சந்திரசூட்டுக்கு கவர்னர் பதவி ரெடியா..?

Image

அதிர்ச்சியில் சட்டப்புத்தகம்

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பார்கள். நீதிமன்றத்தில் சட்டத்தின் அடிப்படையில் சட்டப்புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை வைத்தே தீர்ப்பு வழங்கப்படுவதாக மக்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் தன்னுடைய கடவுள் நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டி அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்.

முன்பு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மிகவும் கண்டிப்பு பேர்வழி என்பது போன்று ஒரு பிம்பத்தை உருவாக்கினார். அதன்பிறகு வேலைக்காரப் பெண் விவகாரத்தில் சிக்கி, பின்னர் பா.ஜ.க. வாஷிங் மெஷினால் வெளுக்கப்பட்டு பதவி வாங்கிக்கொண்டு செட்டிலாகி விட்டார். அவரை போலவே இப்போது சந்திரசூட் பற்றி வெளிவரும் தகவல்கள் எல்லாமே அதிர்ச்சி ரகம்.

அனைத்து மக்களுக்கும் பொதுவான நபராக கருதப்படும் உச்சநீதிமன்ற நீதிபதி தன்னுடைய வீட்டுக்கு பிரதமர் மோடியை வரவழைத்து விநாயகர் பூஜையைக் கொண்டாடியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு குறித்து அவர் பேசியிருக்கும் விவகாரம் சட்டப்புத்தகத்துக்கு என்ன மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் நவம்பர் மாதம் 9ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதைய தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பு வழங்கியது. அந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஷர்த் அரவிந் போப்டே, அசோக் பூஷன், டி.ஒய். சந்திரசூட், அப்துல் நசீர் உள்ளிட்டோர் இருந்தனர்.

அந்தத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய அந்த 2.7 ஏக்கர் நிலத்தில் குழந்தை ராமர் கோயில் கட்டிக்கொள்ளவும், இஸ்லாமியர்கள் வழிபாடு செய்ய அயோத்தியில் 1000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவும் உத்தரவிட்டது. இந்த அமர்வில் இருந்து நீபதிகள் எல்லாம் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது அந்த அமர்வில் இருந்து நீதிபதி சந்திரசூட் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர், கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாத வழக்குகள் அடிக்கடி வரும். அதுபோல் தான் அயோத்தி ராமர் கோயில் வழக்கிலும் நடந்தது. மூன்று மாதங்களாக என் முன்னே இந்த வழக்கு இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து அவரிடம் ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னேன்” என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.

சட்டப்புத்தகத்தின் படி தீர்ப்பு வழங்கச்சொன்னால், அவர் கடவுளின் தீர்ப்பை எதிர்பார்க்கிறார். இதற்கு சட்டப்புத்தகம் எதுக்கு வேத நூல்களை கையில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கொந்தளிக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

Leave a Comment