• Home
  • பணம்
  • ரிஸ்க் எடுக்கலைன்னா ரஸ்க் கிடைக்காது.

ரிஸ்க் எடுக்கலைன்னா ரஸ்க் கிடைக்காது.

Image

பணமே மந்திரம்

பணம் முக்கியம். அதைவிட பணம் பற்றிய புரிதல் முக்கியம். பணம் எப்படி வருகிறது, எந்த வழியில் காணாமல் போகிறது என்பது நிறைய பேருக்குத் தெரிவதே இல்லை. அதனால் வியாபாரத்தில் கொழுத்த லாபம் கிடைக்கும்போது அது தன்னுடைய திறமையால் கிடைத்தது என்று நம்புகிறார்கள். எதிர்பாராமல் தோல்வி வந்துவிட்டால் சூழ்நிலை சரியில்லை, மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா?

திறமையால் மட்டுமே யாருக்கும் லாபம் கிடைப்பதில்லை. ஏனென்றால் திறமைசாலிகள் இந்த உலகில் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். கடுமையாக உழைப்பதாலும் பணம் வருவதில்லை. ஏனென்றால் கடுமையாக உழைப்பவர்கள் பெரும்பாலும் வறுமையில் தான் இருக்கிறது. சூழ்நிலை மற்றும் பலருடைய ஒத்துழைப்பு கிடைக்கும் நேரத்தில் அதீத லாபம் கிடைக்கிறது. இந்த ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் நஷ்டம் வருகிறது. அவ்வளவுதான்.

பணம் பற்றி புரிந்துகொள்வதற்கு சில முக்கியமான தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

  • பயம், எதிர்கால அச்சம் உள்ளவர்கள் பணத்தை செலவழிப்பதற்கு மட்டுமின்றி முதலீடு செய்வதற்கும் மிகுந்த தயக்கம் காட்டுகிறார்கள். இந்த அச்சமே அவர்களுக்கு நஷ்டத்தைக் கொண்டுவரலாம்.
  • சரியான நேரத்தில் சிறிய கடன் திருப்பிக் கொடுத்தால் பெரிய கடன் தானாகவே கிடைக்கும்.
  • மிகப்பெரும் லாபத்துக்கு ஒருபோதும் ஆசைப்படாதீர்கள். மிகப்பெரிய லாபத்துக்குப் பின்னே மிகப்பெரும் நஷ்டமும் கிடைக்கும். நிதானமாக, நியாயமான வளர்ச்சியே நிரந்தரமாக இருக்கும்.
  • நிதி பற்றிய அறிவு இருந்தாலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களால் பணம் சேமிக்க முடியாது. கணக்கு எழுதி வைக்காதவர்கள் மட்டுமே, எல்லா செலவும் தேவையான செலவு என்று கருதுகிறார்கள்.
  • அப்பா வங்கியைத் தவிர வேறு எதிலும் பணம் சேமிக்காதவராக இருக்கலாம். அதுதான் சரி என்று கிடையாது. பெற்றோர் சொல்லித்தந்த பணம் பற்றிய பாடத்தை விட்டு வெளியே வாருங்கள். அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப பணத்தைத் திட்டமிடுங்கள்.
  • புத்திசாலித்தனம், திறமை, மேதாவித்தனம் போன்ற பண்புகளுக்கும் பணத்துக்கும் பெரிய தொடர்பு கிடையாது. அதேநேரம், பணத்தின் மீதான ஆசை, ஆர்வம் மற்றும் அக்கறை உள்ளவர்களிடம் செல்வம் சேர்கிறது.
  • நிரந்தரமான மாத சம்பளத்துக்கு ஆசைப்படுபவர்களால் ஒருபோதும் கோடீஸ்வரராக மாற முடியாது. தொழில், வியாபாரம் என்று ரிஸ்க் எடுக்கும் தைரியசாலிகள் மட்டுமே லாபம் பார்க்கவும், கோடீஸ்வரர்களாக மாறவும் முடியும்.
  • மாத சம்பளத்துக்காரர்கள் உழைக்கும் 8 மணி நேரத்துக்கு மட்டுமே சம்பளம் பெற முடியும். அதிகம் உழைத்தாலும் குறைவாக உழைத்தாலும் சம்பளம் மாறப்போவதில்லை. தொழிலதிபர் ஒருவருக்காக நிறைய வேலையாட்கள் உழைக்கிறார்கள். எனவே குறைவான பணம் கொடுத்து உழைப்பை வாங்கிக்கொள்கிறார். அதிக விலைக்கு அந்த உழைப்பை விற்று லாபம் ஈட்டுகிறார். இதுவே பணம் சம்பாதிக்கும் எளிய வழி. மற்றவர்களை உங்களுக்காக உழைக்கச் செய்யுங்கள்.
  • எவ்வளவு செலவாகும் என்ற கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் மனநிலை உள்ளவரே உண்மையான செல்வந்தர்.
  • தன்னிடம் எத்தனை செல்வம் இருக்கிறது என்பதை மற்றவர்களிடம் காட்டுவதற்காக ஒருவர் செலவு செய்கிறார் என்றால், அவர் நஷ்டத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்.
  • எந்த நேரமும் செல்வம் தொலைந்துபோகலாம், ஏமாந்து போகலாம் என்று அச்சம் இருப்பது அவசியம். இந்த அச்சம் இருப்பவரே பணத்தை வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு முறைகளில் முதலீடு செய்கிறார்கள். இதன் மூலம் ஒரே நேரத்தில் பணம் தொலைந்துபோவதை தடுக்க முடியும்.
  • திட்டமிடுதல் என்பது பணம் சம்பாதிப்பதற்கு முக்கியமான ஒரு வழி. அதேநேரம், திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பதற்கும் ஒரு திட்டம் இருக்க வேண்டும். ஏனென்றால் நினைத்தபடி, திட்டமிட்ட வகையில் எல்லாம் நடக்கும் என்பது உறுதியில்லை.
  • எல்லாமே சரியாக இருந்தாலும் பணம் நஷ்டம் அடைவதற்கு கண்ணுக்குத் தெரியாத காரணங்கள் இருப்பதுண்டு. எனவே, எதிர்பாராததை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பவரே பணத்தை எட்டிப்பிடிக்க முடியும்.
  • அதிர்ஷ்டம், ஆபத்து இந்த இரண்டும் பணத்திற்கு இல்லை. ஆனால், மனிதர்கள் இவற்றினாலே பணம் வருவதாகவும் போவதாகவும் நினைக்கிறார்கள்.
  • நீண்ட கால முதலீடு நல்லது. அதேநேரம், உபரி பணத்தை மட்டுமே அதற்குப் பயன்படுத்த வேண்டும்.

செல்வந்தர் ஆக முடியும் என்று நம்புங்கள். செல்வந்தர் போலவே நடந்துகொள்ளுங்கள். பணம் தானே உங்களைத் தேடி வரும்.

Leave a Comment