பழக்கமே பாதகம்
பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. அதனால்தான் நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ எதையுமே பழகிக்கொள்ள வேண்டாம் என்கிறார்கள். மூன்று வேளை சாப்பாடு என்ற பழக்கத்தில் சிக்கிக்கொண்ட காரணத்தால்தான் மனிதன் நாயாய், பேயாய் நிம்மதியின்றி அலைகிறார்கள்.
குடி அடிமையாக மாறியவருக்கு நான்கு மாதங்கள் சிகிச்சை மையத்தில் வைத்து மருந்துகள் கொடுத்தாலும், திரும்பிவந்த சில மாதங்களில் அவன் மீண்டும் குடிப்பழக்கத்தில் ஈடுபடுவது ஏன் தெரியுமா? அவர் தலைக்குள் குடிப்பழக்கத்தை ஆழமாக திணித்துக்கொண்டதுதான். குடி வட்டத்திற்குள் சுற்றுவது அவருக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. கெட்ட பழக்கம் மட்டுமல்ல, நல்ல பழக்கத்தையும் தேவைப்படும்போது கைவிட கற்கவில்லை என்றால் சிக்கல்தான்.
அதனால் பழக்கத்தில் நல்லது, கெட்டது என எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை. காலையில் எழுந்து குளித்து முடித்தபிறகுதான் சாப்பிடவே முடியும், பல் தேய்த்தபிறகுதான் காபி குடிக்க முடியும் என்றெல்லாம் சிலர் நியதி ஏற்படுத்திக்கொள்வதுண்டு. இவற்றை நல்ல பழக்கம் என்று அவர்களாக கடைப்பிடித்தால், திடீர் பயணங்களில் இதுவே மகா இம்சையாக மாறிவிடும்.
அதற்காக பழக்கங்களை எல்லாம் தூரப்போட வேண்டியதில்லை. தேவைப்படும் பட்சத்தில் நல்ல பழக்கத்தையும் தீய பழக்கத்தையும் தள்ளிவைக்கத் தெரியவேண்டும்.
? அப்படியென்றால் எதுவுமே நல்ல பழக்கம் கிடையாதா?
நன்மை செய்வது நல்ல பழக்கம், தீமை செய்வது கெட்ட பழக்கம் என்றுதான் மனிதன் பிரித்துப்பார்க்கிறான். அதனால் நல்ல பழக்கங்களை வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்றும் தீய பழக்கங்களை தூக்கி வீசவேண்டும் என்றும் முயற்சிக்கிறான். எந்த ஒரு பழக்கத்தையும் தூக்கியெறியும் திறனை வளர்த்துக்கொண்டால் எல்லா பழக்கமும் நல்லதாகவே மாறிவிடும்.
? பழக்கத்தை கைவிடுவது எப்படி?
நீயே உருவாக்கிய பழக்கம். அதனால் உன்னால் நிச்சயம் அதை கைவிடவும் முடியும். எந்த ஒரு பழக்கத்தையும் முற்றிலும் கைவிடுவது உடனடியாக நடவாத காரியம். அதனால் அந்த பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படுத்த வேண்டும். சிகரெட்டை நிறுத்த கொஞ்ச நாட்கள் பாக்கு பயன்படுத்துவது போல் பழக்கத்தை சீரமைப்பு செய்யவேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், உண்மையிலே உள்மனதில் பழக்கத்தை கைவிடுவதற்கான ஆசையும் ஆர்வமும் இருக்கவேண்டும். பிறருக்காக அல்லது தன்னை ஏமாற்றிக்கொள்ள பழக்கத்தை கைவிடுபவன் மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது உறுதி.
? எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்தமுடியுமா?
இதை வெகு எளிதாக நிறுத்தலாம். உன்னைவிட வலிமையானவன், பணக்காரன், மேலதிகாரி போன்றவர்களிடம் மட்டுமே கோபப்படுவது என்று முதலில் உன் வட்டத்தை சுருக்கிக்கொள். இதை மட்டும் உறுதியாக கடைப்பிடித்தால் நிச்சயம் கோபம் அடங்கிவிடும். நாய் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவதுபோல் உன் கோபமும் தானாக ஓடிவிடும்.
? என்னிடம் பொறாமை குணம் ரொம்பவே இருக்கிறது, நான் மீண்டுவர நினைத்தாலும் முடியவில்லையே?
உன்னால் முடியவில்லை என்ற சமாதானம் இருக்கும்வரை நிச்சயம் அந்தக் குணத்தில் இருந்து வெளிவர மாட்டாய். பொறாமைப்படுவது ஒரு சாதாரண பழக்கம், அதைக்கூட விடமுடியாதா என்று உன்னையே நீ கேட்டுப்பார். பொறாமை குணம் உன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள். அதை நீ அடிமைப்படுத்துவதா அல்லது நீ அதன் அடிமையாகவே இருப்பதா என்பதை முடிவு செய். உன்னால் பொறாமைப்படும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை என்றால், நீ அந்த குணத்தை ரொம்பவே ரசிக்கிறாய், விரும்புகிறாய், தலைவணங்குகிறாய் என்றுதான் அர்த்தம்.
? பழக்கம் எப்படி தோன்றுகிறது?
உன்னுடைய ஆசை அல்லது உன்னுடைய பெற்றோரின் ஆசை உன்னிடம் பழக்கமாக மாறுகிறது. உன்னிடம் தோன்றும் ஆசைகளை ஆரம்பகட்டத்தில் நிராகரிக்கத் தொடங்கினால் எந்தப் பழக்கமும் குறிப்பாக கெட்ட பழக்கங்கள் உன்னிடம் தோன்றாது. அழகான பெண்ணைப் பார்த்ததும் ஆசைப்படுவது ஒரு போதை. ஆரம்ப காலங்களில் இது ஒரு சாதாரண போதையாகத் தெரியும். இந்த ஆசையை உனக்குள் வளர்த்துக்கொண்டே சென்றால், தாழ்வான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
அழகான பெண்ணை அடைவது எப்படி என்று மனம் குறுக்குவழியில் ஓடும். அக்கம்பக்கத்தில் அழகான பெண் இருந்தால் அவளை எப்படி கவிழ்க்கலாம் என்று மனம் திட்டம் போடும். சாதாரண ஆசையே, போதையாக மாறி காம இச்சையாக மாறி வெறியனாக மாற்றி உன்னை தவறுகள் செய்யத்தூண்டும். அழகான பெண்ணை அடைந்துவிட்டால், அதுபோல் இன்னும் வேறு யாரை அடையலாம் என்று தேடுவாய். அழகான பெண்களை கெடுப்பது அதன்பிறகு உனக்கு பழக்கமாகிவிடும். என்றேனும் ஒரு முறை நீ சமூகத்தில் மாட்டிக்கொள்ளும்போது, பெண் வாடையே கிடைக்காத சிறையில் தங்கவேண்டிய அவலம் நேர்ந்துவிடும். அதனால் ஆசைகளை அடக்கினாலே பழக்கம் எனும் சிறையில் இருந்து விடுபடலாம்.
? பழக்கத்தில் இருந்து அனைவரும் விடுபட முடியுமா?
ஒரு தேர்ச்சி பெற்ற நீச்சல்காரனால் ஆறு, குளம், கண்மாய், கடல் என்ற அனைத்து நீர்நிலைகளிலும் நிச்சயம் நீந்தி கரைசேர முடியும். அதுபோல் நீயும் மனதை திடமாக்கி வைத்திருந்தால் எத்தகைய பழக்கத்தில் இருந்தும் வெளிவர முடியும்.