செல்போனை புடுங்கினா ஓடிப் போயிடுவேன்….

Image

மிரட்டும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்

டாக்டர் ஆர். பரமேஸ்வரன், உளவியல் நிபுணர்.

பிள்ளைகளை படிக்க விடாமல் தடுக்கும் வீடியோ கேம்கள், அவர்களை ஒரு மோசமான மாய உலகத்தில் தள்ளிவிடுகிறது. திக்குத்தெரியாத காட்டில் திரியும் மீட்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.

செல்போன்களால் 100 நன்மைகள் இருக்கின்றன என்று மகிழ்ச்சி அடைந்தால், ஆயிரம் ஆயிரம் கெடுதல்கள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளும்போது அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நஞ்சாக, கொடிய விஷமாக இளம் சிறார்களோடு கலந்து சிதைத்துக் கொண்டிருக்கிறது இந்த செல்போன் வழியாக பரவும் வீடியோ கேம்கள்.

வெளியில் தெரியாத கொடிய நஞ்சு போல வீடியோ கேம்ஸ் கலாச்சாரம் குழந்தைகள் நடுவில் இன்று பரவிக் கொண்டிருக்கிறது.

செல்போன் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால்… தற்கொலை என்று சிறுவர்கள் மிரட்டும் நிலை வந்து விட்டது. வீடியோ கேமை ஒருமுறை ஆடி பழகிவிட்டால் ஒருபோதும் அந்த குழந்தைகளால் நிறுத்த முடியாத அளவுக்கு போதை தருகின்ற கொடூர சாதனமாக மாறிவிட்டன.

10 மணி நேரம்,12 மணி நேரம்,18 மணி நேரம் கூட வீடியோ கேம் விளையாட சிறுவர்கள் பழகிவிட்டார்கள். உணவு தேவையில்லை, குளியல் தேவை இல்லை, கழிவறைக்கு கூட போகிற ஆர்வம் இருக்காது. பெற்றோர் இருவருமே பணிக்கு சென்று வருகின்ற குடும்பங்களில், குழந்தைகள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பள்ளிக்கு விடுப்பு எடுத்து, வீட்டில் தங்கி,மணிக் கணக்கில் இந்த வீடியோ கேம் கலாச்சாரத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள்.

இந்த கொடூர விளையாட்டு ஒருவர் மட்டும் தனியாக விளையாடுவது அல்ல. இந்த சைபர் உலகில் ஒருவரோடு வீடியோ கேம் விளையாடுபவர் வேறு ஊரில் இருக்கலாம், வேறு நாட்டில் இருக்கலாம், வேறு கண்டத்தில் கூட இருக்கலாம், அவரை நேரில் பார்க்க வேண்டியது இல்லை அவர் சத்தம் போடாமல் மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டே இருப்பார். அவர் ஒரு ரோபாட்டாகவும் இருக்கலாம். செயற்கை நுண்ணறிவு உருவாக்கிக் கொடுத்த போலி ஐடியாகவும் இருக்கலாம்.

பரவும் வெறுப்புணர்வு

இந்த வீடியோ கேம்கள் ஒவ்வொன்றும் பல வகையான வன்முறைகளை உள்ளடக்கிய கதைப்போக்குகளை கொண்டுள்ளன. மலைவாழ் மக்கள் விபரீத வில்லன்களாகவும் அறிவார்த்தமான பெண் குழந்தைகள் சமூகத்தில் இருந்து விட விரட்டப்பட வேண்டியவர்களாகவும், விதவிதமான துப்பாக்கிகளை கையில் ஏந்தி கொலை செய்வது அன்றாட வாழ்வில் சகஜமான வேலையாகவும் சித்தரிக்கப்படும் வீடியோ கேம்கள் குழந்தைகளால் அதிகம் போற்றப்படுகின்றன என்பதுதான் மிகவும் அச்சமூட்டும் தகவல்.

சமீபத்தில் மதுரையில் தொடர்ந்து 48 மணி நேரம் வீடியோ கேம் விளையாடியதன் மூலம் சிறுநீர் கூட கழிக்காமல், சிறுநீர்ப்பை ஏறக்குறைய வெடிக்கும் நிலையில் ஒரு ஏழாம் வகுப்பு சிறுவன் அவசர அறுவை சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டதை மருத்துவர்கள் பார்த்து பதறிப் போய் இருக்கிறார்கள். இது போன்ற செல்போன் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள், வீட்டுப்பாடம் எழுத மாட்டார்கள், தேர்வு எழுதுவதற்கும் அஞ்சுவார்கள். சாப்பிட மாட்டார்கள். மற்றவர்களோடு உரையாட மாட்டார்கள். தனிமையிலேயே இருக்க விரும்புவார்கள். குடும்பத்தில் எந்த நல்லது கெட்டதிலும் பங்கேற்க மாட்டார்கள். அய்யோ என்று நாம் அலறினாலும் என்னாச்சு என்று ஈவு இரக்கத்தோடு வந்து கேட்பதற்கு வாய்ப்பே இல்லை. வீடியோ கேம் விளையாட்டில் இறங்கி விட்டால்… இந்த உலகத்தையே மறந்து விடுவார்கள். அவர்களையே அழித்துக் கொள்வார்கள்.

இவர்களை எப்படி மீட்பது?

வீடியோ கேமுக்கு அடிமையான குழந்தைகளை மீட்பது ஒரே நாளில் நடக்கக்கூடிய காரியம் அல்ல. இந்த விவகாரத்தில் பெற்றோர் தலையீடு மிக மிக முக்கியம். இது போன்ற மாய வலைகளில் தங்கள் குழந்தைகள் சிக்கிக் கொண்டு இருக்கிறார்களா என்பதை முதலில் கண்டறிவது அவசியம். நமது குடும்பத்திற்காக நீ உழைக்க வேண்டும், நன்றாக படிக்க வேண்டும்… என்றெல்லாம் வெற்று வார்த்தைகளால் அறிவுரை சொன்னால் அதைக் கேட்கும் நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு கண்டிப்பாக மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. வெளியில் சொன்னால் சிக்கலாகிவிடும் என்று கருதும் பல பெற்றோர் உளவியல் சிகிச்சைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. நடத்தை மனநிலை சிகிச்சை என்பதே உடனடித் தேவை.

வீடியோ கேமுக்கு அடிமையான குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். உடனே செல்போனை பிடுங்கி ஒழுங்குபடுத்த நினைத்தால் விபரீதமான முடிவுகளை எடுக்கலாம். மனநல மருத்துவர்களின் உதவியை நாடலாம். குடும்ப மருத்துவர் உங்களுக்கு உதவுவார் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

Leave a Comment