என்ன செய்தார் சைதை துரைசாமி – 330
மக்களுக்காக அரசு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்துகிறது. ஆனால், அனைத்து நலத்திட்டங்களும் உரிய மக்களுக்கு முறையாகச் சென்று சேர்வதில்லை. அரசின் திட்டங்களை தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு, எல்லாவற்றிலும் பணம் பறிக்கும் கும்பல் அரசியலில் ரொம்பவே அதிகம். குறிப்பிட்டு ஒரு கட்சி ஆட்களை மட்டும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அனைத்துக் கட்சிகளிலும் இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகள் நிரம்பி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேயர் சைதை துரைசாமி மேற்கொண்டார்.
திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள் போன்ற குடும்ப விழாக்களை பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிய பெரிய மண்டபம் பிடித்துக் கொண்டாடுகிறார்கள். ஏழைகளுக்கும் தங்கள் வீட்டு விழாக்களை அப்படி நடத்த வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் வருவது இயல்பு. இப்படிப்பட்ட எளிய மக்களும் குடும்ப விழாக்களை மிகவும் குறைவான செலவில் நடத்துவதற்காகவே மாநகராட்சி சார்பில் சமூகநலக் கூடங்கள் நடத்தப்படுகிறது.
இந்த சமூக நலக் கூடங்களில் எளிய மக்கள் எப்போது போய் கேட்டாலும், முன்கூட்டியே புக்கிங் ஆகியிருக்கிறது என்ற பதிலே கிடைப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரிய வந்தது. அதேநேரம், ’குறிப்பிட்ட நாளில் மண்டபத்தை புக் செய்திருப்பவரிடம் பேசி அந்த தேதியைப் பெற்றுதர வேண்டுமா?’ என்று அவர்களிடம் கேட்கிறார்கள் என்பதும், அந்த வகையில் அதிக பணம் கொடுத்தால் அந்த நாளில் மண்டபம் கிடைக்கிறது என்பதும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.
இது போன்று ஒரு சில இடங்களில் எப்போதாவது நடக்கும் என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியும் என்றாலும் எல்லா காலகட்டத்திலும் எல்லா சமூகநலக் கூடங்களிலும் இந்த முறைகேடு நடப்பதை அறிந்து அதிர்ந்தே போனார். தன்னுடைய காலத்தில் இந்த முறைகேடு நடக்கக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
- நாளை பார்க்கலாம்.