உளவியல் உண்மை
இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் உருவாக்கினார், பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களையும் கடவுளே படைத்தார் என்று மனிதர்கள் நம்புகிறார்கள். அத்தனை மதங்களும், அந்தந்த மதக் கடவுளை மகா சக்திமான் என்கிறார்கள். கடவுள் நினைச்சா எதையும் செய்து முடிப்பார், கடவுளால் முடியாதது எதுவுமில்லை என்ற நம்பிக்கையிலும் யாருக்கும் எந்த பிரச்னைகளும் இல்லை. கடவுள் வல்லவர் என்பதை ஏற்றுக்கொள்வதிலும் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் கிடையாது.
கடவுளை வணங்கினால் நல்லது நடக்கும், கடவுளுக்கு பூஜை செய்வது முக்கியம், கடவுளுக்கு தொழுகை நடத்த வேண்டும், கடவுளை நோக்கி பிரேயர் செய்ய வேண்டும் என்றெல்லாம் மதங்கள் வழி காட்டுகின்றன. இதனை நம்பி கடவுளுக்காக மொட்டை போடுகிறார்கள், நோன்பு இருக்கிறார்கள், தீயில் நடக்கிறார்கள். கடவுள் வரப்போகிறார் என்று நம்புகிறார்கள். இப்படி முழு நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு கடவுள் எதுவுமே செய்வதில்லை.
ஏனென்றால் கடவுள் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை. பூமியில் உள்ள அத்தனை உயிரினங்களும் ஒன்றையொன்று தின்று வாழும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. புல், செடி, கொடிகளை, மீன், பறவை, விலங்கு என எல்லாமே ஒன்றையொன்று தின்று வாழ்கின்றன, மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான். அந்த மனிதனை நோய் விழுங்குகிறது.
அதேநேரம், கடவுளை தினமும் ஆராதனை செய்தால், கடவுள் மீது மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் வைத்தால் எல்லாமே நன்மையாக நடக்கும் என்று மதங்கள் உறுதி கூறுகின்றன. ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை. நல்லவருக்கும் நிறைய துன்பங்கள், சோகங்கள், இழப்புகள் வருகின்றன.
எப்போதும் உண்மை பேசும் நபர்கள் இருக்கிறார்கள். எந்த நிலையிலும் கடவுள் மீது முழு நம்பிக்கை வைக்கும் நபர்கள் இருக்கிறார்கள். எந்த மனிதருக்கும் தீமையின்றி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். மனசாட்சிக்குப் பயந்து நடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கும் நோய் வருகிறது, துன்பம் வருகிறது, துரோகத்துக்கு ஆளாகிறார்கள். இத்தனை நல்லவர்களை தண்டிக்கிறார் என்றால் கடவுள் நல்லவரா என்ற கேள்வி எழுவது இயற்கை.
இதற்கு பதில் என்ன தெரியுமா..?
மனிதர்கள் வணங்க வேண்டும் என்று எந்த கடவுளும் கேட்பதில்லை. கடவுளின் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கப் படைக்கப்பட்ட மதங்களே அப்படி போதிக்கின்றன. உண்மையில் மனிதர் வாழ்க்கைக்கு கடவுளும் மதங்களும் தேவையே இல்லை. இயற்கையுடன் இணைந்து வாழுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
