ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..?
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெளியிடும் நாணயத்தில் இந்தி எழுத்துக்கள் இருப்பதை அடுத்து, ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 300 முறை சொல்லும் முதல்வர் ஸ்டாலின் இந்திக்கு முக்கியத்துவம் தருகிறார். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு என்று வந்தால் இந்தி பற்றி கவலை கொள்ளமாட்டார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நாங்கள் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறோம் நீங்கள் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறியதும் புறக்கணிப்பு முடிவை விட்டுவிட்டு விருந்தில் திமுக பங்கேற்றது. இரட்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக. இதில் இருந்தே திமுக பாஜக ரகசிய உறவு வெளிப்படையாக தெரிகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் எல்லாம் திமுகவோடு இணைந்து விட்டன. அந்த கட்சிகளுக்கு தனித்தன்மையே கிடையாது. மக்களுடைய எந்த பிரச்சனைக்கும் அவர்கள் குரல் கொடுப்பதில்லை, அவர்களுக்கு வேண்டியது பதவி,அதிகாரம் மட்டும் தான்…’’ என்று வரிசையாக போட்டுத் தாக்கியிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. பற்றி விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியை பாராட்டியிருக்கும் பிரதமர் மோடி பற்றி எந்தக் குற்றச்சாட்டும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.