சர்க்கரைத் தலைநகரமா சென்னை..?

Image

தவிர்க்கும் வழி காட்டும் டாக்டர் எம்.ஜெயராஜா


சர்க்கரை நோய் கொடுமையானது. இந்தியாவில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் சர்க்கரை நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மிக அதிகம். சர்க்கரை நோய் ஏற்பட்டவர்கள் பெரும்பாலும் இதயம், சிறுநீரகம், கண்கள், நரம்புகள் போன்றவை பாதிக்கப்படுவதால் அவதிப்படுகிறார்கள். சர்க்கரை நோயின் பின்விளைவுகளில் இருந்து இந்த நோய் உள்ளவர்கள் தப்பிக்க முடியுமா? அவர்களும் நோயற்று, நூறு வயதைத் தொட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி சென்னை, சூர்யா மருத்துவமனையின் இதயநோய் நிபுணர் டாக்டர் எம்.ஜெயராஜாவை சந்தித்தோம்.


இந்தியாவில் எந்தளவிற்கு சர்க்கரை நோய் மக்களைப் பாதித்துள்ளது?
தமிழ்நாட்டில், 1970களில் நூற்றுக்கு 2 பேருக்கு மட்டுமே நகர்ப்புறங்களில் டயாபெடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் அதிவேகமாக டயாபெடீஸ் நோயாளிகளின் எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்சமயம், 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னையில் 100ல் 22 பேருக்கு சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ உலகத்தையே அதிரவைத்துள்ளது. மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில், இளவயதிலேயே (30-40 வயது) நிறையப் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலகின் சர்க்கரை நோய்த் தலைநகரம் என்ற பட்டப்பெயருக்கு சென்னை ஆளாகியுள்ளது. இது ஒரு கசப்பான செய்தி. சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, 20 வயதுள்ள உடற்பருமன் கொண்ட ஒரு நபருக்கு அவரது வாழ்நாளில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்பது இன்னொரு கவலையளிக்கும் செய்தி.

இந்த அளவுக்கு ஏன் நமது நாட்டில் சர்க்கரை நோய் பெருகியது?

சர்க்கரை நோய் ஏற்பட நமது பரம்பரையில் உள்ள மரபணுக்கள் ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, உடல் உழைப்பு குறைந்து, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு (தொப்பை) சேர்வதும், மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) நமது உணவில் அரசி வடிவத்தில் அதிகம் சேர்க்கப்படுவதும் முக்கியமான காரணங்கள். மேல்நாட்டினரைவிட, நமது நாட்டினருக்கு 10 ஆண்டுகள் முன்னதாகவே டயபெடீஸ் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் எந்த வகையில்  நம்மைப் பாதிக்கிறது?

சர்க்கரை நோய் நமது ஆயுளில் 10 ஆண்டுகளைக்  குறைத்துவிட வாய்ப்பு உண்டு. சர்க்கரை நோய் முழுமையாகக் கண்டு அறியப்படுவதற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ‘முன் சர்க்கரை’ (Pre-diabetes) என்பது உடலில் அறிகுறி இன்றி பதுங்கியுள்ளது. இந்த ஆரம்பகட்டத்தை ரத்த டெஸ்ட்கள் மூலமாக மட்டுமே அறிய முடியும். இந்த ‘முன் சர்க்கரை’ கட்டத்திலேயே நாம் கண்டுபிடித்துவிட்டால், எளிதில் மருந்தின்றி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சகஜநிலைக்கு நாம் செல்ல முடியும். இது ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி. குறிப்பாக, நமது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், ஆண்டுக்கு  ஒரு முறையோ, இருமுறையோ ரத்த டெஸ்ட்கள்  செய்து எளிதில் நாம் டயாபெடீஸ் வரும் முன் தடுக்க முடியும் அல்லது தள்ளிப்போட முடியும்.

முன் சர்க்கரை அல்லது சர்க்கரை நோய் உள்ளதா என்று எப்படி அறிவது?

பொதுவாக, எவரும் வயிற்றில் அதிகாலையில் ரத்தத்தில் சர்க்கரை 100 mg%க்குக் குறைவாக இருக்க வேண்டும். உணவுக்குப்பின் அல்லது 75 கிராம் குளுக்கோஸ் குடித்து  2 மணி நேரம் சென்று 140 mg%க்குக் கீழ் இருக்க வேண்டும். வெறும் வயிற்றில் 100-126mg% இருந்தாலோ, சாப்பிட்டு 2 மணி நேரம் சென்று 140-200 mg%க்கு வரை இருந்தாலோ அது முன் சர்க்கரையின் அறிகுறி. வெறும் வயிற்றில் 126mg% க்கு மேற்பட்டோ, சாப்பிட்டபின் 200mg%க்கு மேற்பட்டோ இருந்தால் முழுமையின் சர்க்கரை நோயின் வெளிப்பாடு. அதேபோல், ஹெச் & ஏ, சி எனப்படும், கடந்த மூன்று மாத ரத்த சர்க்கரையின் அளவைக் காட்டும் டெஸ்ட் நார்மலாக 5.6 சதவிகிதத்துக்கும் கீழ் இருக்க வேண்டு. 5.6 சதவிகிதம் முதல்  6.4 சதவிகிதம் வரை முன் சர்க்கரை. 6.4 சதவிகிதத்துக்கும் மேல் இருந்தால் டயாபெடீஸ்.
அறிகுறியின்றி நம்மை இந்த நோய் தாக்குவதால் ரத்த டெஸ்ட் செய்வதன் மூலமே நாம் ஆரம்ப கட்டங்களில் கண்டுபிடித்து உஷாராக இருக்கலாம். பின்விளைவுகளில் இருந்தும் தப்பிக்கலாம். முக்கியமாக, மகப்பேறு காலங்களில் நிறையப் பெண்களுக்கு ஆரம்பகட்ட சர்க்கரை நோய் லேசாகத் தலையைக் காட்டலாம். இவர்களுக்குப் பின் காலத்தில் டயாபெடீஸ் வர வாய்ப்பு அதிகம்.


சிறுநீரை டெஸ்ட் செய்து சர்க்கரை நோயைக் கண்டறிய முடியுமா?

முடியாது. அது ஒரு நம்பிக்கையற்ற டெஸ்ட். எடுக்காதீர்கள்.

சர்க்கரை நோயின் பக்கவிளைவுகள் என்ன?
சர்க்கரை நோய் நம் உடலில் உள்ள பெரிய ரத்தக்குழாய்களைப் பாதித்து , அடைப்பு ஏற்படச் செய்கிறது. முன் சர்க்கரை கட்டத்திலேயே பலருக்கு மாரடைப்பு, பக்கவாதம், கால்களுக்கு ரத்த ஓட்டமின்மை போன்றவை தோன்றலாம். அதேபோல், முழுமையான சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், கண்கள், மூளை, இதயம், சிறுநீரகங்கள் போன்றவற்றில் உள்ள நுண்ணிய ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைவதால் பாதிப்பு ஏற்படுகிறது.  உலகில் கண் பார்வை பாதிக்கப்படுவதற்கும், சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கும் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை  நோய்தான் முதல் காரணம். சர்க்கரை நோயின் ஆரம்பகட்டங்களில், குறிப்பாக நோய் கண்ட முதல் 10 ஆண்டுகளில், சர்க்கரையின் அளவை உணவு, மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்தினால் நான் கூறிய பக்கவிளைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நீங்கள் கூறும் டிப்ஸ்?

ஏ, பி, சி, டி என்ற ஆங்கில எழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள். ஏ.ஏ.சி எனப்படும்  கடந்த மூன்று மாத ரத்த சர்க்கரையின் குறியீடு. இது, 7 சதவிகிதத்துக்குக் கீழ் இருக்க வேண்டும்.
பி: Blood Presure எனப்படும் ரத்த அழுத்தம். இதை 140/90 mw Hg என்ற அளவுக்குக் கீழ் வைத்துக்கொள்வது அவசியம்.
சி: cholesterol எனப்படும் ரத்தக் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும். முக்கியமாக, எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டாடின் வகை மருந்துகள் கைகொடுக்கின்றன. உயிர் காக்கின்றன.
டி: discipline. அதாவது, சுய கட்டுப்பாடு. 1. உணவில் மாவுச்சத்துள்ள இனிப்பு வகைகளைத் தவிர்த்தல்.
2. வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்தல்.
3. எடையைக் கட்டுக்குள் வைத்தல்.
4. புகை மற்றும் புகையிலை சார்ந்த பழக்கங்களை அடியோடு தவிர்த்தல்.
5. மதுப்பழக்கத்தை அறவே ஒழித்தல் அல்லது மிதமாக அருந்துதல்.
6. யோகாசனம், தியானம், பிராணாயாமம் போன்ற மன அமைதி கொடுக்கும் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளல்.
இவை அனைத்தும் சுயக் கட்டுப்பாடு என்ற தலைப்பில் அடங்கும்.
கடைசியாக ஒரு நற்செய்தி. 30-40 ஆண்டுகள் சர்க்கரை நோய் உடலில் இருந்தும்கூட (நான் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்றி) எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் 90 வயதைக் கடந்தும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் உள்ளனர். இன்னும் பலர் 100ஐத் தொடக் காத்திருக்கின்றனர். 

Leave a Comment