எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங்
திருமணத்தை முடிவு செய்வதில் அழகு எத்தனை முக்கியத்துவம் வகிக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு கவுன்சிலிங் கதை.
மனோகரனை அழைத்துக்கொண்டு அவரது அம்மாவும், அப்பாவும் வந்தார்கள். மனோகரனை மாநிறம் என்றும் சொல்லலாம், கருப்பு என்றும் சொல்லலாம். அவர் முகத்தில் நிறைய குழப்பம் இருந்தது. மனோகரனின் அப்பா பேச்சைத் தொடங்கினார்.
‘’எங்களுக்கு கோவில்பட்டி சொந்த ஊர். வேலை பார்க்கிற பொண்ணு வேண்டாம், கொஞ்சம் படிச்ச பொண்ணு பாருங்க. வீட்ல இருந்து பொறுப்பா பார்த்துக்கிட்டா போதும்னு சொல்லியிருந்தான். நிறைய பொண்ணுங்க பார்த்துட்டோம். அதுல ரெண்டு பொண்ணுங்க பிடிச்சுருக்குன்னு சொல்றான். யாராவது ஒரு பொண்ணை முடிவு செய்யச் சொன்னா, யோசிக்கிறேன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறான்’’ என்றார்கள்.
‘’எத்தனை நாளாக யோசிக்கிறார்..?’’
‘’எத்தனை நாளா… மூணு மாசமா யோசிக்கிறான். ரெண்டு பொண்ணு வீட்லேயும் சீக்கிரம் முடிவு சொல்லுங்கன்னு ரொம்பவும் டென்ஷன் ஆகுறாங்க, இவன் முடிவு செய்ய முடியாம தவிக்கிறான், அதான் கூட்டிட்டு வந்தோம்’’ என்றார்கள். மனோகரன் அமைதியாகவே இருந்தான்.
‘’கவுன்சிலிங் வரணும்னு யார் முடிவு எடுத்தது..?’’
இப்போதும் மனோகரனின் அப்பாவே பேசினார். ‘’நான் தான். உங்களைப் பத்தி நண்பர் சொல்லியிருந்தார், அதான் கூட்டி வந்தேன்’’ என்றார். மனோகரன் வாயைத் திறந்து எதுவும் பேசுவதாகத் தெரியவில்லை என்றதும், அவரது பெற்றோர்களை வெளியே அனுப்பிவிட்டு மனோகரனிடம் பேசினேன்.
‘’என்ன பிரச்னை..?’’
‘’என்னால ஒரு முடிவு எடுக்க முடியலை…’’
‘’அப்படின்னா அப்பா, அம்மா என்ன சொல்றாங்கன்னு கேட்டு, அந்த முடிவு எடுக்கலாமே..?’’
‘’அவங்களுக்கு மரகதத்தைப் பிடிச்சிருக்கு. ஆனால், என்னால முழுசா ஏத்துக்க முடியலை… நிறம் கம்மி’’
‘’ரொம்பவும் கருப்பா இருக்காங்களா..?’’
‘’என் அளவுக்குக் கருப்பா இருக்காங்க. நாளைக்கு எங்களுக்குக் குழந்தை பிறந்தா கண்டிப்பா கருப்பாத்தான் இருக்கும். ஆம்பிளைப் பிள்ளைன்னா கூட பரவாயில்லை, பொம்பளப் பிள்ளை ரொம்ப கஷ்டப்படும். அதனால பிரபாவை எனக்குப் பிடிச்சுருக்கு… அவங்க கொஞ்சம் வெள்ளை, அழகாவும் இருக்காங்க’’
’’பின்ன என்ன பிரச்னை..? அவங்களையே முடிச்சுக்கோங்க…’’
‘’நான் ரெண்டு பேர் கிட்டேயும் கொஞ்ச நேரம் தனியா பேசினேன். அதுல மரகதம் ரொம்பவும் தன்மையா பேசுனாங்க. பிரபா என்னை பெருசா கண்டுக்கல, அதான் எனக்கு கொஞ்சம் உறுத்தலா இருக்குது…’’
‘’அப்படின்னா, உங்களுக்கும் மரகதத்தைப் பிடிச்சுருக்கு. அவங்க நிறம் மட்டும் தான் பிரச்னை. அப்படித்தானே…?’’
‘’ம்… ஆனா, பிரபா கொஞ்சம் வசதியானவங்க. நாளைக்கு ஏதாச்சும் உதவின்னா அவங்க வீட்ல ஹெல்ப் பண்ணுவாங்க…’’
‘’இப்படி குழப்பம் இருந்தா என்ன அர்த்தம்னு தெரியுமா?’’
என்னவென்று கேட்பது போல் பார்த்தார். ‘’இத்தனை குழப்பம் இருந்தால் வேண்டாம் என்று அர்த்தம். இரண்டு பேரும் வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணைத் தேடுங்கள். இந்த குழப்பத்துடன் எந்த பெண்ணை திருமணம் முடித்தாலும், ஏதேனும் ஒரு சமயத்தில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்றே தோன்றும்’’ என்றதும் அமைதியாக இருந்தார்.
‘’நீங்க யாராவது ஒருவரை தேர்வு செய்வதற்கு வழி காட்டுவீங்கன்னு சொல்லித்தான் அப்பா கூட்டிட்டு வந்தார்…’’
‘’உங்களுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு நான் உதவி வேண்டுமானால் செய்யலாம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்…’’ என்றதும் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார்.
‘’திருமணம் என்ற உறவு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அழகான பெண் என்றால் வெளியே அழைத்துச் செல்லும்போது பெருமையாக இருக்கும், படுக்கை அறையில் மகிழ்ச்சியாக இருக்கும். அழகில்லாத பெண் எத்தனை நல்ல மனைவியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்காது என்று நினைக்கிறேன், இது சரியா..?’’
‘’அழகு என்பது குறித்து மட்டும் பேசுகிறேன். அழகு என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே இருக்கிறது. உங்களுக்கு உங்கள் அப்பா, அம்மாவை எத்தனை தூரம் பிடிக்கும்…’’
‘’இருவரையும் ரொம்பவும் பிடிக்கும்… அவர்களுக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும்’’
‘’என்றாவது உங்கள் அம்மா அல்லது அப்பா அழகாக இருந்திருக்கலாம் என்று நினைத்திருக்கிறீர்களா அல்லது நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறமாக, அழகாகப் பிறந்திருக்கலாம் என்று உங்கள் பெற்றோர் கருதியிருக்கிறார்களா..?’’ என்று கேட்டதும் யோசித்தார்.
‘’அவங்களை நான் அழகுங்கிற கண்ணோட்டத்துல பார்த்ததே இல்லை, நீங்க சொன்ன பிறகு தான் யோசிக்கிறேன். அவங்களை நான் அப்படி பார்க்கலை, அவங்களும் என்னை அப்படி பார்த்ததில்லை…
’’உறவுக்குள் நுழையும் வரை மட்டுமே அழகு என்பது செல்லுபடியாகும். அதன் பிறகு அங்கே அழகுக்கு வேலை இல்லை. நயன்தாரா பேரழகியாக இருந்தாலும், அவரது கணவரின் கண்களுக்கு அவர் அழகியாகத் தெரியமாட்டார். மனைவியாக மட்டுமே தெரிவார். அதே போன்று விளக்கை அணைத்துவிட்டால் எல்லோரும் உலக அழகிகள், எல்லோரும் உலக அழகன்கள். பாலியல் உறவுக்கும் அழகு தேவைப்படாது. அங்கே உடல்கள் மட்டும் போதும். ஏனென்றால் பாலியல் இன்பம் என்பது அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். அதன் பிறகு இரண்டு பேரும் நிஜ உலகத்தில் தான் வாழ வேண்டும்…’’
‘’அப்படி என்றால் அழகு தேவையில்லை என்கிறீர்களா..?’’
‘’அது உங்கள் கண்ணோட்டத்தையும் முன்னுரிமையையும் பொறுத்தது. உங்களுக்குப் பிடித்த கலரில் ஆடை எடுக்கிறீர்கள். ஆனால், அந்த ஆடையை நீங்கள் பார்ப்பதை விட மற்றவர்களே அதிகம் பார்க்கிறார்கள். புதிதாக அந்த சட்டையை அணியும்போது உங்களுக்கு அந்த சட்டையின் மீது ஆர்வம் இருக்கும். அடுத்தடுத்து அணிகையில், அதையும் மற்ற சட்டைகளில் ஒன்றாகவே பார்ப்பீர்கள்.
எத்தனை அழகான பெண் என்றாலும் ஒரு நோய் பாதிக்கும்போது அவரது பொலிவு காணாமல் போய்விடும். வயதான பிறகு அந்த அழகு காணாமல் போய்விடும். அழகுக்காக பாராட்டப்பட்ட பழைய காலத்து சினிமா நடிகைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்துவிடும். அழகு என்பது நிரந்தரமில்லை. அதேநேரம், அழகாக தன்னை வைத்திருக்கத் தெரிந்த பெண் பாராட்டத்தக்கவள். தன்னை நேசிக்கும் ஒரு பெண்ணாலே தன் அழகை பாதுகாக்கவும், பராமரிக்கவும் முடியும். எனவே, அழகு உங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்…’’
‘’மீண்டும் மீண்டும் குழப்புகிறீர்கள்..’’
‘’உங்கள் அம்மாவும் அப்பாவும் அழகைப் பார்த்து திருமணம் செய்தார்களா…?’’
‘’அவர்கள் இருவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதோடு தாத்தா சொன்ன காரணத்துக்காக அம்மாவை அப்பா கட்டிக்கொண்டார். காலம் முழுக்க வைத்து காப்பாற்றுகிறார். அம்மாவும் அவருக்கு ஓயாமல் பணிவிடை செய்கிறார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. எனக்கு எல்லா வகையிலும் பிடித்த பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன். இருவரையும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்…’’
‘’அது உங்களுடைய விருப்பம். திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லி பிறரை காக்க வைப்பதை விட வேண்டாம் என்று சொல்லிவிடுவது மிகவும் நல்லது. அதேநேரம், ஒரே ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எல்லா வகையிலும் மிகச்சரியான ஆண் என்று நினைக்கிறீர்களா..? யாரும் உங்களை நிராகரிக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறீர்களா..?’’
‘’என்னிடம் நிறைய குறை இருக்கிறது. எனக்கு நிறம் மீது தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. ஒரு முடிவு எடுப்பதற்கு ரொம்பவும் யோசிக்கிறேன். எனக்கு என்ன பிடிக்கும் என்பதே எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் இங்கு வந்ததில் எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அழகு என்பது அத்தனை முக்கியம் இல்லை. அதேநேரம், மனதுக்குப் பிடிக்காத ஒன்றை செய்யக்கூடாது என்பதும் புரிந்துவிட்டது. எனவே, இனி தெளிவாக இருப்பேன். தேவையில்லாமல் யாரையும் என் முடிவுக்காக காக்க வைக்க மாட்டேன்’’ என்று எழுந்தார்.
’’நல்ல முடிவு. நீங்கள் யாரை திருமணம் செய்தாலும் அவர்களை அழகாகப் பார்க்க முடியும். அது உங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே இருக்கிறது. இந்த உலகத்தில் அழகு இல்லாத ஒரு பொருள் என்று எதுவும் படைக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்களும் அழகு தான். உங்கள் நிறம் அழகானது என்ற தன்னம்பிக்கையுடன் இருங்கள். திருமணம் என்பது நீண்ட கால பந்தம். ஆகவே, முழு மனதுடன் யாரைப் பிடிக்கிறதோ, அவரையே திருமணம் செய்துகொள்ளுங்கள்’’ என்று சொல்லி அனுப்பினேன்.
அடுத்த சில நாட்களில் மனோகரன் பிரபாவை திருமணம் செய்வதற்கு ஒப்புக்கொண்ட தகவல் கிடைத்தது. அழகை தேர்வு செய்துவிட்டார். அவர் வாழ்க்கை என்பதால் அவருக்கு அதற்கான முழு உரிமை இருக்கிறது.