என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 90
பெருநகர சென்னை மாநகராட்சியில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்துவது என்றாலும், அது குறித்து முழுமையாக ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகள் செய்த பிறகே அதனை மேயர் சைதை துரைசாமி தொடங்கிவைப்பார். கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுவது அறிந்ததும், அதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்பது தெரியவந்ததும் சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறு அறிமுகம் செய்து நோய் அச்சத்திலிருந்து மக்களை விடுவித்தார்.
ஏழை, எளிய மக்கள் கொசுவை விரட்டுவதற்கு கொசுவர்த்திச் சுருளே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த கொசுவர்த்திச் சுருள் வெளியிடும் சாம்பலின் அளவு சுமார் 75 சிகரெட் எரிப்பதால் வரும் சாம்பலுக்குச் சமம் என்பதை அறிந்ததும், அந்த ஆபத்திலிருந்து விளிம்புநிலை மக்களைக் காப்பாற்றுவதற்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கினார்.
பெரும்பாலான மக்கள் கொசுக்களை விரட்ட கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதால், சருமம், கண்கள் மற்றும் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் இயற்கை முறையில், நொச்சி செடி வளர்த்து கொசுக்களை விரட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
கொசு ஒழிப்பதற்கு இத்தகைய பணிகள் மட்டுமே போதாது என்பதை மேயர் சைதை துரைசாமி உணர்ந்தார். எனவே, கொசு மருந்து தெளிப்பது, கொசுவுக்கு புகை அடிப்பது போன்ற பணியும் அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். பொதுவாக எல்லா காலகட்டத்திலும் கொசு எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், புகார் எழும் நேரத்திலும் கண் துடைப்புக்காக ஊர் முழுவதும் கொசு மருந்து தெளிப்பதும், கொசு புகை அடிப்பதும் விறுவிறுப்பாக நடக்கும். சில நாட்களில் இந்த சுறுசுறுப்பு முடிவுக்கு வந்துவிடும்.
சில நாட்கள் மட்டும் கொசு மருந்து அடிப்பதால் எந்த பிரயோஜனமும் இருக்காது. தொடர்ந்து சரியான இடைவெளிகளில் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே, கொசுக்களை கட்டுப்படுத்த முடியும் என்பதால், இதனை தெளிவாக செய்வதற்கான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளில் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்