உழைப்பு மட்டும் வெற்றிக்குப் போதுமா..?

Image

ஆசிரியர் பக்கம்

வெற்றிக்குத் தேவை என்னவென்று ஜெயித்தவர்களிடம் கேட்டால், ‘கடுமையான உழைப்பு’ என்று சொல்கிறார்கள். தோல்வி அடைந்தவர்களிடம் கேட்டால், ‘அதிர்ஷ்டம் தேவை’ என்கிறார்கள்.

இதில் எது உண்மை?

பிரபல் இந்தி நடிகர் அமிதாப்பச்சனிடம், ‘உங்கள் மகன் அபிஷேக் பச்சனால் ஏன் உங்களைப் போன்று சூப்பர்ஸ்டாராக மாற முடியவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அந்தக் காரணம் தெரிந்திருந்தால் அவன் என்னைப் போன்று வெற்றி பெற்றிருப்பான்’ என்று ஜாலியாகக் கூறினார்.

உண்மை என்ன தெரியுமா?

எல்லா மனிதருக்கும் ஏதேனும் ஒரு செயலில் தனித்துவம் இருக்கும். அந்த செயலை  தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும்போது, அது திறமையாக மாறிவிடுகிறது. அந்த திறமை வெளிப்படுத்துவதற்கு சரியான வாய்ப்பு அமையும் வரையிலும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். சரியான வாய்ப்புக்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

மாபெரும் சாதனை படைத்தவர்கள் வாழ்க்கையைக் கூர்ந்துபார்த்தால், அவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான திறமையுடன் இருந்ததாலே ஜெயித்திருப்பதைக் காணமுடியும்.

அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் தங்கள் முழுத் திறமையையும் காட்டும் நபர்கள் வெற்றியைத் தொடுகிறார்கள். சரியான வாய்ப்பு கிடைத்தும் திறமையைக் காட்ட முடியாத நபர்கள் தோற்றுப் போகிறார்கள்.

அப்படியொரு வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா?

கிடைக்கும் என்பது உறுதியில்லை, கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால், கிடைக்கும் என்ற நம்பிக்கையே முக்கியம். இந்த வாய்ப்பை அதிர்ஷ்டம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், திறமையே இல்லாத நபரையும் ஜெயிக்க வைப்பதே அதிர்ஷ்டம். அப்படி யாரும் இது வரை சாதனை படைத்ததே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உங்களுடைய கதவு திறக்கப்படும் நேரத்துக்குக் காத்திருங்கள். ஒருவேளை கதவு திறக்கப்படவில்லை என்றாலும் எதுவும் குறையில்லை. தலை விழுந்தால் நீங்கள் விளையாட்டை தேர்வு செய்வீர்கள். பூ விழுந்தால் விளையாட்டு உங்களைத் தேர்வு செய்யும். அவ்வளவு தான் வித்தியாசம்.

ஏதேனும் வகையில் விளையாடுவது தான் மகிழ்ச்சி.

Leave a Comment