இந்திய வாக்காளர்கள் முட்டாள் இல்லீங்க

Image
  • ஜனநாயக காவலர்களுக்கு சல்யூட்

ராமர் பேரைச் சொல்லி எளிதாக வென்றுவிட முடியும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைக் காட்டினால் இந்துக்கள் ஒன்றாக நின்று ஓட்டுப் போடுவார்கள், வட இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதால் அவர்கள் பா.ஜ.க. என்ன சொன்னாலும் நம்புவார்கள் என்றெல்லாம் இத்தனை நாட்களும் சொல்லப்பட்டு வந்தன.

அவை உண்மை என்பது போல் வட மாநிலங்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெல்லவும் செய்தது. இதை மனதில் வைத்துத் தான் வட இந்தியாவுக்கும் தென்னிந்தாவுக்கும் மோதல் உண்டாக்கும் வகையிலும் பிரசாரங்கள் நடந்தன.

ஆனால், இந்திய வாக்காளர்கள் முட்டாள்கள் அல்ல, போலி பிரசாரங்கள், விளம்பரங்கள், பொய்யான வாக்குறுதிகள் என்னவென்று அறிந்துகொள்ளும் அளவுக்கு திறமையாகவே இருக்கிறார்கள். அதனாலே, இந்திய அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்று யாரும் இருக்க முடியாது என்பதை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அட்டகாசமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

400 தொகுதிகளில் வெல்லப் போகிறோம் என்று தேர்தலுக்கு முன்னரே வெற்றிப் பேரணிக்கு அச்சாரம் போட்ட நரேந்திர மோடிக்கு பலமான கடிவாளம் போடப்பட்டிருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. மட்டுமின்றி நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என்று சகல துறைகளையும் கைகளில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்துப் போட்டு பாரதிய ஜனதாக் கட்சி தேர்தலை சந்தித்தது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

தேர்தல் பரப்புரையில் மத துவேஷத்தைத் தூண்டியதுடன் நில்லாமல் தான் ஒரு தெய்வப் பிறவி என்றும் தைரியமாகப் பேசினார் பிரதமர் மோடி. பிரசார கெடு முடிந்த பிறகும் தியானம் இருப்பதாகச் சொல்லி டிராமா நடத்திக் காட்டினார். ஆனால், ஜனநாயகத்தில் எதுவும் செல்லுபடியாகவில்லை.

மக்களே ஜனநாயகத்தின் அளப்பரிய சக்தி. அவர்களால் எதையும் மாற்ற முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டிவிட்டனர். மோடி இப்போது மீண்டும் பிரதமர் பதவியில் அமரப்போகிறார் என்றாலும் அவர் பல் பிடுங்கப்பட்ட ஒரு பாம்புக்கு சமம். கூட்டத்தினருக்கு வேடிக்கை காட்ட மட்டுமே அந்த பாம்பு பயன்படும்.

அந்த பாம்பு இனிமேல் யாரையும் கொத்திவிடும் அளவுக்கு விஷம் இல்லை. அந்த விஷப்பல்லை வாக்காளர்கள் பிடுங்கிவிட்டார்கள். இது மோடிக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று ரகசியமாக திட்டம் போடும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொருந்தும்.

இந்த முறை மீண்டும் பா.ஜ.க. முழு அதிகாரத்துடன் ஆட்சிக்கு வந்திருந்தால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நிறைவேறியிருக்கும். அதன் மூலம் நாட்டில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு குறைந்து போயிருக்கும். அதனை தடுத்து நிறுத்தியது சாதாரண வாக்காளர்கள். அதுவும் போதிய கல்வியும் மருத்துவமும் கிடைக்காத வட மாநில வாக்காளர்கள்.

ஜனநாயக காவலர்களுக்கு ஒரு சல்யூட்.

Leave a Comment