சர்வாதிகாரி ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு
பதவி உயர்வை பறிக்கும் வகையில் கடந்த 21.12.2023 அன்று தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட அரசாணை 243-ஐ எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை அதிரடியாக கைது செய்திருப்பது கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.
இதுகுறித்து பா.ஜக. தலைவர் அண்ணாமலை, ‘’திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 309, 311 ஆகியவற்றில், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் வரப்படும் என்றும், இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், ஆண்டுதோறும் ஆசிரியப் பெருமக்கள் போராட்டம்தான் தொடர்கிறதே தவிர, அவர்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
ஜனநாயக முறையில் போராட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட முயன்ற ஆசிரியர்களை ஒடுக்க முயற்சிப்பது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது…’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழர் சீமான் இதுகுறித்து, ‘’ நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும்; அதைக்கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதிபோலக் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.