சுற்றுலா செல்வதும் ஒய்வு எடுப்பதும் ஒன்றா…?

Image

குட்டிக் கதை

கோடை விடுப்பு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம், விடுமுறையை எப்படி கழித்தீர்கள் என்று ஆசிரியர் கேட்பதுண்டு.

ஓவிய வகுப்பு, கிரிக்கெட் கோச்சிங், நடன வகுப்பு என்று ஆளாளுக்கு ஒன்று நிச்சயம் சொல்வார்கள். கல்வி கற்பதில் இருந்து ஓய்வு வேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் அந்த நாட்களிலும் எதையாவது கற்கச்சொல்லி பிள்ளைகளை வெளியே விரட்டுகிறார்கள் பெற்றோர்கள். இப்படி எதையாவது கற்பதுதான், விடுமுறையின் நோக்கம் என பெற்றோர்கள் நினைப்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை.

இதற்கு காரணம் பெரியவர்களுக்கும் ஓய்வு என்பதன் அர்த்தமே தெரிவதில்லை. அதனால்தான் ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் வேலைக்கு செல்லவேண்டியதில்லை என்ற அளவில்தான் சந்தோஷப்படுகிறார்கள். வேலை செய்வது அவர்களைப் பொறுத்தவரை கடுமையான சுமை. ஏனென்றால் செய்யும் வேலையை ரசித்து சந்தோஷமாக செய்பவர்கள் அரிது. அதுபோல் பெற்றோரின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்கிறார்களே தவிர, இஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் மிகவும் குறைவு. படிப்பு, வேலை மட்டுமின்றி ஓய்வையும் வீணாக்குபவர்களே அதிகம்.

சந்தோஷ் வேலை செய்யும் அலுவலகத்தில் நெட்வொர்க் குறைபாடு ஏற்பட்ட காரணத்தால், அதனை நிவர்த்தி செய்வதற்காக இரண்டு நாட்கள் திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத விடுமுறை என்றதும் குஷியானான் சந்தோஷ். உடனே மனைவி, குழந்தைகளுடன் அருகில் இருக்கும் மலைபிரதேசத்துக்கு ஓய்வெடுக்க கிளம்பினான். முன்கூட்டியே ரிசர்வேஷன் செய்யவில்லை என்பதால் அவசரமாக பஸ்ஸில் கிளம்ப நினைத்தான். ஆனால் மனைவியும் குழந்தைகளும் பஸ் பயணத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், வாடகை கார் பிடித்து கிளம்பினான். நீண்டதூரம் காரில் பயணித்து மலைபிரதேசத்துக்கு செல்லும் முன்னரே, குடும்பத்தில் அத்தனைபேரும் களைத்துப்போனார்கள்.

ஒரு நல்ல தங்கும் விடுதியை தேடிக் கண்டுபிடித்து அறைக்குப் போனார்கள். வெளியே அற்புதமாக வானிலை நிலவினாலும், வெளியே சென்று சுற்றிப்பார்க்கும் மனநிலை யாருக்கும் இல்லை. அதனால் அன்று முழுவதும் அறையில் அடித்துப்போட்டதுபோல் படுத்துத் தூங்கினார்கள். மறுநாளும் குடும்பத்தினர் தூங்குவதைப் பார்த்து சந்தோஷ் கோபமானான். இத்தனை பணம் செலவழித்து சுற்றுலா வந்து, இப்படியா அறையில் அடைந்து கிடப்பது என்று திட்டிக்கொண்டே இருந்தான். அதனால் மனைவியும் குழந்தைகளும் எரிச்சலானார்கள்.

வந்த இடத்தில் நிம்மதியாக இருக்கவிடாமல் இப்படியா டார்ச்சர் செய்வது என்று நொந்துகொண்டே ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினார்கள். போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆறு இடங்களை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு இரண்டு இடங்களைத்தான் அவர்களால் பார்க்கமுடிந்தது. இதற்கு காரணம் சோம்பேறித்தனம் என்று குடும்பத்தினரை மேலும் மேலும் திட்டினான். சந்தோஷ். அடுத்த நாள் அலுவலகம் என்றதால், உடனடியாக காரில் கிளம்பினார்கள். ஊருக்கு வந்து சேர்ந்த அலுப்பில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க… சந்தோஷ் அலுவலகத்திற்கு சென்றான். இரண்டு நாட்கள் பார்க்காத வேலைகளையும் சேர்த்து சந்தோஷ்க்கு ஏகப்பட்ட வேலைகளை அள்ளிக்கொடுத்தார்கள். பயங்கர களைப்பில் இருந்த சந்தோஷ் வேலைகளை சொதப்ப… மேலதிகாரியிடம் இருந்து சரமாரி திட்டுவிழுந்தது.

ரெண்டு நாள் ஜாலியா ஊர் சுத்தத்தெரியுது, ஒரு வேலையை உருப்படியா செய்யத்தெரியலைன்னா வேலையை விட்டுப் போ என்று கத்தினார் அதிகாரி. ரெண்டு நாள் விடுமுறையும் சந்தோஷமாக இல்லை என்பதை சொல்லமுடியாமல், வேலையில் மூழ்கினான் சந்தோஷ்.

சந்தோஷைப் போன்று ஓய்வை எப்படி அனுபவிப்பது என்று தெரியாமல்தான் பலரும் சொதப்பிக்கொண்டு இருக்கிறார்கள். விடுமுறை என்றதும் ஒரு வேலையும் செய்யாமல் தேமே என்று தொலைக்காட்சி முன்பு படுத்துக்கிடப்பதை சந்தோஷம் என சிலர் நினைக்கிறார்கள். மூன்று நேரமும் மூக்குமுட்ட சாப்பிடத்தான் லீவு விடப்பட்டதாக நினைப்பவர்களும் உண்டு. அடித்துப்பிடித்து சினிமா பார்ப்பது, சொந்தக்காரர்களை தொந்தரவு செய்வது என்று எதையாவது செய்து ஓய்வை ஒழித்துத்தான் கட்டுகிறார்கள். ஓய்வு எத்தனை அவசியம் என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதே இல்லை.

ஓய்வுக்கு ஒரு வரி இலக்கணம் உண்டு. அது, மகிழ்ச்சி. எங்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, அது ஓய்வு.

Leave a Comment