ஞானகுரு தரிசனம்
ஆற்றில் காலை நனைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. அவருக்குப் பின்னே வந்து நின்ற மகேந்திரன், சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சியைக் கண்டு வியந்தார்.
‘’எத்தனை அற்புதங்கள் இந்த வனத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவை எல்லாம் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் அற்புதக் கொடை. இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைத்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே, அவரை வணங்கத் தேவையில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், கண் முன்னே தெரியும் இயற்கையை வணங்குவது நல்லதுதானே..?’’ சந்தேகம் கேட்டபடி அருகே அமர்ந்தார் மகேந்திரன்.
‘’எதையாவது வணங்கியே தீரவேண்டும் என்பது கட்டாயமா..?’’
‘’அப்படியில்லை. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி சொல்கிறோம். அதேபோல், நமக்கு இயற்கை அளித்திருக்கும் கொடைக்கு நன்றி தெரிவிப்பது போன்று வணங்குவதில் தவறு இல்லையே… இயற்கையைப் பாதுகாப்பதும் நம்முடைய கடமைதானே…’’
‘’உனக்கு ஒரு கதை சொல்கிறேன், கேள். ஒரு வீட்டில் நீண்டகாலமாக வசித்துவந்த எறும்புகளுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. இந்த வீட்டுக்காரன் தினமும் கீழே சிந்தும் பருக்கைகளே நமக்கு உணவாகக் கிடைக்கிறது. இவனால்தான் நாம் குடும்பம், குட்டிகளோடு நன்றாக இருக்கிறோம். இந்த மனிதனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று ஆலோசனை செய்தன.
இந்த மனிதனுக்கு என்ன பிடிக்கும் என்று நீண்ட நேரம் யோசித்துப்பார்த்து, ‘தேனடைகள் மிகவும் சுவையானவை. எனவே தேனடையைத் தேடிக் கண்டுபிடித்து கொடுப்போம்’ என்று முடிவெடுத்து காடுகளில் தேடின. ஒரு தேனியின் கூட்டை கண்டுபிடித்து, அதிலிருந்து குட்டியூண்டு தேனடையை இழுக்க முடியாமல் இழுத்துக்கொண்டு குடிசைக்குள் வந்து சேர்ந்தன.
உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதன், குட்டியூண்டு தேனடையை எறும்புகள் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்தான். ‘இந்த எறும்புகளோடு ரொம்பவும் தொல்லையாகிப் போச்சு’ என்று எழுந்தவன் ஹிட் எடுத்துவந்து எறும்புகளின் வழி முழுவதும் புஸ்புஸ்ஸென அடித்தான். அவ்வளவுதான், ஒட்டுமொத்த எறும்புகளும் செத்துவிட்டன. அந்த எறும்புகளின் செயல் அர்த்தமுள்ளதா என்று சொல்…’’ கேட்டார் ஞானகுரு.
‘’தேவையில்லாத வேலை என்கிறீர்களா..?’’
‘’ஆம். மனிதனை ஒப்பிடுகையில் இந்த பிரபஞ்சம் ரொம்பவே பிரமாண்டமானது. நாம் அனுபவிக்கும் எல்லாமே இந்த இயற்கையுடையது. இந்த இயற்கை கொடுத்ததை, அதற்கே திருப்பிக்கொடுப்பதை நன்றி என்று நினைக்கிறாயா..? உண்மையில் இயற்கைக்கு என்ன தேவை என்று உனக்குத் தெரியுமா..? அதை உன்னால் தர முடியுமா?
இயற்கை உருவாக்கும் மழை, வெள்ளம், புயல், பூகம்பம், சுனாமி போன்ற அசம்பாவிதங்களை மனிதனால் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. இயற்கை மனிதனுக்குத் தீமை விளைகிறது என்பதற்காக, அதனை தூற்றுவாயா..?
இயற்கை அதன் வழியில் செயல்படுகிறது. அதை நன்மையாகவும் தீமையாகவும் எடுத்துக்கொள்வது மனிதன் மட்டுமே. எந்த உயிர்களின் வேண்டுதலையும், விருப்பங்களையும் இயற்கை ஒருபோதும் கண்டுகொள்வதே இல்லை. எந்த உயிரையும்விட மனிதன் மேலானவன் இல்லை. ஏனென்றால், கரப்பான் பூச்சியுடன் மனிதனை ஒப்பிட்டுப்பார்த்தால், அவையே மனிதனைவிட அதிகம் தாக்குப்பிடிக்கும் சக்தியுடன் உள்ளன.
ஆகவே, இயற்கைக்கு மனிதன் ஒன்றும் ஸ்பெஷல் விருப்பம் அல்ல. மனிதர்கள் நடத்திய போரில் இறந்த மனிதர்கள் எண்ணிக்கையைவிட புயல், பூகம்பம், வெள்ளத்தினால் இறந்த மனிதர்களே அதிகம். மேலும், டைனோசரஸ், மாமூத் போன்ற எத்தனையோ உயிரினங்களை இந்த இயற்கை உருத்தெரியாமல் அழித்தொழித்திருக்கிறது தெரியுமா..?
இத்தனை சக்தியும் பலமும் கொண்ட இயற்கையை நீ வணங்குவதும், பாதுகாப்பதற்கு முயற்சி செய்வதும் அர்த்தமற்ற செயல். ஒரு மனிதனாக உன்னுடைய கடமையைச் செய். இயற்கையை ரசி. உன் வாழ்க்கையை வாழு, அது போதும்..’’ என்று சிரித்தார் ஞானகுரு.
மகேந்திரனுக்கு இப்போது இயற்கையின் பரிணாமம் வேறாகத் தெரிந்தது.