என்ன செய்தார் சைதை துரைசாமி – 201
சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிவருவது போன்று சாலைகள் எண்ணிக்கை பெருகவில்லை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது என்பது உண்மை. அதேநேரம், ஆக்கிரமிப்பாளர்கள் கைவரிசையாலும் பல இடங்களில் சாலைகள் அகலம் குறைந்து போயிருப்பதாலும் நெரிசல் அதிகரிக்கிறது என்பதை மேயர் சைதை துரைசாமி தெளிவாக அறிந்தே இருந்தார். எனவே, சென்னையில் எங்கெல்லாம் சாலைகள் ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது என்று ஆய்வுகள் செய்து, அவற்றை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரோட்டோரத்தில் கூடுதல் இடங்களில் கடை வைத்திருந்தவர்கள், சாலையை அபகரித்து வீடு கட்டியிருந்தவர்களிடமிருந்து சாலையை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நேரம், ரேஸ்கோர்ஸ் சாலையில் மிக அதிக நெரிசல் நிலவுகிறது என்ற புகார் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமிக்கு வந்துகொண்டே இருந்தது. அதாவது, ரேஸ்கோர்ஸ் சாலை முன்புறம் உள்ள மடுவின்கரை, ஆதம்பாக்கம், ஆலந்தூர் செல்கின்ற சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது, இதனை சரிசெய்வதற்கு ஏதாவது முயற்சி எடுங்கள் என்று பலரும் கேட்டுக்கொண்டார்கள்.
அந்த இடத்தில் காலை தொடங்கி இரவு வரையிலும் கடுமையான நெரிசல் நிலவுவதை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இரவு 11.00 மணிக்கு மேல் அதே இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த நேரத்தில் ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே மக்களுக்குத் தொந்தரவு நேராது என்பதால் நள்ளிரவு மற்றும் அதிகாலை கள ஆய்வு மேற்கொள்வது மேயர் சைதை துரைசாமியின் நடைமுறை என்பதை ஏற்கெனவே இந்த தொடரில் பதிவு செய்திருக்கிறோம்.
தனக்கு வசதியான நேரத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும் வழக்கமான அரசியல்வாதியாக இருக்காமல், எந்த நேரத்தில் ஆய்வு மேற்கொண்டால் உண்மயான நோக்கம் நிறைவேறும் என்பதைக் கணக்கிட்டு இரவு 11 மணிக்கு மேலாக கள ஆய்வு மேற்கொண்டார். அந்த இடத்தில் முழுமையான ஆய்வு மேற்கொண்ட பிறகே, அந்த சாலை மேம்பாட்டுக்கு மாநகராட்சியினால் செய்யக்கூடியது எதுவுமே இல்லை என்பது புரிந்தது.
வேறு யாராவது ஒரு மேயர் என்றால் அப்படித்தான் முடிவுக்கு வந்திருப்பார்கள். ஆனால், சைதை துரைசாமி, எப்படியும் இந்த இடத்தின் நெரிசலைக் குறைத்தே தீரவேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்தார். அதற்கு ஒரு வழியும் கண்டுபிடித்தார்.
- நாளை பார்க்கலாம்.