என்ன செய்தார் சைதை துரைசாமி – 241
வாகனவோட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் சாலையில் உரிமை உண்டு என்பதை அனைவரும் உணரும் வகையில் மேம்பட்ட ரோடுகளை அமைக்கும் முயற்சியில் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி இறங்கினார். வெளிநாடுகளைப் போன்று பாதுகாப்பான நடைபாதையும் எளிமையான கிராஸிங்களும் அமைப்பதற்கு ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் தான் மத்திய அரசு இயந்திர வாகனம் சாரா போக்குவரத்துக் கொள்கையை அறிமுகம் செய்தது.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வாகனக் கொள்கையைப் படித்துப் பார்த்த மேயர் சைதை துரைசாமி ஆச்சர்யமானார். ஏனென்றால், அவர் செய்ய விரும்பிய அனைத்து மாற்றங்களும் அந்த கொள்கையில் இருந்தன. ஆகவே, முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி பெற்று, இயந்திர வாகனம் சாரா போக்குவரத்துக் கொள்கையை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, பாதசாரிகளின் நலனுக்காக நடைபாதைகளை உலகத்தரத்திற்கு இணையாக 5 அடியில் இருந்து 10 அடியாக அகலப்படுத்தும் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாதசாரிகளின் சாலை உரிமைகளை உறுதி செய்யும் பொருட்டு, குறிப்பாக முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 34 பேருந்து தடச் சாலைகளில் நடைபாதை மேம்பாட்டு பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில், அனைத்து பேருந்து சாலைகளிலும் கிரானைட் கற்கள் கொண்டு, உலகத்தரத்தில் நடைமேடைகள் அமைக்கப்பட்டன. பெருநகர சென்னையில் முதன்முறையாக எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், வீல் சேர்கள் வந்துசெல்வதற்கு வசதியாக சாலைகள் அமைக்கப்பட்டன.
இண்டியன் ரோட்ஸ் காங்கிரஸ் எனப்படும் ஐ.ஆர்.சி. வழிகாட்டுதல்படி, சாலையின் முழு நீளமும் சம உயரத்தில் அமைந்திருக்கும்படி 15 செ.மீ. மட்டத்தில் அமைக்கப்பட்டன. சாலைகளின் சந்திப்புக்களிலும், இதே அளவில் டேபிள் டாப் முறையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, அவை வேகத் தடைகளாகவும் பயன்படுத்தப்பட்டன. இந்த நேரத்தில் மேயர் சைதை துரைசாமிக்கு சவாலான ஒரு பிரச்னை எழுந்தது.
– நாளை பார்க்கலாம்.