கிடுகிடு பூச்சாண்டி
பெரியவர்களைப் போலவே குழந்தைக்கும் கவலை, பயம், அச்சம் ஏற்படும் என்பதால், அதனால் மனம் பாதிப்படைகிறது என்பதும் தெரியுமா?
மனதில் உருவாகும் பாதிப்பை எப்படி வெளிக்காட்டுகிறார்கள், என்பதில் தான் குழந்தைக்கு குழந்தை மாறுபடுகிறது. மனம் பாதிக்கப்பட்ட ஒருசில குழந்தைகள் அதிகம் சாப்பிடும், ஒருசில குழந்தைகள் அமைதியாக கை சூப்பிக்கொண்டு உட்கார்ந்துவிடும். ஒருசில குழந்தைகள் தரையில் புரண்டு அழுவது, மண்ணைத் தின்பது, சுவரில் முட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும். உணவு மீது வெறுப்பு காட்டுதல், குறைவான தூக்கம் போன்றவையும் உண்டாகும்.
இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். குழந்தையின் மனம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால், ரொம்பவே சிம்பிள். ஆம், ’நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன், எனக்கு எந்த ஆபத்தும் வராது’ என்பதை குழந்தை உணரவேண்டும். அந்த அளவுக்கு பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும்.
அதனால், குழந்தைக்கு எதிரே பெற்றோர்கள் சண்டை போடுவது, பெற்றோரை வேறு யாராவது திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அதேபோன்று, தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வது குழந்தைக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. அதனால், அதற்கேற்ப குழந்தையை தயார் செய்தபிறகே வெளியே செல்ல வேண்டும். பாப்பாவுக்கு சாப்பிட காய் வாங்கிட்டு வருவேனாம், வேலை பார்த்துட்டு வருவேனாம் என்று சொல்வதுடன், அதுவரை பாதுகாப்பாக இருப்பதற்கான வழிவகையும் செய்துவிட்டே கிளம்ப வேண்டும்.
வீட்டில் யாரேனும் குழந்தையை முரட்டுத்தனத்துடன் கையாளுதல், தவறாக பயன்படுத்துதல், மிரட்டுதல், அடித்தல் போன்றவையும் குழந்தைக்கு அச்சத்தை விளைவிக்கக்கூடியது. அதேபோன்று வீட்டில் திடீரென நடக்கும் நல்லது அல்லது கெட்ட விசேஷங்களுக்கு கூட்டம் கூடுவது, விபத்து, பெற்றோரைப் பிரிதல், பலரும் குழந்தையைக் கையாள்வது போன்றவையும் அச்சத்தைக் கொடுத்துவிடும்.
குழந்தையைக் கவனிக்காமல் மற்றவர்கள் பேசிக்கொண்டு இருத்தலும், மருந்துகளின் பக்கவிளைவு, போதிய உணவு இல்லாமை, தூக்கக் குறைவு போன்றவையும் குழந்தையின் மனதை பாதிக்கிறது. மனதளவில் பாதிப்பு இல்லாத குழந்தையால் மட்டுமே, தைரியமாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடியும். அதுதான் குழந்தைக்கு உடல் மற்றும் மன வளர்ச்சியைக் கொடுக்கும்.
ஆகவே, குழந்தைக்கு உணவும், பொம்மையும் கொடுப்பது மட்டும் போதாது, மனம் பாதிக்கப்படாமல் போதிய நேரம் குழந்தைக்கு ஒதுக்கி, அதன் மனதை பாதுகாக்க வேண்டியதும் பெற்றோர் கடமையே. குழந்தைகளுக்குப் பொதுவாக தங்கள் இன உறுப்புகளை தொடுவது விளையாட்டாகவும், இன்பம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இதற்காக தண்டிப்பதும் மனதை பாதிப்பதுண்டு.
குழந்தைக்கு முதல் இன்பம் வாயில் கிடைக்கிறது. அதாவது தாயிடம் பால் அருந்துவதை ஆனந்தமாக செய்கிறது. அப்படி தாய்ப்பால் கிடைக்காத தருணத்தில் பாட்டில் நிப்பிளை வாயில் வைத்துக்கொள்தல், கை சூப்புதல் ஆகியவற்றில் இன்பத்தைக் காண்கிறது.
இதையடுத்து சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் போன்றவற்றையும் இன்பநிலையாகவே எடுத்துக்கொள்கிறது. இது கிட்டத்தட்ட 3 வயது வரையிலும் நிகழ்கிறது. இந்த நேரத்தில் இதனை கட்டுப்படுத்தி வைக்கவில்லை என்றால், இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு குழந்தைக்கு நோய்கள் உருவாகலாம்.
இதையடுத்து கிட்டத்தட்ட 6 வயது வரையிலும் இன உறுப்புகளைத் தடவிப்பார்த்தல், தொடுதல் போன்றவற்றில் இன்பம் காண்கின்றன. இதனை கண்டிக்கும்போது தாய் அல்லது தந்தையின் இன உறுப்புகளைத் தொடுவதும் உண்டு. இந்த நேரத்தில் குழந்தைகளை வேறு திசைக்கு அன்பு காட்டி திருப்ப வேண்டும். அடித்தல், மிரட்டுதல், சூடு வைத்தல் போன்றவை குழந்தையின் மனநிலையை நிச்சயம் பாதித்துவிடும்.
குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்று பூச்சாண்டியை அழைத்தல், இருட்டு அறை என்று மிரட்டுதல், பூதம் வருகிறது என்று பயமுறுத்தல் போன்றவற்றை பெரும்பாலான பெற்றோர் செய்கிறார்கள். குழந்தையின் மனம் மென்மையானது. இதுபோன்ற விஷயங்கள் அவர்கள் உள்ளத்தை அளவுக்கு அதிகமாக பாதித்துவிடும்.
பயமுறுத்தல் காரணமாக அதிக உணவு எடுத்துக்கொண்டாலும், அவை சரியாக ஜீரணமாகாத வகையில் உடல் நிலையில் சிக்கல் உருவாகும். எந்த ஒரு இருட்டையும், புதிய மனிதரையும் பார்த்து பயம் கொள்ளக்கூடும். இவை எல்லாமே குழந்தையின் உடல் நலனையும் மன நலனையும் பாதிக்கிறது. இதனால் மனச்சிதைவு மட்டுமின்றி நரம்புத்தளர்ச்சி, பதட்டம், மூர்ச்சையடைதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
குழந்தைகள் கண்ணாடி பாத்திரம் போன்றவர்கள், அவர்களை பத்திரமாக கையாளுங்கள்.