மாற்றம் அச்சம் தருகிறதா..?

Image

வெற்றிக்கு வழிகாட்டி

பள்ளிக்கூடத்திற்கு புதிதாக நுழையும் சில குழந்தைகள் அடம்பிடித்து கதறியழுவது ஏன் தெரியுமா..? இதுவரை வசதியாக இருந்த வீட்டு சூழலைவிட்டு, புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அச்சப்படுகிறது. அதேநேரம், அப்படியொரு புதிய சூழலுக்கு குழந்தையை முன்கூட்டியே தயார் செய்யும்போது, புதிய அனுபவத்திற்கு குழந்தை தயாராகி விடுகிறது. சந்தோஷமாக சிரித்தபடி பள்ளிக்குள் நுழையும் சில குழந்தைகள் முகத்தில் அந்த மாற்றத்தின் எதிர்பார்ப்புகளைக் காணமுடியும்.

மாற்றத்திற்குப் பயந்து குழந்தை போன்று அடம்பிடிக்கும் மனம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கவே செய்கிறது. அந்த மனம்தான் வாழ்க்கையின் பெரும்பாலான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கிறது.

வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் கிடைக்க வேண்டும் என்று மனதார ஆசைப்படுகிறோம். ஆனால், அப்படியொரு மாற்றம் தானாக நடக்கும், நடக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.  

செல்போன் அறிமுகமான காலத்தில், அதை கையாள்வதே பலருக்கும் கம்பசூத்திரம் போல் கடினமாகத் தெரிந்தது. படித்தவர்கள், வசதியானவர்கள் மட்டும்தான் செல்போன் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்தது. ரிலையன்ஸ் செல்போன்கள் ஏழை, எளியோர் கைகளுக்குக் கிடைத்த நேரத்தில் பட்டன் போன்களே பிரபலம். அதை தட்டுத்தடுமாறி கற்றுக்கொண்டனர்.

அந்த நேரத்தில் புதிய அறிமுகமான டச் போன்கள், மிகவும் குழப்பமான ஒன்றாகத் தெரிந்தது. ஒன்றைத் தொட்டால், வேறு ஏதோ நடக்கிறது என்று தடுமாறினார்கள். ஆனால், இப்போது குழந்தைகளும் டச் போனை கையாள பழகிக்கொண்டனர். பழைய பட்டன் போனை பார்த்தாலே சிரிக்கும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. செல்போனுக்கு பெரும்பாலான மனிதர்கள் எளிதாக மாறிவிட்டதுதான் ஆச்சர்யம்.

இப்படி ஒட்டுமொத்தமாக சமுதாயத்தில் ஒரு மாற்றம் நடக்கும்போது, எல்லோரும் நம்பிக்கையுடன் எளிதாக மாறிக்கொள்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் மாற வேண்டும் என்றால் தடுமாறுகிறார்கள். விற்பனையாளர் ஒருவரை கொள்முதல் பிரிவுக்கு மாற்றினால் அச்சப்படுகிறார். அதையும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு என நினைப்பதற்குப் பதிலாக, தன்னை ஓரங்கட்டுவதாக நினைத்து வேலையைவிட்டு ஓடுகிறார்.

எல்லா மாற்றங்களையும் மனம் திறந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், விரும்பியும், விரும்பாமலும் நம்மைச்சுற்றி பல மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், திருமண பருவம் என்று பல்வேறு மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும். இவற்றை பெற்றோர் துணையுடன் கடந்துவிடுவதால், அடுத்தகட்ட மாற்றங்களை தனியே எடுக்கத் தடுமாறுகிறார்கள்.

மாற்றங்களை வரவேற்க வேண்டும் என்றால் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.  

ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் எந்த ஒரு மாற்றத்தையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும், விபத்தில் கால் இழந்த ஒருவர், செயற்கை காலுடன் எவரெஸ்ட் ஏற முடிகிறது என்றால், அந்த மாற்றத்தை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதுதான்.

எனவே, மாற்றங்களில்தான் இருக்கிறது மகிழ்ச்சி….

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். தொடர்புக்கு ; 940903586

Leave a Comment