பெண்களுக்கு எந்த மதத்தில் மதிப்பு அதிகம்..?

Image

அதிர்ச்சி தரும் உண்மைகள்

இந்த உலகில் உள்ள அத்தனை மதங்களும் ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட மதம் என்பதே உண்மை. அதனாலே, அத்தனை மதங்களிலும் பெண்ணுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் தரப்படுவதில்லை.

பெண்ணை தெய்வம், தேவதை என்று கொண்டாடுவது எல்லாம் அவள் உண்மையாகவும், அடிமையாகவும் இருக்கும் வரை மட்டுமே. எதிர்த்துப் பேசினால் அல்லது உரிமைகளைக் கேட்டால் அவளை துஷ்ட சக்தி என்றும் தீய சக்தி என்றும் ஒதுக்கிவிடுவார்கள். இந்த நிலையில் ஸ்ரீதர் சுப்ரமணியம் என்பவர் மதங்களில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பு பற்றி கூறியிருக்கிறார்.

இந்து மத நூல்கள் பெண்கள் குறித்து எழுதி இருக்கும் விஷயங்கள் அவலமானவை. கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பெண் ஒடுக்குமுறையில் உலகிலேயே நம்பர் ஒன் ஆக இயங்கிய மதம் அது. இந்து மத நியமங்களுக்கு எதிராகப் போராடிதான் உடன்கட்டை ஒழிப்பு, சிறார் மணம் ஒழிப்பு, மணமுறிவு உரிமை, கல்வி உரிமை, என்று பல்வேறு பெண்ணிய விஷயங்கள் இங்கே சாதிக்கப்பட்டது. சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டையும் ஒரிஜினல் மொழிபெயர்ப்பில் படித்து விட்டு தன்னைப் பற்றி பெருமிதமாக உணர முடியாது. ஏதாவது ஒரு பெண் தப்பித்தவறி தர்ம சாஸ்திரங்களை படித்து விட்டால் மன அழுத்தத்தில் ஆஸ்பத்திரி போக வேண்டி இருக்கும். உலகில் எந்த சமூகமும் ஸ்கேன் செய்து பெண்ணைக் கருவிலேயே கலைத்துப் போடும் கேவலமான விஷயத்தை செய்வதில்லை. அதை இன்று வரை செய்து வருவது புண்ணிய பாரத பூமிதான்!

கிறித்துவம் பெண்களுக்கு எதிரான தனது அடக்குமுறையை பைபிளின் முதல் அத்தியாயத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. தனது சொல் பேச்சை மீறிய ஏவாளுக்கு தண்டனை கொடுக்கிறேன் பேர்வழி என்று கடவுள் அவளுக்கும் அவளுக்குப் பின் உலகில் வரும் அனைத்துப் பெண்களுக்கும் சேர்த்தே தண்டனை கொடுக்கிறான். ‘உனக்கு மாதா மாதம் மாதவிடாய் வரும்; உனக்கு குழந்தைப் பேறு மிகவும் வலி மிக்கதாய் இருக்கும் பார்!’ என்று சாபம் விடுகிறான். அதில் ஆரம்பிக்கும் பெண் ஒடுக்குமுறை பைபிள் முழுக்க பிரதிபலிக்கிறது. ‘கணவனுக்கு அடங்கி அடிமை போல வாழ்வாயாக!’ என்பதுதான் பைபிளின் கடவுள் பெண்களுக்கு கொடுத்திருக்கும் ஆணை.

குர்ஆனில் சொல் பேச்சு கேட்காத மனைவியை அடிக்கும் அனுமதியை இறைவனே கணவனுக்கு வழங்குகிறான். ‘பெண்களுக்கு அறிவு கம்மி,’ என்று ஹதீஸில் நபிகள் அறிவிக்கிறார்! [1] ‘நான் நரகத்தை எட்டிப் பார்த்ததில் அங்கே பெரும்பாலும் பெண்களே இருப்பதைக் கண்டேன்!’ என்று சொல்கிறார். பெண்களின் கற்பு பற்றிய பயம் இஸ்லாத்துக்கு இருந்தது போல வேறு எந்த மதத்துக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. விளைவு, தலை முதல் கால்விரல் வரை கறுப்பு துணிச்சிறையில் பெண்களை அடைத்து வைக்கும் டெக்னிக்கை இன்றளவும் பின்பற்றுவது இந்த மதம்தான்.

இன்று வரை கூட பெண்கள் வாழ்வியலை மேம்படுத்தும் சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்த இயலாமல் தடுத்து நிற்பது மதங்கள்தான். ஐரோப்பா, அமெரிக்காவில் கருத்தடை உரிமையை பெண்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முண்டி அடிப்பது கிறித்துவ இயக்கங்கள்தான். ஷா பானோ வழக்கில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சட்டமியற்றி சுப்ரீம் கோர்ட் தீரப்பையே மறுதலிக்கும் அளவுக்கு இந்திய அரசு போனதற்கு முஸ்லிம் முல்லாக்களின் போராட்டங்கள் மற்றும் பிடிவாதம் காரணம்.

2024ல் கூட துணிச்சிறை என்பது எவ்வளவு கேவலமான, கீழ்த்தரமான விஷயம் என்பது கூட அந்த மதத்தின் பாதி ஆண்களுக்குப் புரியவில்லை என்பது அவர்கள் தவறல்ல. அந்த மத நியமங்களின் தவறு. இந்து மதத்தில் இன்றளவும் பெண்களுக்கு எதிராக நிலவும் அடக்குமுறைகள்தான் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்து நிற்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இன்று பெண்கள் புரியும் சாதனைகளில் ஒன்றுக்குக் கூட எந்த உலக மதமும் கிரெடிட் எடுத்துக் கொள்ள முடியாது. கூடவும் கூடாது. மகளிர் தினத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அன்றைக்கு மட்டுமாவது வாயை மூடிப் பேசாமல் அமைதியாக இருங்கள். அதுதான் பெண்களுக்கு நீங்கள் செய்யும் ஆகப்பெரிய சேவை…’ என்கிறார்.

உண்மை.

Leave a Comment