இயற்கையை நேசிப்போம்.
கடந்த 2015 சென்னை பெருவெள்ளத்தினால் சென்னை மக்கள் அளவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டது உண்மை. அதற்காக ஒவ்வொரு மழை அறிவிப்புக்கும் காரைக் கொண்டுபோய் பாலத்தில் நிறுத்துவதும் பால், சர்க்கரை, மெழுகுவத்தி என்று கடையைக் காலி செய்வதும் அநியாயம் என்றால், அதைவிடக் கொடுமை மழை வரக்கூடாது என்று வேண்டுவதும், மழை கணிப்பு பொய்த்துப் போனால் மகிழ்ச்சி அடைவதும் ஆகும்.
தமிழகத்துக்கு உயிர் நாடி வடகிழக்கு பருவமழை. இந்த மழையின் அடிப்படையில் தான் அடுத்த ஒருவருடத்துக்கான நிலத்தடி நீர் சேமிப்பு இருக்கும். அதோடு ஏரி,, கண்மாய்கள், குளங்கள் என நிரம்பும். மழை தவிர தண்ணீருக்கு எந்த வழியும் இல்லை என்பதாலே பிரமாண்ட ஏரிகளை அன்றே வெட்டிவைத்தார்கள். இந்த மழை இல்லையென்றால் தமிழகம் இல்லை,
இப்போது போதிய மழை இல்லையென்றால் அடுத்து மார்ச், ஏப்ரல் மாதமே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிவிடும். குடத்தை எடுத்துக்கொண்டு லாரிக்குப் பின் ஓட வேண்டிய பரிதாபம் ஏற்படும். எனவே, இந்த மழை மிக மிக முக்கியம். மழையில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று யோசிக்கலாமே தவிர, மழை வேண்டாம் என்று எதிர்ப்பு காட்டாதீர்கள்.
மழை பொழிவதையும் தண்ணீர் நிற்பதையும் ஏதோ அந்நியப் படையெடுப்பு நடந்து மக்கள் உயிருக்கு அஞ்சி நடுங்குவது போன்று மீடியாக்கள் பயமுறுத்துகின்றன. இவை எல்லாமே கற்பனை. மழையில் நனைவது நல்ல அனுபவம். தண்ணீர் எவ்வளவு வந்தாலும் வரவு வைப்போம். மிஞ்சிய தண்ணீர் தானாகவே கடலுக்குச் சென்றுவிடும்.
மனிதர்கள் பிரார்த்தனையை இயற்கைக் கேட்கப்போவதில்லை. அதன் இஷடத்துக்குப் பெய்யும் பெய்யாமல் போகும். ஆனால், மழை மீது வெறுப்பை வளர்க்காதீர்கள். அது, நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் குழி.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்”
என மலர்தூவி பாடி அதனை வரவேற்போம்,