என்ன செய்தார் சைதை துரைசாமி – 200
பெருநகர சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் முதல் கட்டமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது என்ற அறிவிப்பு வந்ததும் வாகனவோட்டிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தினமும் இந்த பகுதியில் சென்று வருபவர்கள் தங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்கள்.
தனியார் நிலங்களை எடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு, மாநில அரசு நிலத்தைப் பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட சாலைகளின் விரிவாக்கப் பணிக்காக மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களில் முன்நுழைவு அனுமதி பெறுவதற்கும், சம்பந்தப்பட்ட துறைகளை அணுகுவதற்கு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தனியார் நிலங்களை மாற்றத்தக்க வளர்ச்சி உரிமம் மூலம் கையகப்படுத்துவதற்கு அரசு ஆணை பெறவும் முயற்சி செய்யப்பட்டது.
இந்த விரிவாக்கம் உடனடியாக நடைபெற வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அமைச்சர்களை மேயர் சைதை துரைசாமியே நேரில் சந்தித்துப் பேசினார். அண்ணா பல்கலைக்கழக நிலம் வாங்கி சாலையை அகலப்படுத்திய நேரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான சி.எல்.ஐ.ஆர். எனப்படும் மத்திய தோல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் நிலத்தை வாங்குவதற்காக டெல்லிக்குச் சென்றார். அப்போது துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரையை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளை எல்லாம் நேரில் சந்தித்து இடத்துக்கு அனுமதி பெறும் நடவடிக்கை மேற்கொண்டார். அதனாலே, அந்த சாலை அகலமாக்கப்பட்டு போக்குவரத்து ஓரளவு சீரடைந்தது. அதோடு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் அண்ணா பிரதான சாலை மற்றும் ஏரிக்கரை சாலையை இணைப்பு செய்வதற்குத் தேவையான 4644 ச.மீ நிலத்தை பெற்று, அதற்கு ஈடாக நெசப்பாக்கம் கிராமத்தின் ஏரிக்கரை பூங்காவை ஒப்படைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- அண்ணா சமூக கூடத்திலிருந்து ஈ.வெ.ரா. சாலை வரையிலான கான்வென்ட் சாலையை அகலப்படுத்துவதற்கு 265 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட அரசு நிலம் பெறுவதற்கு மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- எண்ணூர் துறைமுகம் – சென்னை துறைமுகம் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியின் 7 காணி நிலம் மன்ற அனுமதியுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பான வணிகவரித்துறைக்கு வடசென்னையில் ஒருங்கிணைந்த வணிக வரி வளாகம் கட்டுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி – நிலம் மற்றும் உடைமைத்துறை மூலம் 2.80 ஏக்கர் நிலம் கொடுக்க மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நில கிரய தொகை ரூ.57,49,92,000/- சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.
- இதேபோன்று தீயணைப்புத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காவல் நிலையம், குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அரசுத் துறைகளுக்கு மாநகராட்சி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு எஸ்பிளேனேடு கோட்டை, என்.எஸ்.சி. போஸ் சாலை, சைதாப்பேட்டை பேருந்து வழித்தடம், மாம்பலம் கால்வாய், விக்டோரியா பப்ளிக் ஹால், ஶ்ரீராமலு பூங்கா, நேரு பூங்கா, மயிலாப்பூர், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம், கண்ணப்பர் திடல் போன்ற இடங்களில் சென்னை மாநகராட்சியின் திறந்தவெளி நிலத்தை நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழக்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றி இடம் வழங்கப்பட்டது.
சாலை விரிவாக்கத்திற்கு மேயர் சைதை துரைசாமியைப் போன்று தீவிரம் காட்டினால் சென்னை மக்களுக்கு நெரிசலில் இருந்து தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
- நாளை பார்க்கலாம்.