணியலாமா? சம்மரில் ஏசி போடலாமா? ஜெனெடிக் இன்ஜினியரிங் படிக்கலாமா, டெனிம் ஜீன்ஸ் அணியலாமா? விண்வெளிக்கு பயணம் போகலாமா? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவை எதற்கும் குர்ஆனிடம் விடை இருக்காது.
இப்படி எல்லாம் பல விஷயங்கள் எதிர்காலத்தில் வரும் என்பது குர்ஆன் எழுதியவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி இருக்கையில் இசை கேட்கலாமா கூடாதா என்பதை மட்டும் குர்ஆன் தெளிவுபடுத்துமா என்று ஏன் தேட வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்.
சரியான கேள்வி.