வங்கப் போராட்டத்துக்கு சீனா காரணமா..?

Image

ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திலும் விவாதம் நடந்தது.

வங்கதேச நிலவரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயசங்கர், ‘’ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஹசீனா இந்தியா வந்து இன்னும் 24 மணிநேரம் கூட ஆகவில்லை. அவர் அதிர்ச்சியில் உள்ளார். அவரது எதிர்கால திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஹசீனாவுடன் பேசும் முன், அவர் குணமடைய அவகாசம் அளிக்க விரும்புகிறோம். அதன்படி, எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய ஹசீனாவுக்கு அவகாசம் அளித்துள்ளோம்.

வங்கதேசத்தில் நிலைமை தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. ராணுவத் தலைமைத் தளபதி ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பொறுப்பை ஏற்பதாகவும், இடைக்கால அரசை அமைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களோடு நமது அரசு நமது தூதரகங்கள் மூலம் நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. 19 ஆயிரம் இந்தியர்கள் அங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள். மாணவர்களில் பலர் கடந்த ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பினர்.

வங்கதேசத்தில் உள்ள நமது தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு புதிய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்பது நமது எதிர்பார்ப்பு. நிலைமை சீரடைந்ததும் அவை வழக்கமான முறையில் செயல்படும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காக பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. நாம் அதை வரவேற்கிறோம்.

வங்கதேசத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை மேம்பட வேண்டும் என்ற கவலையை நாம் தெரிவித்துக்கொள்கிறோம். நமது எல்லைப் படைகளும் விதிவிலக்கான முறையில் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் டாக்காவில் உள்ள அதிகாரிகளோடு நாம் தொடர்பில் இருக்கிறோம். இதுதான் தற்போதைய நிலை. நமது நெருங்கிய அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை மேம்படவும், இயல்புநிலை திரும்பவும் இந்த அவை தனது ஆதரவை வழங்க வேண்டும்.

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் சொத்துகள் முதலானவை போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறது. இது குறித்தும் எங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுளோம்” என்று கூறினார்.

வங்கதேச போராட்டத்திற்குப் பின் சீனாவின் சதி இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு வழக்கம் போல் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. அதேநேரம், இதை முழுக்க முழுக்க சீனாவின் ஏற்பாடு என்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஹசீனாவின் செயல்பாடுகள் குறித்து பொதுஜனங்களுக்கு நீண்ட நாட்களாகவே அதிருப்தி நிலவுகிறது என்கிறார் ஸ்ரீதர் சுப்ரமணியம்.

இது குறித்து அவர், ‘’கடந்த 15 ஆண்டுகளில் பங்களாதேஷ் வியத்தகு பொருளாதார முன்னேற்றங்களை கண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கட்டுமானங்களிலும் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே மகிழ்வான, நிம்மதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடையாது என்பதுதான் வரலாறு.

சோத்துக்கும் மேலாக மானுடம் போற்றுவது தனி மனித சுதந்திரம். கருத்து சுதந்திரம், போராடும் சுதந்திரம், தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சுதந்திரம், தாங்கள் மொழி, கலாச்சாரங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தாங்கள் ஆதரிக்கும் அரசியல், சமூகக் கொள்கைகளுக்காக குரல் கொடுக்கும் உரிமை, தாங்கள் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை… போன்றவைதான் மானுடர்களுக்கு எப்போதுமே அதி முக்கியமாக இருந்திருக்கிறது.

உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாராமாக வளர்ந்து நின்றும் இன்று வரை சீனா வெற்றிடையந்த சமூகத்துக்கு உதாரணமாக சுட்டிக் காட்டப்படுவதில்லை. இன்று அமெரிக்காவுடன், ஐரோப்பிய யூனியனுடன் இணைய வேண்டுமெனில் பல்வேறு சிறு நாடுகள் தயாராக இருக்கும். ஆனால் எந்த நாடும் சீனாவுடன், ரஷ்யாவுடன் இணையத் தயாராக இருக்காது. சீனாவே ஆசையுடன் இழுத்து சேர்த்துக் கொண்ட திபெத் இன்று வரை சீனாவின் அங்கமாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. காரணம் தனிமனித சுதந்திரம் என்பது சீனர்களுக்கு எட்டாக்கனி.

இதே நம் ஊருக்கும் பொருந்தும். கஷ்மீரில் சாலைகள் போடுகிறோம், பாலங்கள் கட்டுகிறோம், சினிமா ஷூட்டிங் நடத்துகிறோம் என்று என்னதான் தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் அவர்கள் இந்தியாவுடன் முழுமையாக இணையவே மாட்டார்கள். காரணம் ஆயிரம் கோடிகள் கொட்டினாலும் அந்த ‘இணைப்பு’ என்பது துப்பாக்கி முனையில்தான் நிகழ்கிறது.

அதேபோன்று ஷேக் ஹசீனா ஆட்சி ஏறக்குறைய ஒரு சர்வாதிகார ஆட்சியாகவே நடந்திருந்திருக்கிறது. எதிர்க் கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. சென்ற தேர்தலில் பரவலான குளறுபடிகள் நடந்தன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சமீபத்திய தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கவே செய்தன. நடந்தது ஏறக்குறைய ஒரு கட்சித் தேர்தல்.

சமீபத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தை மென்மையாகவும் கரிசனத்துடனும் அணுகி இருந்திருந்தால் கூட இன்றைக்கு இந்தக் கலவரம் நடந்திருக்காது. ஆனால் போராட்டக் காரர்கள் மீது கொடும் அடக்குமுறை ஏவப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொலையுண்டு ஆயிரக் கணக்கானோர் காயமுற்று பெரும் அவலத்தில் முடிந்தது. இதற்கெல்லாம் சேர்த்துதான் இன்றைக்கு ஷேக் ஹசீனா விலை கொடுத்திருக்கிறார்.

இந்தியாவுக்கும் இது பொருந்தும். ஜனநாயக நிறுவனங்களை, எதிர்க் கட்சிகளை, ஊடகங்களை மதித்து, கருத்துரிமையை அனுமதித்து, விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு, பிராந்திய உரிமைகளை அங்கீகரித்து, தேர்தல்களை முடிந்த அளவு நேர்மையாக நடத்தும் வரை இந்தியா முன்னேற்றம் காணும். இந்தியர்கள் அமைதியாக வாழ்வார்கள். இதில் குளறுபடிகள் செய்ய முனையும் போதுதான் அடியில் புகையத்துவங்கும். அந்தப் புகையை அணைக்காமல் தொடர விட்டால் ஒரு கட்டத்தில் தீயாகப் பற்றும்! பங்களாதேஷ் ரொம்ப காலமாக கனன்று வந்திருக்கிறது நேற்று பற்றி எரிந்திருக்கிறது’’ என்கிறார்.

Leave a Comment