• Home
  • அரசியல்
  • அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு

அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு

Image

நுழைகிறது கிரிமிலேயர் மோசடி

அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது அதேநேரம் கிரிமிலேயர் விவகாரம் ஆபத்தான ஒன்று திருமாவளவன், ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதேநேரம், இந்த தீர்ப்பு வழங்கிய ஏழு பேரில் ஆறு பேர் பிராமணர்கள் என்பதாலே, இந்த அநீதி செய்திருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து திருமாவளவன், ‘’ஏழு நீதிபதிகள் கொண்ட இந்த பேரமர்வில் சில நீதிபதிகள் எஸ்சி பிரிவினருக்கும் “கிரீமி லேயர்” என்னும் வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளும் ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறி விட்டால் அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

எஸ்சி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மாநில அரசுகளாலும், ஒன்றிய அரசாலும் எந்தத் துறையிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது இல்லை. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பல்லாயிரக்கணக்கான பணியிடங்களைக் காலியாக வைத்திருந்து அவற்றை மற்றவர்களைக் கொண்டு நிரப்பும் தந்திரத்தை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் நெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்றன. இதனால் இலட்சக்கணக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.

இட ஒதுக்கீடே நிறைவு செய்யப்படாத நிலையில் கிரிமி லேயர் முறையைப் புகுத்தி இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்களை நீக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் நீதி ஆகாது. எஸ்சி மக்களின் பணி நியமனம், பதவி உயர்வு முதலான விஷயங்களில் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் எதிரான தீர்ப்புகளையே வழங்கி வருகிறது. நீதித்துறையில் சமூக நீதி இல்லை என்பதன் விளைவே இது. இந்தத் தீர்ப்பில் கிரீமி லேயர் தொடர்பான கருத்துக்கள் ஆணையாகப் பிறப்பிக்கப்படவில்லை. எனவே அவற்றை நீதிபதிகளின் கருத்துகளாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தீர்ப்பின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதைப் புறக்கணிக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அன்றைய முதலமைச்சர் கலைஞர்  அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டி, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சியினரையும் அழைத்துக் கருத்துக் கேட்டார்கள்.

எஸ்.சி,. எஸ்.டி., பிரிவு என்று பட்டியல் ஜாதியினரிடையே மூன்று முக்கிய பிரிவுகள் உள்ள நிலையில், மிகவும் வாய்ப்புக் குறைவாக கீழ் அடுக்கில் அருந்ததிய சமூக மக்கள் பெரும் ‘பசியேப்பக்காரர்களாகவே தொடரும் அவலத்தைப் போக்கவேண்டியது – சமூகநீதிக் கிட்டச் செய்வதன் முக்கியம் ஆகும் என்பதை விளக்கிய நிலையில், மற்ற பல கட்சியினரும் சட்டம் இயற்றுவதை வரவேற்றனர். ஆனால், ‘புதிய தமிழகம்‘ கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மட்டும் இதனை எதிர்த்துப் பேசி, வெளிநடப்பே செய்தது ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக அன்று இருந்தது!

இந்நிலையில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட (சிறப்பு) அமர்வு – இப்படி அருந்ததியினருக்குத் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மூன்று விழுக்காடு வழங்கிடும் சட்டம் செல்லுபடியாகும் என்று ஏழு நீதிபதிகளில் ஒருவர் தவிர, பெரும்பான்மையாக  6 நீதிபதிகள் – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட சிறப்பான தீர்ப்பை – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூகநீதி தீர்ப்பை அளித்துள்ளது பாராட்டத்தக்க தீர்ப்பாகும். ஒரு நீதிபதி (ஜஸ்டிஸ் பேலாதிரிவேதி) மட்டும் மாறுபட்ட தீர்ப்பினை (Dissenting Judgement) தந்தார். ஆந்திர உயர்நீதிமன்றம் முன்னதாக அளித்த தீர்ப்பு தவறானது!

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய்.சந்திரசூட் உள்பட இந்த சிறப்பான வரவேற்கப்படும் 6 நீதிபதிகள் தந்துள்ள தீர்ப்பில், ”அருந்ததியருக்கென தனி உள் ஒதுக்கீடு செல்லும்; முந்தைய 2005 ஆம் ஆண்டு ஆந்திரா வழக்கில் தரப்பட்ட உள் ஒதுக்கீடு ஏற்கத்தக்கதல்ல என்கின்ற தீர்ப்பு – அது செல்லாது” என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதே தீர்ப்பில், ”சில நீதிபதிகள் தமது கருத்துரையாக (ஆணையாக அல்ல) ‘‘கிரிமீலேயர் முறை‘ எஸ்.சி., எஸ்.டி., பட்டியலின மக்களுக்கு அவசியம் என்று கூறியிருக்கும் கருத்து, சரியான சமூகநீதிக் கண்ணோட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. அவர்களே குறிப்பிட்ட 15(4) முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படை தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது.” இதுபற்றி தனியே விரிவாக பிறகு வேறு ஓர் அறிக்கையில் விளக்குவோம்.

இந்த தமிழ்நாடு சட்டத்துடன், அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்த சட்டமும் செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் தீர்ப்பில் விளக்கும்போது, ”எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பாகுபாட்டின் காரணமாக வளர்ச்சியைக் காண முடியாது. மேலும், இரு பிரிவில் உள்ள இவர்கள் ஒரே மாதிரியான நிலையில், வளர முடியவில்லை என்பதை வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அனைத்து வகுப்பினரிடையும் ஒரே மாதிரியான சமூக நிலை இருக்காது” என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் புதிரை வண்ணார் என்ற ‘பார்த்தாலே தீட்டு’ என்ற கொடுமையை பல காலம்  அனுபவித்தவர்களுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டை உள் ஒதுக்கீட்டைத் தந்தால், மேலும் சமூகநீதி ஜீவ நதியாகப் பாய்ந்து கடைமடைக்கும் சேர்ந்து செழிப்பாக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment