கண் விழித்தால் முடி உதிரும்

Image

ஹோமியோபதி டாக்டர் எஸ்.கே.ராமசுப்பிரமணியம்

காய்ச்சல் என்று வருபவர்களுக்கு ஒரே வகை மாத்திரை வழங்குவது அலோபதி மருத்துவம். அதில் குணம் அடையவில்லை என்றால், தக்க பரிசோதனை செய்து வேறு மருந்துகள் வழங்கி நோயைத் தீர்ப்பார்கள். ஆனால், ஹோமியோபதி மருத்துவத்தில் ஒற்றைப் பொது மருந்து கிடையாது. ஒவ்வொரு நபருக்கும் அவரது நோயின் தன்மை கண்டறிந்து ஆரம்பகட்டத்திலேயே மருந்து வழங்கப்படுகிறது.

இது, ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹனிமன், 1796ம் ஆண்டு கண்டுபிடித்த மருத்துவ முறை. எது நோயைக் கொடுத்ததோ, அதைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்பதே ஹோமியோபதியின் அடிப்படைத் தத்துவம்.  

அலோபதி மருந்து சாப்பிடுபவர்கள் என்றாலும் தோல் தொடர்பான நோய்கள், முடி கொட்டுதல் என்றால் நம்பிக்கையுடன் ஹோமியோபதியைத் தேடி வருகிறார்கள். அதுவும் தோல் நோய்க்கு பல க்ரீம்கள் பயன்படுத்தி பலனளிக்காத பட்சத்தில் ஹோமியோபதியைத் தேடி வந்து குணம் பெறுகிறார்கள்.

தோல் நோய்கள் என்பவை வெளிக் காயங்கள் மட்டும் அல்ல. உடலின் உட் புறத்தில் உள்ள ஏதோ ஒரு பாதிப்பே சரும நோய்க்குக் காரணமாக உள்ளது. எனவே. உடலின் உட்பகுதிகளுக்கும், சரும நோய் தோன்றிய வெளிப்பகுதிக்கும் கண்டிப்பாக நெருக்கமான தொடர்பு இருக்கும். உடலின் உட் புறத்தில் நோய் இல்லாமல் வெளியில் மட்டும் பிரச்னை தோன்றாது. எனவே, தோலில் என்ன பாதிப்பு என்பதை நன்கு கவனித்து உள்ளே இருக்கும் நோய்க்கு மருந்துகள் கொடுப்பதற்கு ஹோமியோபதியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக பரு, மருக்கள், சுருக்கம், கால் ஆணி, அக்கி, படை, சிரங்கு போன்ற திடீர் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஒரே நேரத்தில் வெளியில் பூசுவதற்கும் உள்ளே எடுத்துக்கொள்வதற்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தோல் நோய்களுக்கு வெளியே மட்டும் க்ரீம் பூசுவதால் வெளி நோய் மட்டும் குணமடைய வாய்ப்பு உண்டு. ஆனால், உடலின் உள்ளே இருக்கும் நோய் தொடர்ந்து வளர்ச்சியடைந்து நரம்புகளைப் பாதித்துவிடலாம். ஆகவே, ஒவ்வொரு நோய்க் குறிகளும் தெளிவாக ஆய்வு செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது.

ஆங்கில மருத்துவத்தில் வெளிப்புறப் பூச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மீண்டும் மீண்டும் அதே பிரச்னைக்காக மருத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனாலே ஹோமியோபதிக்கு மாறுகிறார்கள்.

சருமப் பிரச்னை போலவே இப்போது நிறைய பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்னையாக முடி கொட்டுதல் மாறியிருக்கிறது. இளம் வயதிலேயே பலரும் முடி உதிர்வை சந்திக்கின்றனர். பொதுவாக, ஒரு நாளைக்கு 100 முடி உதிர்வது இயல்பான விஷயமே. இதற்கு கவலைப்பட அவசியம் இல்லை. ஆனால், கொத்தாக முடி கொட்டுவது, சீவும் நேரத்தில் எல்லாம் முடி கொட்டுவது, ஏதேனும் ஒரு இடத்தில் முடி வளராமல் போவது போன்ற எல்லாமே சிக்கலான பிரச்னை.

முடி உதிர்தல் தொடர்ந்து நடக்கிறது என்றால் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டியது அவசியம். உணவுமுறைகள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், முடி ஸ்டைலிங் போன்ற பல காரணிகளால் முடி உதிர்வதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் சிலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வுக்கு மரபியல் பண்புகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிலருக்கு மரபணுக் குறைபாடுகள், ஜெனடிக் பிரச்னைகள் போன்றவையும் முடி உதிர்தலுக்குக் காரணமாகலாம்.

பெண்களுக்குத் தலைமுடி உதிர்தலுக்கு ஹார்மோன் மாற்றம் ஒரு முக்கிய காரணமாகும். ஹார்மோனின் சுரப்பு விகிதம் பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை கொடுத்து முடி உதிர்தலை நிறுத்திவிட முடியும். அதேபோல், மன அழுத்தம், உணர்ச்சிக் கொந்தளிப்பு போன்ற காரணங்களாலும் முடி திடீரென கொட்டுவது உண்டு.

நிறைய பேருக்கு டென்ஷன் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல் இரவு நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் இரவு தொலைக்காட்சி, செல்போனில் பொழுது போக்குபவர்களுக்கும் முடி உதிர்தல் அதிகம் ஏற்படுகிறது. தூங்கும்போது உடலுக்குப் போதிய ஓய்வு கிடைக்கிறது. உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தவும், சேதமடைந்த திசுக்களை குணப்படுத்தவும் சரிசெய்யவும் போதிய அளவு தூக்கம் அவசியம். இரவு அதிக நேரம் கண் விழிப்பது உடலையும் மூளையையும் தேக்கமடையச் செய்கிறது. இது முடி உதிர்வதற்கு முக்கியக் காரணியாக மாறிவிடுகிறது.

உடலின் இயற்கையான வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றாலும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். முடி இழைகளை வளர்ப்பதில் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, ஃபோலிக் அமிலம், பயோட்டின் மற்றும் பல தாதுக்கள் போன்ற வைட்டமின்கள் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டிவிட்டு முடி உதிர்வைத் தடுத்துவிட முடியும்.

இப்போது விதவிதமான முடி அலங்காரம் செய்வது சிலருக்கு ஸ்டைலாக இருக்கிறது. இதற்காக கலரிங் செய்துகொள்வதும், முடியின் தன்மையைப் பாதித்து உதிர்தலுக்கு வழி வகுக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் முடி உதிர்தலுக்கான காரணங்கள் வெவ்வேறாகவே இருக்கின்றன. ஆகவே, முடி உதிர்தலின் காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக வலுவிழந்த மயிர்க் கால்கள் வழியாகச் சென்று ஒவ்வொரு அணுவின் வளர்ச்சியையும் தூண்டிவிடும் மருந்துகள் ஹோமியோபதியில் இருக்கின்றன. ஒரு சிலருக்கு சீரம் தேவைப்படலாம்.

ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது என்பதால் வேறு எந்த நோய்க்கும் இந்த மருந்துகள் வழிவகுப்பதில்லை. ஹோமியோபதி  மருந்துடன் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது.

முடி உதிர்தல் பிரச்னையை எதிர்கொள்பவர்கள் இனிப்பு, கொழுப்பு நிறைந்த பொருட்களைத் தவிர்த்துவிட்டு நார்ச்சத்து நிறைந்த உணவையும் புரதம் நிரம்பிய உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு நல்ல தூக்கம் அவசியம். தினமும் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதும் முக்கியம்.  

அதிகாலையில் வேகமாக எழும் பழக்கத்தை வைத்துக்கொண்டால், வேகவேகமாகவும் டென்ஷனாகவும் எந்த வேலையையும் செய்ய வேண்டிய அவசியம் இராது. எனவே, முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் இரவு நீண்ட நேரம் கண் விழிக்காமல் சீக்கிரம் தூங்கச் செல்வது அவசியம். தூக்கமே உடல் அணுக்கள் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதோடு ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடத் தொடங்கினால் முடி உதிர்தல் பிரச்னை தீர்வதுடன் மேகம் போன்ற கூந்தல் வளர்ச்சியும் கிடைக்கும்.

தொடர்புக்கு : 9841108754

Leave a Comment