தை பொங்கல் சிந்தனை
ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘’இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள் குருவே… தமிழர் பண்டிகை என்றாலே தனி உற்சாகம் வந்துவிடுகிறது. சூரியனுக்கு நன்றி சொல்வது எத்தனை உயரிய பண்பு. அதோடு, தமிழர் பண்பாட்டை உரக்கச் சொல்லும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்கையில் பெருமையாக இருக்கிறது’’ என்றபடி அருகில் அமர்ந்தார்.
‘’உதவி செய்தவர்களுக்கு மனதார நன்றி சொல்வது மிக உயர்ந்த பழக்கம். உயிர்களின் ஆதார சக்தியே சூரியன் என்பதை உணர்ந்து, அதற்கு நன்றி சொல்லும் தமிழரின் பண்பு. பாராட்டுக்குரியது. ஆகவே, சாதி, சமய, மொழி வேறுபாடு இன்றி அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ வேண்டிய பண்டிகை.
அதேநேரம், ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் நன்றி சொல்வதால் சூரியனுக்கு எந்த கூடுதல் நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதனால் இந்த நன்றியை சக மனிதர்களுக்குக் காட்டுவது மிகவும் நல்லது. சக மனிதர்களின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லையென்றால் இப்படியொரு சொகுசான வாழ்க்கை கிடைத்திருக்காது. அதனால் இந்த நாளை பெற்றோர், உறவுகள், நட்புகள் மற்றும் அறிந்தோர் தெரிந்தோர் அனைவருக்கும் நன்றி சொல்லலாம். இந்த நன்றி ஆயிரம் மடங்கு உதவியாகத் திரும்பிவருவதற்கு வாய்ப்பு உண்டு.
பொதுவாக மனிதர்கள் நன்றியை எதிர்பார்த்தே உதவி செய்கிறார்கள். நன்றி கிடைக்கையில் மீண்டும் மீண்டும் அதிக உதவிகள் செய்கிறார்கள். மனிதர்களுக்கு மட்டுமின்றி நம்மை அண்டியிருக்கும் உயிரினங்களுக்கும் மனதார நன்றி சொல்லலாம். உண்ணும் உணவுக்கு நன்றி சொல்லலாம். என்ன பொருட்கள் எல்லாம் நம்மிடம் தங்கியிருக்கிறதோ அவற்றுக்கு நன்றி சொல்லலாம். …’’
‘’பொருட்களுக்கு நன்றி சொல்வது மூட நம்பிக்கை இல்லையா..?’’
‘’சூரியனுக்கு நன்றி சொல்வது மூட நம்பிக்கை என்றால் இதுவும் மூட நம்பிக்கையே….’’ என்றார் ஞானகுரு.